திராட்சைத் தோட்ட உரிமையாளன்
மத்தேயு 20 : 1..16
“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.
மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
6ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.
எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்
இயேசுவின் உவமைகள் எப்போதுமே வியப்பூட்டுபவை. பல வேளைகளின் மனிதனுடைய பார்வைக்கு அவை நேர்மையற்ற செயல்களாகவோ, புரிந்து கொள்ள முடியாததாகவோ இருக்கின்றன. இந்த உவமையும் அப்படிப்பட்ட ஒன்று தான்.
நிலக்கிழார் எல்லோருக்கும் சமமான ஊதியம் கொடுக்கிறார். முதலில் வந்தவரும், கடைசியில் வந்தவரும் ஒரே கூலியையே பெறுகின்றனர். ஒரு மணி நேர உழைப்புக்கும், 12 மணி நேர உழைப்புக்கும் ஒரே ஊதியம். உலகின் பார்வையில் இது பாகுபாடு ! அதிலும், கடைசியாக வந்தவர் முதலில் ஊதியம் பெறுகிறார். இது நியாயமானது தானா ?
இந்த உவமை என்னென்ன பாடங்களைக் கற்றுத் தருகிறது ?
1. ஒரு தெனாரியம் என்பது அந்த காலத்தின் ஒரு நாளைய ஊதியம். போர்வீரர் போன்ற ஊதியக்காரர்கள் ஒரு நாள் பெறுகின்ற ஊதியம் அது. ஒரு தெனாரியம் இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாளைய செலவு எளிதாகவும், இனிதாகவும் நிறைவேறும். தினக் கூலிக்காரர்கள் வேலையில்லாமல் இருப்பவர்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் என்பது மிகப்பெரிய கூலி. நிலக்கிழார் அந்த ஊதியத்தையே அவர்களுக்கு வழங்குகிறார். ஒரு மனிதனுடைய தேவை என்ன என்பதை அறிந்து அதை நிறைவேற்ற வேண்டும் எனும் இறைவனின் நேசம் இதில் வெளிப்படுகிறது.
2. தன்னை நம்பி வருகின்ற மக்களின் தேவைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். கவனிக்கவும், “தேவைகளைத் தான் நிறைவேற்றுகிறார், ஆசைகளை அல்ல”. ஒரு மனிதனின் தேவை என்ன என்பதை இறைவன் அறிந்து வைத்திருக்கிறார். அந்த தேவைகளை அவர் நிறைவேற்றுகிறார். இறைவனுக்குரியதை முதலில் தேடுகையில், நமது தேவைகளை அவர் சந்திக்கிறார் எனும் உறுதி இதில் வெளிப்படுகிறது.
3. தனது பணியைச் செய்பவர்களை இறைவன் வெறுமனே அனுப்புவதில்லை. அவர்களுக்கு நிச்சயம் பரிசுகளைக் கொடுக்கிறார். அந்த பரிசுகள் இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கின்றனவே தவிர, நமது உழைப்புக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை. எனவே நமது செயல்களின் ‘அளவின்’ மூலமாக இறைவனிடம் நிறைய வரங்களைப் பெற்று விடலாம் என நினைப்பது தவறான சிந்தனையாகும்.
4. இறைவன் பல கட்டங்களில், வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நம்மை அழைக்கிறார். அவரது அழைப்புக்கு நாம் செவி கொடுக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும். நிலக்கிழார் வந்து பார்க்கும் போது தயாராக இருப்பவர்களே உழைக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த உழைப்பே அவர்களை இறைவனின் ஊதியத்தைப் பெற்றுத் தருகிறது. எனவே இறை அழைப்புக்குத் தயாராய் நாம் இருக்க வேண்டியது அவசியம். சோர்ந்து போய் பாதியில் விலகி விடுபவர்கள் இறைவனின் அழைப்பைப் பெறுவதில்லை.
5. முதலில் அழைக்கப்பட்டவர்கள் ஊதியம் பேசி பணிக்கு வருகின்றனர். அடுத்தடுத்த மக்கள் “நேர்மையானது கிடைக்கும்” எனும் உறுதியில் வருகின்றனர். கடைசி ஒரு மணி நேரம் உழைக்க வந்தவர்கள் ‘ஊதியம் கிடைக்குமா என்பதே தெரியாத’ மனநிலையில் வந்தவர்கள். அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கிறது. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் வருபவர்கள் முதல் மரியாதையை இறைவனிடம் பெற்றுக் கொள்கின்றனர். “காணாமலேயே விசுவசிப்பவன் பேறு பெற்றவன்” என்பது போல, எதிர்பார்க்காமலேயே உழைப்பவன் பேறுபெற்றவன் என்கிறார் இயேசு.
6. கடைசியாய் வந்தவர்கள் ஒருமணி நேரம் உழைத்தாலும் முழுமையான அர்ப்பணிப்போடு உழைத்திருக்கலாம். இறைவன் அகத்தைப் பார்ப்பவர். அவர் பணியின் அளவையல்ல, தரத்தையே பார்க்கிறார். எனவே தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைத்திருக்கலாம். பணி செய்யும் போது எத்தனை காலமாய் செய்கிறோம் என்பதல்ல, எத்தனை ஆர்வமாய் செய்கிறோம் என்பதே முக்கியம்.
7. இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரங்களைக் கொடுக்கிறார். அது முழுக்க முழுக்க இறைவனின் விருப்பம். அடுத்தவருக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்களை நமக்கு இறைவன் தந்திருக்கும் ஆசீர்களோடு ஒப்பிடுதல் கூடாது. அப்படி ஒப்பிடுவது இறைவனையே நேர்மையற்றவராய் சித்தரிப்பதற்குச் சமம்.
8. அடுத்தவர் மீது பொறாமை கொள்வதும், அவர்களைத் தங்களை விடத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதும் தவறு. இறை பணிக்காக பல ஆண்டுகாலம் உழைப்பவர்களானாலும் சரி, இன்று தான் இறைபணியில் நுழைந்தவர்கள் ஆனாலும் சரி எல்லோரும் சமமே. இயேசு எனும் திராட்சைச் செடியின் கிளைகளே. அதில் வேறுபாடு காட்டுவதும், ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவர் என நினைப்பதும் பாவமான செயல். மனதில் ” நான் முதன்மையானவன்” என நினைப்பவர்கள் கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவர். “நான் கடைசி இடத்துக்குத் தான் உரியவன்” என தன்னைத் தாழ்த்துவோரை இறைவன் முதன்மையான இடத்துக்கு உயர்த்துகிறார்.
9. கடைசியில் வந்தவர்களுக்கு முதலில் சம்பளம் கொடுக்கப்படுவது மற்ற மக்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்துவதற்கான செயல். தனக்கு இறைவன் தந்த வளங்களோடு ஆனந்தமாய் வாழ்வதே தேவை என்பதை விளக்க இறைவன் செய்த உத்தி. அதில் பொறாமை கொண்டவர்கள் வீழ்ந்து விட்டனர். அடுத்தவர்கள் வாழும் போதும், வளரும் போதும், ஆன்மீகத்தில் உயரும் போதும் அதைப் பார்த்து மகிழ்வதே உயரிய மனநிலை.
10. கடைசியில் வந்த நபர்களை “யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை”. அவர்கள் ஒருவேளை வலுவற்றவர்களாய் இருக்கலாம்.வலுவற்றவர்களை இயேசு எப்போதுமே நேசித்தார். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். முதலிலேயே மீட்பின் செய்தியைக் கேட்ட யூத மக்கள் தாங்கள் விண்ணரசுக்கு ஏற்கனவே “உரிமை பெற்றவர்கள்” என கருதினர். கடைசியாய் நற்செய்தி அறிவிக்கப்பட்ட புற இனத்தவர்களை அவர்கள் தங்களுக்கு சமமாய் கருதவில்லை. மீட்பின் செய்தி என்பது யாருக்கு முதலில் அறிவிக்கப்பட்டது என்பதை வைத்து கணக்கிடப்படுவதல்ல என்பதை இயேசு அழுத்தம் திருத்தமாய்ப் புரிய வைக்கிறார்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். இறைவனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்வோம்.
No comments:
Post a Comment