அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, July 26, 2024

நேர்மையற்ற பணியாளன்

 நேர்மையற்ற பணியாளன்

லூக்கா 16 : 1 - 13

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

“ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

==========

இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

இந்த உவமை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது.

1. முதலாவதாக, அந்த நேர்மையற்ற பணியாளனின் நேர்மையற்ற தன்மையை இயேசு பாராட்டவில்லை. அவனுடைய “முன்மதியை” மட்டுமே சுட்டிக் காட்டுகிறார். நேர்மையற்ற வழியில் செயல்பட்ட அவனை எந்த விதத்திலும் பாராட்டவில்லை. அதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

2. ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அந்த ஊழியன் தனது நிலையை நினைத்துப் பார்க்கிறான். தான் எங்கும் ஏற்றுக் கொள்ளப் படாத சூழலில் இருப்பதை அவன் அப்போது தான் உணர்கிறார். தான் இரந்து உண்ணவோ, உழைக்கவோ முடியாத நிலையில் இருப்பதையும் உணர்ந்து கொள்கிறான். நமது ஆன்மீக வாழ்விலும் சுய பரிசோதனை மிகவும் அவசியம். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் எனும் புரிதல் தான் அடுத்த நிலைக்கு நம்மை வழிநடத்தும்.

3. தன் நிலமையை உணர்ந்ததும் அந்தப் பணியாளன் உடனடியாக நண்பர்களைச் சம்பாதிக்கிறான். அவன் செய்கின்ற வழி “நேர்மையற்றது” ஆனால் துரத்தப்படும் போது அடைக்கலத்துக்கான நண்பர்களைச் சம்பாதிக்கிறான். தனது திருட்டுத் தனத்திற்கு கூட்டு சேர்க்கிறான். இப்போது அவனுடைய வேலை பறிக்கப்பட்டாலும் கவலையில்லை. உதவ ஆட்கள் உண்டு. நாம் நமது ஆன்மீக வாழ்வில் இத்தகைய ஒரு மனநிலையை எடுக்க வேண்டும். இவ்வுலக செல்வங்களைக் கொண்டு மறுவாழ்வுக்கான நண்பர்களைச் சம்பாதிக்க வேண்டும்.

4. விண்ணகத்தில் நம்மை ஏற்றுக் கொள்ளும் நண்பர்களைச் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் இயேசு. அதாவது நாம் செய்கின்ற உதவி ஒருவனுடைய ஆன்மீக வாழ்க்கையைச் செழுமைப்படுத்தி அவனை விண்ணகத்துக்கு உரியவனாக்க வேண்டும் என்பது முக்கியப் பாடம். அது இறை ஊழியங்களுக்குச் செய்யும் உதவியானாலும் சரி, தனிப்பட்ட வகையில் நாம் பிறருக்கு அன்பினால் செய்யும் உதவிகள் ஆனாலும் சரி. அதை தவறாமல் செய்யவேண்டும்.

5. ஆன்மீகத்தின் வெளிச்சத்தில் பார்த்தால், நாம் அனைவரும் மேற் பார்வையாளர்களே. இறைவன் தான் முதலாளி. அவர் தருவது தான் நம்முடைய நேரம், பணம், செல்வம், திறமைகள் எல்லாமே. இந்த விஷயங்களையெல்லாம் நமது மேற்பார்வையின் கீழ் இருக்கின்றன. இந்த விஷயங்களை நாம் இறைவனுக்காய் பயன்படுத்த வேண்டும். நமது ஆன்மீக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

6. இந்த உவமையில், பணியாளனைப் பற்றி பலர் குறைகூறுகிறார்கள். அவனுடைய இவ்வுலக வாழ்க்கை ஒரு சாட்சியற்ற வாழ்க்கையாய், ஆன்மீக செழுமை இல்லாத வாழ்க்கையாய் இருந்திருக்கிறது என்பதன் அடையாளம் அது. சாத்தான் நம்மைக் குறித்து எப்போதும் இறைவனிடம் குறை சொல்லிக் கொண்டே இருப்பான் என்கிறது விவிலியம். ஆன்மீகத்தின் அடிப்படையில், நமது வாழ்க்கை பிறருக்கு மகிழ்ச்சி கொடுப்பதாய் இருக்கிறதா? எல்லோரும் குறை சொல்லும்படி இருக்கிறதா என்பதை சிந்திப்போம்.

7. நாம் பணத்தை எப்படிக் கையாள்கிறோம் என்பதை வைத்து நமது ஆன்மீகத்தின் ஆழத்தை அளவிடலாம். இயேசு சொன்ன 38 உவமைகளில் 16 உவமைகள் செல்வத்தைப் பற்றிப் பேசுகிறது. பைபிள் ஜெபத்தைப் பற்றி 500 வசனங்களிலும், விசுவாசத்தைப் பற்றி ஏறக்குறைய 500 வசனங்களிலும் பேசுகிறது. ஆனால் பணத்தைப் பற்றி 2000 வசனங்களில் பேசுகிறது புள்ளி விவரம் ஒன்று. செல்வத்தைக் கையாள்வதன் தேவையை பைபிள் நமக்கு இப்படி வலியுறுத்துகிறது.

8. பணத்தை நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம் நம்மைப் பயன்படுத்தக் கூடாது. இவ்வுலக செல்வங்கள் நம்மோடு வரப் போவதில்லை, நமது விசுவாசச் செயல்களே நம்மோடு வரும். விண்ணுலகில் செல்வம் சேருங்கள் என்றும், ஏழை லாசருக்கு உதவுங்கள் என்றும் இயேசு வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பாவம் என்கிறது பைபிள். நாம் பணத்தை ஆன்மீக செழுமைக்காய் பயன்படுத்துகிறோமா? மனிதநேய பணிகளுக்காய் மனமுவந்து அளிக்கின்றோமா?

9. பணத்தை வைத்திருப்பது தவறல்ல, பணத்தின் மீது ஆசை வைத்திருப்பது தான் தவறு. பணத்தைப் பயன்படுத்துவது தவறல்ல, தேவையற்ற வகையில் பயன்படுத்துவது தான் தவறு. செல்வத்துக்கும் கடவுளுக்கும் ஊழியம் செய்ய யாராலும் முடியாது. செல்வத்தை விரும்பினால் இயேசுவை வெறுக்கிறீர்கள் என்பதே மறைமுகப் பொருள். “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது” என்கிறார் இயேசு.

10. சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவருக்கே பெரியவை அருளப்படும். சிறியவை என இயேசு குறிப்பிடுபவை இவ்வுலக செல்வங்கள். அதை சரியான முறையில், ஆன்மீக ஒளியில் பயன்படுத்துபவருக்கே விண்ணக வாழ்வாகிய பெரியவை அருளப்படும். நமக்கு இறைவன் தரும் ஒவ்வொரு வாய்ப்பையும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் எனும் அழைப்பாகவும் இதைக் கொள்ளலாம்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.


No comments:

Post a Comment