அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை அவர்களுக்குத் தந்தார்

வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை அவர்களுக்குத் தந்தார்

மத்தேயு 17:1 - 9


முன்னுரை:

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாளன்று தனது மறையுரையில் பேராயர் ரொமெரோ, "நெருக்கடிகளைத் தூண்டாதத் திருச்சபை உண்டா? நிலைகுலையச் செய்யாத நற்செய்தியால்,  மனிதனின் உடலை ஊடுருவிச் செல்லாத இறைவார்த்தையால் அல்லது அறிவிக்கப்படுகின்ற சமூகத்தின் பாவக்கறைகளை தொட்டுணர்த்தாத இறைவார்த்தையால் பயன் என்ன?" என்ற கேள்விகளை எழுப்பினார்.



இந்த பேராயர் தனது வாழ்நாளின் இறுதிநாள்களில் ஒரு மறையுரையின்போது, "சிலுவையில் அறையப்பட தன்னையே கையளித்த இயேசு கிறிஸ்துவின் அன்பின் வலிமை என்னும் வன்முறை மற்றும் நமது சுயநலத்தையும், நம்மிடையே நிலவுகின்ற குரூரமான ஏற்றத்தாழ்வுகளையும் வென்றெடுத்திட நாம் கையாளவேண்டிய ஒழுக்க நெறி என்னும் வன்முறை - இவற்றைத் தவிர, வேறுவிதமான வன்முறையை நாம் ஒருபோதும் கற்பித்ததில்லை. நாம் போதிக்கின்ற வன்முறை என்பது வெறுப்பின் அடிப்படையில், வாள்களைக் கொண்டு நடத்தப்படுகின்ற வன்முறையல்ல; மாறாக அன்பையும், சகோதரத்துவத்தையும் தூண்டுகின்ற, போர் ஆயுதங்களை தொழில் கருவிகளாக மாற்றியமைக்கின்ற வன்முறையாகும்" என்று கூறினார்.



தன்னுடைய "எல் சல்வதோர்" நாட்டு மக்களுக்கு தெளிவான சிந்தனையோடு கூடிய விழிப்புணர்வை (Vision) ஊட்டுவதற்காகவே பேராயர் ரொமெரோ மேற்சொன்ன கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நற்செய்திக்காகவும், இயேசுவுக்காகவும், ஏழை-எளிய மக்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் வீறுகொண்டு எழுவதற்கான விழிப்புணர்வை பேராயர் ரொமெரோ இதன் வாயிலாக முன்னெடுத்து வைத்தார். இந்த விழிப்புணர்வே, இராணுவ அடக்குமுறையாளர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிட மக்களை ஒன்றிணைத்து போரிடுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.



இறைவார்த்தை:

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தன்னைக் குறித்த, இறைத்தந்தையைக் குறித்த, எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனையையும், வாழ்க்கையை விட மேலானதொரு விழிப்புணர்வையும் (Vision) தனது சீடர்களுக்கு இயேசு எடுத்துக் காட்டுகிறார்.

1. அனைவரையும் மலைஉச்சிக்கு அழைத்துச் செல்லுகின்ற இறைவனைக் குறித்த விழிப்புணர்வு: தனக்கு மிகவும் நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை இயேசு தன்னோடு மலைஉச்சிக்கு கூட்டிக்கொண்டு செல்லுகிறார். தாங்கள் காணப் போகின்ற காட்சி பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் பெரிதாக அவர்களிடம் இல்லை. "அங்கே நிகழப்போவது என்ன" என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஆயினும், இயேசு மலையின் உச்சிக்கு அவர்களைக் கூட்டிச் சென்றார். தனது மக்களை உயரத்திற்கு கூட்டிச் செல்கின்ற இறைவனின் மேலான நோக்கமே இங்கு வெளிப்படுகிறது.

2. "வரலாற்றின் நடுநாயகன் இயேசுவே" என்ற விழிப்புணர்வு: மலைஉச்சியில் அவர்கள் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தபோது, இயேசு தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார். "அவரது முகம் ஒளிர்ந்தது" என்று நற்செய்தியாளர் மத்தேயு சிறப்பாக குறிப்பிடுகிறார். இதே போன்று ஒளிமயமான முகத்தோடு காணப்பட்ட மற்றொரு மனிதர், மோசே மட்டுமே (விடுதலைப் பயணம் 34:29-35) இன்றையத் திருக்காட்சியின்போது, ஒளிரும் முகத்தோடு இயேசு தோன்றுகிறார்.

திருச்சட்டங்களைக் குறிப்பவராக மோசேவும், இறைவாக்கினர்களை குறிப்பவராக எலியாவும் இங்கே தோன்றுகிறார்கள். அவர்கள் இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகு, நடுநாயகமாக இருக்கப்போவது திருச்சட்டங்களோ, இறைவாக்கினார்களோ அல்ல; மாறாக எல்லாவற்றிற்கும் மையப்பொருளாக இருக்கப்போவது இயேசுவே. திருச்சட்டங்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் தொடர்ச்சியாக இயேசு இருக்கிறார். இதற்கு மேல், வரலாற்றின் நடுநாயகமாக இருக்கப்போவது இயேசுவே.



3. இறைத்தந்தையின் அறிக்கையைக் குறித்த விழிப்புணர்வு: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசேயுடன் மேகத்தினின்று பேசியது போலவே, இப்போதும் மேகத்தினின்று இறைத்தந்தை பேசுகிறார். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத்தேயு 3:17) என்று இயேசுவின் திருமுழுக்கின்போது மொழிந்த அதே வார்த்தைகளையே இப்போதும் இறைத்தந்தை கூறுகிறார். இயேசுவின் அடையாளத்தையும், அவருடையக் குறிக்கோளையும் இதன் வழியாக இறைத்தந்தை உறுதிப்படுத்துகிறார்.

"இயேசுவுக்கு செவிசாயுங்கள்" என்ற கட்டளையை இறைத்தந்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். இதுநாள்வரையிலும் அவர்கள் மோசேவுக்கும், இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்த்து வந்தார்கள். இதன் பிறகு, அவர்கள் செவிசாய்த்துப் பின்பற்ற வேண்டியவர் இறைமகனாகிய இயேசு ஒருவர் மட்டுமே.

4. கடவுளின் உடனிருப்பைக் குறித்த விழிப்புணர்வு: மோசேவும் எலியாவும் இப்போது காணப்படவில்லை. மீட்புத்திட்டத்தின் வரலாற்றில் தங்களுடைய பங்கை அவர்கள் இருவரும் நிறைவேற்றிய பின்னர், இப்போது அவர்கள் ஆற்றவேண்டிய பணி ஏதுமில்லை. திருத்தூதர்களோடு இணைந்து செயலாற்றிட இயேசு ஒருவரே இப்போது இருக்கிறார். ஆகவே தான், இயேசு அவர்களைத் தொட்டு எழுப்பி, "அஞ்சாதீர்கள்" என்று சொல்லுகிறார். மலையிலிருந்து கீழே இறங்கிய பிறகு, அன்றாட அலுவல்களை செய்திட அவர்களுடன் இருக்கப் போகிறவர் இயேசு மட்டுமே. நடுநாயகமாக இருக்கப் போவதும், மீட்புத்திட்டத்தை அதன் இலக்கை நோக்கி நடத்திச் செல்லப் போவதும் இயேசுவே.


வானிலிருந்து வந்த இருவரும் அங்கிருந்து அகன்றுவிட்டனர்; ஆனால், இயேசு மட்டுமே அங்கு தனியாக இருக்கிறார். வானிலிருந்து வந்த துணைவர்கள் உடன் இல்லாமல், விண்ணகத்தின் மகிமையும் இல்லாமல், அவரே திருஉறைவிடமாக, உண்மையான கடவுளின் நிரந்தரமான உடனிருப்பாக நம்மோடு என்றும் இருக்கிறார். "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்ற பொருள் தருகின்ற இம்மானுவேல் என்னும் இறைவன் நானே என்பதை சீடர்களுக்கு உணர்த்தும் வகையில், மலையிலிருந்து கீழே இறங்கிவந்து திருத்தூதர்களுடன் ஒன்றாக நடந்து வருகின்றார்.



வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை, தன்னைக் குறித்த விழிப்புணர்வை இயேசு தன் திருத்தூதர்களுக்கு இன்றைய தினம் தருகின்றார். "வாழ்வின் மையமாக இருப்பவர் இயேசுவே" என்னும் இந்த விழிப்புணர்வு தான் இயேசுவின் இறப்பிற்கும், உயிர்த்தெழுதலுக்கும் பிறகு சீடர்களையும், தொடக்க கால கிறிஸ்தவர்களையும் விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்தது. இந்த விழிப்புணர்வு தான் இவர்கள் இயேசுவுக்காக இரத்தம் சிந்தவும், தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தூண்டுகோலாக இருந்தது.  



பயன்பாடு:

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டென்னெஸீ மாநிலத்திலுள்ள மெம்ஃபிஸ் நகரத்தில் "மேசன்" ஆலயத்தில், 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் நாள் உரையாற்றிய மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) கீழ்க்கண்டவாறு கூறினார்: "கடினமான சில நாள்கள் நமக்கு முன்பாக இருக்கின்றன. ஆனால், உண்மையில் இதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை; ஏனெனில், நான் மலைஉச்சியில் இருக்கிறேன். எனக்கு கவலை இல்லை. எல்லாரையும் போல நானும் நீண்டநாள் வாழ ஆசைப்படுகிறேன். நெடுநாள் வாழ்க்கை என்பது அதன் போக்கிலே நடக்கிறது. அதை குறித்தும் எனக்கு அக்கறை இல்லை. கடவுளின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற நான் விரும்புகிறேன். அவரே என்னை மலையின் உச்சிக்கு வருவதற்கு அனுமதித்திருக்கிறார். இங்கிருந்து சுற்றிலும் நோக்கினேன். வாக்களிக்கப்பட்ட பூமியைக் கண்டேன். உங்களோடு சேர்ந்து அங்கே நான் வராமல் போகலாம். ஆனால், ஒன்றிணைந்த மக்களாக நாம் அந்த வாக்களிக்கப்பட்ட பூமியை சென்றடைவோம் என்பதை நீங்கள் இன்றிரவு தெரிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்! ஆகவே, இன்றைய இரவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எதை பற்றியும் கவலைப்படவில்லை. எந்தவொரு மனிதனைக் கண்டும் நான் அஞ்சவில்லை. ஆண்டவருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டுகொண்டன!!"

அதுவே எதிர்காலத்தைக் குறித்து கடவுள் அவருக்குக் கொடுத்த விழிப்புணர்வு. கிங் (ஜுனியர்) அவர்களை உன்னதமான இடத்தில் நிலைநிறுத்தி வைத்தது அந்த விழிப்புணர்வு தான். மக்களின் விடுதலைக்கு வித்திட்டதும் அந்த விழிப்புணர்வு தான். இத்தகைய விழிப்புணர்வையே இறைத்தந்தை வழங்குகிறார்.



"எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரிவார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்" (நீதிமொழிகள் 29:18). வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை இன்று கடவுள் நமக்குத் தருகிறார். உலகத்தினுடைய, உலக வரலாற்றினுடைய நடுநாயகமாக இருக்கிறவர் அவரே என்னும் விழிப்புணர்வை அவர் தருகிறார். திருச்சபையிலும், நம் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வின் போராட்டங்களிலும் நடுநாயகமாக இருக்கிறவர் அவரே என்னும் விழிப்புணர்வை அவர் தருகிறார். இறைத்தந்தையைக் காண்பதற்கு நம் ஒவ்வொருவரையும் மேல்நோக்கி அழைத்துச் செல்வது இந்த விழிப்புணர்வே. "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்னும் பொருள்படும் இம்மானுவேலாக இயேசுவை ஆக்குவதும் இந்த விழிப்புணர்வு தான்.


இயேசுவே எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறார் என்பதே அந்த விழிப்புணர்வு. இது, மறைவான  பல செயல்திட்டங்களை உள்ளடக்கியுள்ள அரசியல் சித்தாந்தங்களை மையப்பொருளாகக் கொண்டதல்ல. இது, மனித இனத்திற்கும், இந்த பூமியின் இயற்கை வளங்களுக்கும் என்ன நேர்ந்தாலும் கவலைப்படாமல், தங்கள் இலாபத்தை பெருக்குவது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட பெருவணிக நிறுவனங்களை மையப்பொருளாகக் கொண்டதல்ல. இது, ஊரும் பேரும் தெரியாத ஒரு முதலாளியை இன்னும் பணக்காரனாக்கி, தொழிலாளியை ஏழையாக்குகின்ற செயல்திட்டங்களை மையமாகக் கொண்டதல்ல. நாம் எடுக்கின்ற எல்லா முடிவுகளிலும், நமது குடும்பங்களிலும், நமது குழந்தைகளிலும், நமது சமுதாயத்திலும் இயேசுவே மையப்பொருள் என்ற நிலைப்பாடே இந்த விழிப்புணர்வு.


முடிவுரை:

திருத்தூதர்களுக்கு கடவுள் அளித்த விழிப்புணர்வில் நாமும் பங்கேற்கவும், "இயேசுவே நடுநாயகம்" என்ற விழிப்புணர்வு நம் வாழ்வின் அனுபவமாக அமைந்திடவும் அருள் வேண்டி மன்றாடுவோம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment