அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, March 29, 2020

அதிதூதர்கள் மிக்கேல், ரபேல், கபிரியேல்.

அதிதூதர்கள் மிக்கேல், ரபேல், கபிரியேல்.

அதிதூதர் மிக்கேல் 

மிக்கேல் எனப்படுவர் யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின் படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது. எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு கடவுளுக்கு நிகர் யார்? என்று பொருள் உண்டு.

பழைய ஏற்பாட்டில் மிக்கேல் :
பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசுரயேலின் பாதுக்காப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது:

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் மிக்கேல் :
வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )

7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். 8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.
யூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.

அதிதூதர் ரபேல்.

எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பதாகும். இவரும் இறைவனின் முக்கிய தூதர்கள் எழுவரில் ஒருவர் ஆவார். இவர் கடவுளிடம் பரிந்து பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்.

யூத மற்றும் கிறிஸ்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபுவழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனிதர் ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்பட்டுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.

இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.

அதிதூதர் கபிரியேல்.

கபிரியேல், ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழு பேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான்.

கிறிஸ்தவ நம்பிக்கைகள் :
இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.

தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர்.

இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தி, இன்று திருச்சபையில் மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய நம்பிக்கைகள் :
இஸ்லாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது.

இவர், இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது.

இசுலாமிய நம்பிக்கையில் இவர்தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது.

மேலும், புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பது இசுலாமிய நம்பிக்கை.

பிற நம்பிக்கைகள் :
சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

No comments:

Post a Comment