திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Holy Father / Pope) என்பவர், இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக செயல்பட்டு உலகத் திருச்சபையை வழிநடத்தும் தலைவர் ஆவார். திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக விளங்கும் இவர், அவருக்கு ஆண்டவர் வழங்கிய அதிகாரத்துடன் திருச்சபை மீது ஆட்சி செலுத்தி வருகிறார். பாப்பரசர், போப் ஆண்டவர், பாப்பிறை உள்ளிட்ட பெயர்களாலும் திருத்தந்தை அழைக்கப்படுகிறார்.
கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இயேசு கிறித்துவின் முதன்மைச் சீடராய் விளங்கிய தூய பேதுரு உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.
திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு திருப்பீடம் (Holy See) அல்லது திருத்தூதுப் பீடம் (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.
திருத்தந்தை என்ற பதத்துக்கு முன்னர் உரோமை ஆயர் என்ற பதமே பயன்பாட்டிலிருந்தது. 296-304 வரை உரோமை ஆயராக இருந்த மார்சலின் (Marcellinus) திருத்தந்தை என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.
புனித பேதுருவிலிருந்து தொடங்கிய திருத்தந்தையர் வரிசையில் இன்று பணிப்பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசு 266ஆம் திருத்தந்தை ஆவார்.
விவிலியப் பின்னணி
இயேசு தமது பாடுகளுக்கு முன்பே பேதுருவிடம், “சீமோனே, நீ பேறுபெற்றவன். உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மீது வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். (மத்தேயு 16:17-19)
உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்குத் தோன்றிய இயேசு பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார். (யோவான் 21:16) இவ்விரு நிகழ்வுகளும், திருச்சபை மீதான திருத்தூதர் பேதுருவின் தலைமை அதிகாரத்தைக் காட்டுகின்றன.
இறையியல் பார்வையில் திருத்தந்தையின் பணி
கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தையின் பணியைத் தூய பேதுரு என்னும் திருத்தூதரின் பணியின் தொடர்ச்சியாகக் கருதுகிறது. இயேசு பன்னிரு சீடர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்குத் தலைவராக பேதுருவை நியமித்தார் என்றும், பேதுருவுக்குத் திருச்சபையில் தலைமையிடம் அளித்தார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன (காண்க: குறிப்பாக, மத் 16:13:20). திருத்தூதர்களின் வாரிசாக ஆயர்களும் பேதுருவின் வாரிசாக திருத்தந்தையும் உள்ளனர் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கை. எனவே திருத்தந்தை உரோமையின் ஆயர் மட்டுமல்ல, அனைத்துலகத் திருச்சபைக்கும் அவர் தலைவர் ஆவார். இயேசு கிறித்துவின் பெயரால் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கும் ஆயர் குழுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர் அல்லாத பிற மரபு வழி திருச்சபையினர் திருத்தந்தையின் முதன்மைப் பணியை ஏற்றுக்கொண்டாலும், திருச்சபை முழுவதற்கும் அவருக்கு ஆட்சி அதிகாரம் உண்டு என்பதைக் ஏற்பதில்லை.
வரலாற்றில் திருத்தந்தையர்
இன்று 266ஆம் திருத்தந்தையாகப் பணிபுரியும் திருத்தந்தை பிரான்சிசு பேதுருவின் வாரிசு என்னும் போது முதல் நூற்றாண்டில் நிலவிய திருச்சபையின் தலைமை அதே முறையில் இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்துள்ளது என்று பொருளாகாது. திருத்தந்தையின் பணி, வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.
திருத்தந்தையர் வரலாற்றைப் பொதுவாக உரோமைப் பேரரசுக் காலம், நடுக்காலம், தொடக்க நவீன மற்றும் நவீன காலம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றினுள்ளே கிளைப் பிரிவுகளும் பல உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் திருத்தந்தையின் பணிமுறையில் வேறுபாடுகள் துலங்கியதைக் காணலாம்.
ரோமின் ஆயர்
பாலஸ்தீனத்தை தொடர்ந்து அந்தியோக்கியாவில் திருச்சபையை நிறுவிய திருத்தூதர் பேதுரு, பின்னர் ரோமுக்குச் சென்றார். அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் முதல் ஆயராக பேதுரு செயல்பட்டு, அவர்களை வழிநடத்தினார். பேரரசின் தலைநகராக இருந்த ரோம் இதன் விளைவாக, திருச்சபையின் தலைமைப் பீடமாக மாறியது. பேதுருவின் இறப்புக்கு பிறகும், ரோமின் ஆயர்களாக பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் திருச்சபையின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் வகித்தனர்.
முற்காலத்தில் திருத்தந்தை என்ற பெயர், மேற்கத்திய திருச்சபையின் பல்வேறு ஆயர்களுக்கும் சில வேளைகளில் குருக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. பேரரசர் கொன்ஸ்தாந்தீன் கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கியதில், ரோம் ஆயரின் பங்கு அதிகம் இருந்தது. ஆகவே, அரசியல் ரீதியாகவும் ரோம் நகரின் ஆயர்கள் முக்கியத்துவம் பெற்றனர். இதன் விளைவாக, திருத்தந்தை சிரீசியுஸ் (கி.பி.384-399) காலம் முதல் ‘திருத்தந்தை’ என்ற பெயர் ரோமின் ஆயர்களுக்கு மட்டும் உரியதாக மாறியது.
தேர்வு முறை
தொடக்க காலத்தில் பேதுருவின் சீடர்களும், பின்னர் பொது மக்கள் மற்றும் குருக்கள் தேர்வு செய்த நபர்களும் ரோம் நகரின் ஆயர்களாக (திருத்தந்தையராக) அருட்பொழிவு பெற்றனர். மத்திய காலத்தில் ஆன்மிகத்தின் மீது மட்டுமின்றி, அரசியலிலும் திருத்தந்தையர் அதிகாரம் செலுத்தினர். ஆகவே, திருத்தந்தையை தேர்வு செய்யும் முறையில் அரசியல் குறுக்கீடுகளும் நுழைந்தன. இதனால் நேரிட்ட குழப்பங்களைத் தவிர்க்க, திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்யும் முறை 1059ல் உருவானது.
இம்முறையில் தேர்வுபெற்ற திருத்தந்தைக்கு பொதுமக்களின் இசைவும் தேவை என்று இருந்த நிபந்தனையை, 1139ல் கூடிய 2ஆம் லாத்தரன் பொதுச்சங்கம் அகற்றியது. திருத்தந்தை தேர்தலுக்காக கூடும் கர்தினால்களை அறைக்குள் வைத்து பூட்டும் வழக்கத்தை திருத்தந்தை 10ம் கிரகோரி (1271-1276) அறிமுகம் செய்தார். தேர்தலுக்கான கர்தினால்களின் எண்ணிக்கை 70ஆக இருக்க வேண்டும் என 1587ல் திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் நிர்ணயித்தார். 1970ல் திருத்தந்தை 6ம் பவுல், 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்கள் மட்டுமே தேர்தலில் பங்கேற்கும் வரைமுறையைக் கொண்டு வந்தார்.
தற்காலத்தில், ஒரு திருத்தந்தை பதவி விலகிய அல்லது இறந்த பிறகு, 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் குழு வத்திக்கானில் ஒன்றுகூடி தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். பின்னர் சிஸ்டைன் ஆலயத்திற்குள் நுழையும் அவர்கள், இறை வேண்டலுடன் புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குகின்றனர். அப்பொழுது நடைபெறும் வாக்கெடுப்பில் மூன்றில் இரு பங்கு வாக்குகள் பெறும் கர்தினால் புதிய திருத்தந்தையாக தேர்வு செய்யப்படுகிறார். தேர்வு பெற்றவரின் ஒப்புதலுக்குப் பிறகு, அவர் புதிய பெயருடன் உலகிற்கு அறிமுகம் செய்யப்படுகிறார்.
சிறப்பு அணிகள்
புதிதாக பொறுப்பேற்கும் வேளையில், ஒவ்வொரு திருத்தந்தையும் ஒரு புதிய பெயரை ஏற்பது வழக்கமாக உள்ளது. திருத்தந்தை பணியில் தமது நோக்கத்தை குறிக்கும் ‘விருதுவாக்கு’ மற்றும் ‘ஆட்சி முத்திரை’யை அவர் கொண்டிருக்கிறார். திருத்தந்தை தலையில் வைத்துள்ள ‘கவிகத்தின்’ வெள்ளை நிறம், அவரது பதவியைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் ‘மார்புச்சிலுவை’யும், ‘மோதிரமும்’ திருத்தந்தை பதவிக்குரிய அலங்காரமாக உள்ளது. முற்காலத்தில் திருத்தந்தையரின் மகுடமாக இருந்த மும்முடியும், செங்கோலாக விளங்கிய முச்சிலுவையும் தற்போது பயன்பாட்டில் இல்லை.
ஆட்சிப் பொறுப்பு
திருத்தந்தை என்பவர் ரோமின் ஆயராக மட்டுமின்றி, அகில உலகத் திருச்சபைக்கும் தலைவராகத் திகழ்கிறார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவர் மீதும் திருத்தந்தை நேரடி அதிகாரம் கொண்டிருக்கிறார். உலகெங்கும் உள்ள மற்ற ஆயர்களோடு இணைந்து கத்தோலிக்கத் திருச்சபையின் இறைமக்களை இவர் வழிநடத்தி வருகிறார். புதிய கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தையிடமே உள்ளது. விசுவாசம், நல்லொழுக்கம் ஆகியவை பற்றி அதிகாரப்பூர்வமாக போதிக்கும் வேளையில், திருத்தந்தை ‘வழுவா வரம்’ கொண்டிருக்கிறார்.
கிறிஸ்தவ விசுவாசம் பற்றி போதிக்கவும், தெளிவை ஏற்படுத்தவும், அறிவுரைகளை வழங்கவும், திருச்சபையின் சட்டங்களைத் திருத்தவும், புதிய அறிவிப்புகளை வெளியிடவும் பல்வேறு ஆவணங்களை திருத்தந்தை பயன்படுத்துகிறார். விருப்ப மொழிவு (Motu Proprio), திருத்தூதுவ கட்டமைப்பு (Apostolic Constitution), சுற்றுமடல் (Encyclical), திருத்தூதுவ மடல் (Apostolic Letter), திருத்தூதுவ அறிவுரை (Apostolic Exhortation), ஆணை (Bull) என்ற வெவ்வேறு வரையறைகளில் அவை திருத்தந்தையால் வெளியிடப்படுகின்றன. அருளாளர்கள், புனிதர்கள் ஆகியோரை திருத்தந்தையே அங்கீகரிக்கிறார்.
முக்கிய விழாக்களின் திருப்பலியில் வழங்கும் மறையுரை தவிர, புதன்கிழமைகளில் பொது மறை போதகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் செப உரையும் திருத்தந்தை வழங்குகிறார். திருத்தந்தை சமயத் தலைவராக மட்டுமின்றி, வத்திக்கான் நாட்டின் அதிபராகவும் செயல்படுவதால் தமது தூதர்களை பிற நாடுகளில் நியமிக்கிறார். தேவைப்படும் நேரங்களில், கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகளுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார். திருத்தந்தை ஒருவரின் இறப்பு அல்லது பதவி விலகலுடன் அவரது ஆட்சி முடிவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment