அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில் சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது'' என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 19)

சிறு பிள்ளைகளை ஆசிர்வதிக்கும் இயேசு!

தன்னுடைய ஐந்து வயது மகனால் தம் வேலை தடைபடுகிறது என்று நினைத்து உலகப்படம் ஒன்றைப் பல துண்டுகளாக வெட்டிக் கொடுத்து, “சரிபடுத்திக் கொண்டுவா” என்று கூறினார் ஒரு தந்தை. குழந்தைக்கு உலகப்படம் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே, அதிக நேரம் அமைதியாகக் கிடக்கும் என்று எண்ணினார் அந்தத் தந்தை.

ஆனால் குழந்தையோ ஐந்து மணித்துளிகளுக்குள் உலகப்படத்தை சரியாக ஒன்றிணைத்துக் கொண்டு வந்து கொடுத்தது. தந்தைக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. “எப்படிடா செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குழந்தை, “உலகப்படத்தின் மறுபுறத்திலிருந்த ஒரு மனித படத்தைக் காண்பித்து, இந்தப் படத்தை இணைத்தேன், விரைவிலேயே முன்னால் இருந்த உலகப்படம் இணைந்தது, வேலையும் இலகுவானது” என்றது. தன்னுடைய குழந்தை கூறிய பதிலைக் கேட்டு மேலும் ஆச்சரியப்பட்டு நின்றார் அந்தத் தந்தை.

வயது வந்தவர்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால், குழந்தைகளோ வயதுவந்தவர்களை விட, புத்திசாலிகளாக இருக்கிறார்கள்; கடவுளுடைய ஆசிரைப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது நிதர்சன் உண்மையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் சிலர் தங்களுடைய குழந்தைகளை இயேசு குழந்தை ஆசிர்வதிக்கும்படியாக அவரிடத்தில் கொண்டு வருகின்றார்கள்.  இயேசுவின் சீடர்களோ, அவர்களை அதட்டுகின்றார்கள். ஆனால் இயேசுவோ, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்று சொல்லி அவர்களைத் தொட்டு ஆசி வழங்குகின்றார். இந்த நிகழ்வில் நான்கு விதமான நபர்கள் இடம்பெறுகிறார்கள். அவைகள் நால்வரும் நமக்கு ஒவ்வொரு செய்தியைக் கற்றுத்தருகின்றார்கள். அவர்கள் நமக்குக் கற்றுத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

குழந்தைகளின் பெற்றோர்கள்: இந்த நிகழ்வில் இடம்பெறக் கூடிய நபர்களில் முதலாவது வரக்கூடியவர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள். அவர்கள் இயேசுவின் கைகளால் ஆன வல்லசெயல்களை நிச்சயம் பார்த்திருப்பார்கள். பார்வையற்றவர்களுக்கு அவர் பார்வையளித்ததையும், உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர் உடல் சுகம் கொடுத்ததையும் அவர்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள். அதனாலே அவர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசு தன்னுடைய வல்லமைமிக்க கைகளால் ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கொண்டுவருகிறார்கள்.

இங்கே குழந்தைகளின் பெற்றோர்களது நம்பிக்கை நமக்கு மிகச் சிறந்த பாடமாக இருக்கின்றது.

இயேசுவின் சீடர்கள்:  நிகழ்வில் இடம்பெறும் இரண்டாம் விதமான நபர்கள் இவர்கள். இயேசுவின் சீடர்களோ குழந்தைகளின் பெற்றோர்களை அதட்டுகிறார்கள். சீடர்கள் செய்த செயலை நாம் குறை ஒன்றும் சொல்லமுடியாது. ஏனன்றால் அவர்கள் இயேசுவைக் கூட்டத்தினின்று பாதுகாக்கும் பொறுப்பைச் சரியாக செய்தார்கள். இயேசு பல்வேறு பணிகளைச் செய்து மிகவும் சோர்வுற்றே இருந்தார். எனவே, அவரைப் பாதுகாக்கும் பொருட்டு, சீடர்கள் குழந்தைகளின் பெற்றோர்களை அதட்டுகிறார்கள்.

சீடர்களின் பணி, நாம் திருச்சபையையும், திருச்சபைப் பணியாளர்களையும் எந்தளவுக்கு பாதுகாக்கின்றோம் என்பதை குறித்து சிந்திக்க வைக்கின்றது.

இயேசு : நிகழ்வில் வரக்கூடிய மூன்றாவது நபர் இயேசு. இயேசுவுக்கு யாருமே இரண்டாம் பட்சம் கிடையாது. அவருக்கு எல்லாருமே முதல்தரமானவர்கள், எல்லாருமே கடவுளின் பிள்ளைகள். அதனால்தான் குழந்தைகளைத் தொட்டு ஆசிர்வதிக்கின்றார். அது மட்டுமல்லாமல், அவர்களைப் போன்று மாறுபவர்களுக்கே விண்ணரசு உரியது என்றும் எடுத்துரைக்கின்றார். ‘

இயேசுவினுடைய வாழ்வினைப் பொருத்தவரைக்கும் எல்லாருக்கும் கடவுளின் எல்லையற்ற அன்பை எடுத்துரைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த உலகத்திற்கு வந்தார். அந்தப் பணியை அவர் சிறப்பாகவே செய்தார். பாவிகள், நோயாளிகள், குழந்தைகள் என்றெல்லாம் அவர் பாரபட்சம் பார்க்கவில்லை. அவர் எல்லாருக்கும் கடவுளின் அன்பை எடுத்துரைத்து ஒப்பற்ற இறைவனாய் அவர் விளங்கினார். ஆகவே, இயேசுவிடத்தில் இருந்த அன்பை நாம் நம்முடைய வாழ்வில் கொண்டு வாழவேண்டும்.

குழந்தைகள் : நிகழ்வில் நான்காவது இடத்தில் வரக்கூடியவர்கள் குழந்தைகள். குழந்தைகள் யூத சமூகத்தில் இரண்டாம் தரக் குடிமக்களாகவே பார்க்கப்பட்டார்கள், அவ்வாறே அவர்கள் நடத்தப்பட்டார்கள். ஆனால் அவர்கள்  இயேசுவில் பார்வையில் விலை மதிப்பற்றவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். நாமும் குழந்தைகளை கடவுளின் பிள்ளைகளாகப் பார்த்து, அவர்களிடம் விளங்கும் நல்ல பண்புகளை உரித்தாக்கவேண்டும் என்பதுதான் இயேசு நம்மிடத்தில் எதிர்பார்க்கின்றார்.

எனவே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் குழந்தைகளிடம் விளங்கும் நல்ல பண்புகளை நாமும் கொண்டு வாழ்வோம், குழந்தைகளை உரிய அன்பையும் பாதுகாப்பையும் கொடுப்போம், இறைவழியில் நடப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.⁠⁠⁠⁠

1 comment: