அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்

உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய வயலின் இசைக் கலைஞர் பகானினி (1782 – 1840) என்பவர். அவர் நடத்தும் இசைக் கச்சேரிகளில் கலந்துகொள்வதற்கு கூட்டம் அலைமோதும்.

ஒருநாள் அவர், தான் நடத்தவிருந்த இசைக் கச்சேரிக்காக எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்துகொண்டிருந்தார். மக்கள் இசைக்கச்சேரி நடைபெற இருந்த திடலுக்கு அலையலையாக வந்துகொண்டிருந்தார்கள்.  எல்லாம் தயாரான பின்பு, பகானினி தன்னுடைய வயலினை எடுத்து வாசிக்கத் தொடங்கியபோதுதான் தெரிந்தது, அது தான் வழக்கமாக வாசிக்கும் வயலின் இல்லை, யாரோ ஒருவர் வேண்டுமென்றே வைத்த பழைய வயலின் என்று. இதை அறிந்த பகானினி சற்று  அதிர்ச்சியடைந்தாலும், இனிமேலும் ஒன்றும் செய்யமுடியாது என்ற உண்மையை உணர்ந்தவராய் அந்த பழைய வயலினையே நன்றாக சுருதியேற்றி வாசிக்கத் தொடங்கினார். வந்திருந்த கூட்டம் வழக்கத்திற்கு மாறாகவும் ஆராவாரம் செய்து, பாராட்டுகளைத் தெரிவித்தது.

அப்போது கூட்டத்திற்கு முன்பாக வந்த பகானினி இவ்வாறு பேசத் தொடங்கினார், “அன்பார்ந்தவர்களே! நான் நடத்திய இசைக் கச்சேரிக்கு இன்று நீங்கள் வழக்கத்திற்கு மாறாக ஆராவாரம் செய்து, எனக்குப் பாராட்டுத் தெரிவித்ததற்காக நன்றி. இந்நேரத்தில் உங்களிடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். இன்றைக்கு நான் இசைக் கச்சேரிக்குப் பயன்படுத்திய வயலின், வழக்கமாக நான் பயன்படுத்தும் வயலின் அல்ல, யாரோ ஒருவர்  வேண்டுமென்றே வைத்த ஒரு பழைய வயலின்”. பகானினி இவ்வாறு சொன்னதைக் கேட்டு, கூட்டம் ஒருநிமிடம் அமைதியாக இருந்தது.

அவர் தொடர்ந்து பேசினார், “நான் இதைச் சொன்னதற்குக் காரணம், இசை இசைக் கருவியிலிருந்து வரவில்லை, அதை உருவாக்கும் இசைக் கலைஞரிடமிருந்தே வருகின்றது என்ற உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளவே”.

நற்செய்தி வாசகத்தில் பேதுரு ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொன்னதற்கு, இயேசு, “எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறுவதை வயலின் இசைக் கலைஞர் பகானினியின் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். நாமெல்லாம் ஒரு (இசைக்)கருவிதான். நம்மை இயக்குக்கின்ற இறைவனே எல்லாம், அவர்தான் நாம் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்கிறார்கள். மீண்டுமாக இயேசு அவர்களிடம், “நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கும்போது, சீமான் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், “யோனானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்கிறார். மனிதர்களாகிய நாமெல்லாம் ஒன்றுமில்லை, கடவுள்தான் நமக்கு எல்லாம் தந்து இயக்குக்கின்றார், பேச வைக்கின்றார் என்ற உண்மையை நாம் இங்கே உணர்ந்துகொள்ளலாம்.

இயேசு பேதுருவிடம் தொடர்ந்து சொல்வார், “உன் பெயர் பேதுரு (பாறை). இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்... விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்”.

இயேசு பேதுருவை பாறை என்று அழைப்பது, பேதுரு பெற்ற உயர்ந்த பேறாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் ‘பாறை’ என்ற வார்த்தை விவிலியத்தில் இறைவன் ஒருவரோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப் படுகின்றது ( 2 சாமு 22:22). இறைவனுக்கு அடுத்ததாக முதுபெரும்  தந்தை ஆபிரகாமோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. யூத இரபிகள் ஆபிரகாமை பாறை என்றுதான் அழைத்தார்கள். காரணம் அவர் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். பேதுருவும் இயேசுவைப் பற்றி ஆழமான நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்தியதான்தான் அவரை பாறை என்று அழைக்கிறார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். பேதுரு இப்படியொரு நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்தியதால் இயேசு அவருக்கு எல்லா அதிகாரத்தையும் தருகின்றார்.

ஆகவே, பேதுரு இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையே அவரை திருச்சபையின் தலைவராக உயர்த்தியது, நாமும் ஆண்டவர் இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழும் போது, அவர் நம் வழியாக பல்வேறு அற்புதங்களைச் செய்வார் என்பது உறுதி.’

எனவே, நாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment