இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றதும் பாலை நிலத்தில் அலகையால் சோதிக்கப்பட்டதாக நற்செய்தியாளர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த சோதனையில் வெற்றி பெற்றதன் வழியாக அவர் தம்மை இறைமகன் என்று நிரூபித்துள்ளார்.
பொதுவான சந்தேகம்
‘இயேசு திருமுழுக்கு பெற்ற பின்பு அலகையினால் சோதிக்கப் படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்’ (மத்தேயு 4:1) என்று நற்செய்தி கூறுகிறது. நாற்பது நாட்கள் நோன்பிருந்த பிறகு, இயேசுவின் முன்பு தோன்றிய அலகை அவரை சோதித்ததாக வாசிக்கிறோம். இதைக் கொண்டு, சாத்தானால் சோதிக்கப்பட்ட ஒருவர் எப்படி இறைமகனாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மனிதரே கடவுளின் திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அவரை சோதிக்கும்போது, கடவுளை எதிரியாக நினைக்கும் சாத்தான் அவரை சோதிப்பது சாதாரண நிகழ்வே.
வார்த்தையால் வாழ்வு
இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தாம் இறைமகன் என்று இயேசு நிரூபித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார். (மத்தேயு 4:2-4) கடவுளின் பிள்ளைகள், உணவுக்காக சாத்தானின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை என்பதே இயேசுவின் பதிலடி. கடவுளின் வார்த்தையாகிய தம்மாலேயே மனிதருக்கு வாழ்வு கிடைக்கும் என்று கூறி அலகை மீது இயேசு வெற்றி கொள்கிறார்.
சோதிக்க வேண்டாம்
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இங்கு இயேசுவின் மீட்புச் செயலைத் தடுப்பதற்காக, அவரை தற்கொலை செய்யுமாறு அலகை தூண்டுகிறது. இயேசு அதனிடம், “‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார். (மத்தேயு 4:5-7) தேவையான நேரத்தில் கடவுள் அற்புதம் செய்வார் என்றாலும், ஒரு அதிசயம் நிகழும் என நம்பி கடவுளை சோதிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறி அலகையை மீண்டும் வெல்கிறார் இயேசு.
கடவுளே உயர்ந்தவர்
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. இங்கு, அதிகாரமும் பதவியும் பெறுவதற்காக தன்னை வணங்குமாறு அலகை சோதிக்கிறது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார். (மத்தேயு 4:8-10) அதாவது, இறைமகன் அலகையின் காலில் விழுவது நடக்காத காரியம் என்று சொல்லி, இயேசு அலகையை விரட்டி விடுகிறார். இயேசுவை விட்டு அலகை அகன்றதும், வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத்தேயு 4:11) இவ்வாறு தாம் இறைமகன் என்று நிரூபித்த இயேசு, நாமும் அவரைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறார்.
No comments:
Post a Comment