அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர்.

அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
--------------------
மறையுரைச் சிந்தனை:

பொறுமையும் மன்னிப்பும் மிகுந்தவர் நம் ஆண்டவர்!

அது ஓர் ஏற்றுமதி நிறுவனம். அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஒருவர் நிறுவனத்தின் சொத்துகளை கையாடல் செய்தலில் நன்றாக மாட்டிக்கொண்டார். இச்செய்தி எப்படி நிர்வாக இயக்குனரின் காதுகளை எட்டியது. எனவே, நிர்வாக இயக்குனர் கையாடல் செய்த அந்த குறிப்பிட்ட பணியாளைக் அழைத்து விசாரணை செய்தார்.

“நீங்கள் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை கையாடல் செய்ய முயன்றாக கேள்விப்படுகின்றேனே, அது உண்மையா?” என்று நிர்வாக இயக்குனர் அந்த பணியாளரிடம் கேட்க, அவரோ, “ஆம், நான் இந்த நிறுவனத்தின் சொத்துகளை கையாடல் செய்ய முயன்றது உண்மைதான். நான் என்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள்கிறேன்” என்றார். அதற்கு நிர்வாக இயக்குனர் அவரிடம், “நான் ஏற்கனவே நீங்கள் வகித்து வந்த பொறுப்பை மீண்டுமாக உங்களிடம் கொடுத்தால், அதில் உண்மையாக இருப்பீர்களா?, நான் உங்களை நம்பலாமா?” என்று கேட்டார். “நிச்சயமாக நான் உண்மையாக இருப்பேன், என்னை நம்புங்கள்” என்றார் அந்தப் பணியாளர்.

தொடர்ந்து நிர்வாக இயக்குனர் அந்த பணியாளரிடத்தில், “நிறுவனத்தின் சொத்துகளைக் கையாடல் செய்த உங்களை நான் மன்னிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்றால், உங்களைப் போன்று நான் ஒரு சாதாரண பணியாளராகப் இங்கு பணிசெய்தபோது, நீங்கள் செய்ததுபோன்று நானும் நிறுவனத்தின் சொத்துகளைக் கையாடல் செய்ய முயன்றபோது, செய்தி எப்படியோ நிர்வாகத்திற்குத் தெரிந்துபோக, நிர்வாகம் என்னை அழைத்து பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டது. நானோ, ‘இந்த ஒருமுறை என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், இனிமேல் நான் இப்படிப்பட்ட தவற்றினைச் செய்யமாட்டேன்’ என்று அவர்களைக் கெஞ்சிக் கேட்டேன். அதனால் நிர்வாகம் என்னை மன்னித்தது. அன்றைக்கு நிர்வாகம் என்னை மன்னித்ததுபோல, இன்றைக்கு நான் உன்னை மன்னிக்கிறேன். அதனால் இனிமேலும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யாதீர்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் நிர்வாக இயக்குனரைப் போன்று ஆண்டவராகிய கடவுளும் நம்முடைய குற்றங்களுக்கு ஏற்ப தண்டிக்காமல், மன்னித்து ஏற்றுக்கொள்கிறார், மனம் மாறுவதற்கு கால அவகாசம் தருகின்றார் என்னும் உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகள் உவமைக்கான விளக்கத்தைத் தருகின்றார். இயேசு கூறும் வயலில் தோன்றிய களைகள் உவமை இறுதித் தீர்ப்பின்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்து சொல்கின்ற அதே வேளையில், கடவுள் பாவிகள், குற்றவாளிகள் மீது எந்தளவுக்கு இரக்கமும் பொறுமையும் உள்ளவராக இருக்கின்றார் என்பதைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. நாம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இதே உவமையை இறுதித் தீர்ப்பின்போது என்னவெல்லாம் நடக்கும் என்ற கோணத்தில் சிந்தித்ததால், இன்றைக்கு கடவுள் எந்தளவுக்கு பொறுமையோடும் இரக்கத்தோடும் இருக்கின்றார் என்ற கோணத்தில் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு சொல்லும் (இந்த) வயலில் தோன்றிய களைகள் உவமையில் வரக்கூடிய நிலக்கிழார், தன்னிடத்தில் பணியாளர்கள் வந்து, “ஐயா நீர் உமது வயலில் நல்ல விதிகளை அல்லவா விதைத்தீர்?, அதில் களைகள் காணப்படுவது எப்படி?, நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?” என்று கேட்கின்றபோது அவர், வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடையின் போது பார்த்துக்கொள்ளலாம்” என்கிறார்.

உவமையில் வரும் நிலக்கிழார் வயலில் தோன்றிய களைகளை உடனே அழிக்கமால், அறுவடைவரை வளர விடுங்கள்” என்று சொன்னது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. களைகள் வேண்டுமானால் கடைசி வரைக்கும் களைகளாகவே இருக்கலாம், ஆனால், பாவத்தில் வாழக்கூடிய மனிதன் மனந்திரும்ப வாய்ப்பிருக்கின்றது. அதனால்தான் அந்த கால இடைவெளி கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, அந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பாவி, குற்றவாளி மனந்திரும்ப வேண்டும். அதுதான் நாம் நம்முடைய மனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. கடவுள் பாவங்களை வெறுத்தாலும் பாவிகளை அவர் அதிகமாகவே அன்பு செய்கின்றார் என்கிற இறைவார்த்தைதான் இங்கே பொருந்தி நிற்கின்றது.

எனவே, கடவுளின் பொறுமையையும் இரக்கத்தையும் இந்த உவமை அதிகமாக வலியுறுத்திக் கூறுகின்றது என்பதை உணரும் வேளையில் நாமும், நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனந்திரும்பி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment