நாள்: செப்டம்பர் 15
வகை: நினைவு
பின்னணி
“இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:34-35) என்ற சிமியோனின் வார்த்தைகள், மரியாளின் துன்பங்களுக்கு தொடக்கத்தை தருகின்றன. ‘சிலுவை அருகில் இயேசுவின் தாயும் நின்று கொண்டிருந்தார்’ (யோவான் 19:25) என்று நற்செய்தி கூறுவது, சிமியோன் உரைத்த இறைவாக்கின் நிறைவைக் காட்டுகிறது.
வரலாறு
12ஆம் நூற்றாண்டில், முதன்முதலாக அன்னை மரியாளின் வியாகுலங்கள் மீதான பக்தி கிறிஸ்தவர்கள் மத்தியில் தோன்றியது. 1244ல், ‘மரியாயின் ஊழியர்’ சபையினர் வியாகுல அன்னை பக்தியை தங்கள் முதன்மை பக்தியாக தேர்ந்தெடுத்து கொண்டனர். 1423ல் கூடிய கொலோன் மன்றம், ‘மரியாளின் வியாகுலங்கள்’ என்ற திருநாளை உருவாக்கியது. 1674ல், ஜெர்மானியப் பேரரசு முழுவதும் வியாகுல அன்னை விழாவை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1688ஆம் ஆண்டு மரியாயின் ஊழியர் சபையினர், இந்த விழாவை செப்டம்பர் 15ந்தேதி கொண்டாட அனுமதி பெற்றனர்.
1808ல் ரோம் மீது படையெடுத்த வேளையில் திருத்தந்தை 7ம் பியுசைக் கைது செய்த நெப்போலியன், ஆறு ஆண்டுகள் அவரை சிறையில் அடைத்தான். பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர், தமது துயரங்களின் நினைவாக 1814 செப்டம்பர் 18ல் வியாகுல அன்னை விழாவை ஏற்படுத்தி, செப்டம்பர் மூன்றாம் ஞாயிறன்று திருச்சபை முழுவதும் கொண்டாட ஆணையிட்டார். 1908 மே 13ந்தேதி, திருத்தந்தை புனித 10ம் பியுஸ், வியாகுல அன்னையின் திருநாளைப் பெரிய விழாவாக உயர்த்தினார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல், இந்த திருநாளை பொது நினைவாக மாற்றினார்.
No comments:
Post a Comment