அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, August 17, 2017

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்

ஆகஸ்ட் 18 : நற்செய்தி வாசகம்

உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், ``ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, ``படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?'' என்று கேட்டார். மேலும் அவர், ``இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, ``அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?'' என்றார்கள்.

அதற்கு அவர், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.

பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, ``கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது'' என்றார்கள்.

அதற்கு அவர், ``அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-----------------------------------------------------
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 18)

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்

சில ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஆண்டர்சன் மற்றும்  அவருடைய மனைவி பரஸ்பர விவாகரித்துக்கு நீதிமன்றத்தில்  விண்ணப்பித்திருந்தனர்.

அப்போது நீதிபதி ஆண்டர்சனிடம், “உங்கள் வயது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவரோ, “தொண்ணூற்று மூன்று” என்றார். “உங்கள் மனைவியின் வயது என்ன?” என்று நீதிபதி கேட்க, “தொண்ணூற்று ஒன்று” என்றார். “உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருடங்களாகிறது?” என்று நீதிபதி மீண்டுமாக அவரிடம் கேட்க, “அறுபத்தாறு வருடங்கள் ஆகின்றன” என்றார் ஆண்டர்சன். “இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் விவாகரத்து கூறுகிறீர்கள்?” என்று நீதிபதி கேட்க, அண்டர்சனோ மிகவும் சாதாரணமாக, “எங்கள் குழந்தைகள் இறப்பதற்குக் காத்திருந்தோம். யுவர் ஆனர்” என்றார். இதைக் கேட்ட நீதிபதி மயக்கம் போடாத குறைதான்.

தன்னுடைய கணவர்/மனைவி குறட்டை விட்டதற்கு எல்லாம் கோர்ட் வாசல் ஏறும் தம்பதியர் மலிந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் உண்மையாகவே அன்பு செய்து திருமண வாழ்வில் நிலைத்திருக்கும் தம்பதியினரைப் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இத்தகைய பின்னணியில் உண்மையான திருமண வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும்.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து, “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்கின்றனர். இயேசு பரிசேயர்களுக்கு என்ன பதில் தந்தார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக ‘விவாகரத்து/ மணவிலக்கு குறித்து யூதர்கள் என கோட்பாட்டைக் கொண்டிருந்தார் என்று தெரிந்துகொள்வோம். யூதர்கள் மணவிலக்கை வெறுத்தார்கள். ஏனென்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதனை வெறுத்தார் (மலா 2:16). அதனாலேயே அவர்கள் மணவிலக்கை வெறுத்தார்கள். மேலும் நடைமுறை வாழ்க்கையில் எப்படியோ விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகவும், மகப்பேறு இல்லாத தன்மைக்காகவும் அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் விவாகரத்து செய்துகொள்ளக்கூடாது என்று அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய கருத்துகளைப் பின்புலமாக வைத்துக்கொண்டு, இயேசு கூறுவதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பரிசேயர்கள் இயேசுவிடம், “மணவிலக்கு செய்வது முறையா?” என்று கேட்டதற்கு அவர், தொடக்க நூலிலிருந்து விளக்கம் தருகின்றார். அதாவது கடவுள் ஆணும் பெண்ணுமாக மனிதர்களைப் படைத்தார், அவர் இருவரும் ஒரே உடலாக வாழப் பணித்தார். எனவே எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பிரிந்திருப்பது முறையல்ல என்று அவர்களுக்கு அவர் எடுத்துரைக்கின்றார். இயேசு இவ்வாறு பதிலளித்ததைப் பார்த்த பரிசேயர்கள் அவரிடம், “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விளக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் அவ்வாறு செய்தார் என்று இயேசு அவர்களிடத்தில் பதிலளிக்கின்றார்.

இயேசுவின் – இறைவனின் - விருப்பமெல்லாம் கணவன் மனைவியாக இணைத்திருப்பதுதான். அதனால்தான் திருமணத்தின்போது, “இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் தயாராக இருக்கின்றேன்” என்று வாக்குறுதி தருகின்றார்கள். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

எழுத்தாளர் வெ. இறையன்பு சொல்வார், “எந்த இல்லத்தில் ஒருவருக்கு மற்றவர் சகாயமாக இருக்கின்றார்களோ, தோழமையுடன் நடந்துகொள்கிறார்களோ அங்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பரந்த மணமும் அடுத்தவர்களை அவர் தம் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் இருந்தால் தாம்பத்யம் என்பது போராட்டமாக இருக்காது; நீரோட்டமாக நீடிக்கும்” என்று. இது முற்றிலும் உண்மை.

குடும்ப வாழ்க்கை என்பது இணக்கமாக இருத்ததானே ஒழிய, தனித்தனி தீவுகளாகப் பிரிந்து கிடக்க அல்ல. இப்படி குடும்பம் இணைந்து இருக்க இறைவார்த்தை சொல்லக்கூடிய ஒரு தீர்வு அன்பு ஒன்றுதான். “அனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இயைவனைத்தையும் பிணைத்து நிறைவு செய்யும்” இது பவுலடியார் கொலோசையருக்கு சொல்லக்கூடிய செய்தி (கொலோ 3:14). ஆகையால், கணவர் மனைவியர் தங்களிடம் இருக்கக்கூடிய வேறுபட்ட கருத்துகளை வேரறுத்து அன்பில், தூய நல் உறவில் இணையட்டும், அதன்வழியாக இறைவன் தரக்கூடிய நிறைநாள் வாழ்வைப் பெற்று மகிழட்டும்.

– Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017⁠⁠⁠⁠

No comments:

Post a Comment