இயேசு கிறிஸ்துவுக்கு பல சகோதர சகோதரிகள் இருந்ததாக நற்செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் இயேசுவின் தாய்க்கு பிறந்தவர்கள் என்று கருதுவதை விடவும், உறவுமுறை சகோதர சகோதரிகள் என்பதே ஏற்புடையதாக உள்ளது.
பொதுவான சந்தேகம்
இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த நாசரேத்து மக்கள், “இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” (மாற்கு 6:2,3) என்று கூறியதாக நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆகவே, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் இருந்ததாக சிலர் கருதுகின்றனர். கிரேக்க மூலத்தில் நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் ‘அதெல்போஸ்’ என்ற வார்த்தை ரத்த உறவு கொண்ட சகோதர்களைக் குறிக்கிறது என்பதால், அவர்களது சந்தேகம் வலுவடைந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
“இவரே உம் தாய்!”
உறவின் சகோதரர்
யூத வழக்கத்தின்படி, ஒருவரது நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஆதாரமாக விவிலியத்திலும் நம்மால் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், “நாம் சகோதரர்” (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, “நீ என் சகோதரன்” (தொடக்கநூல் 29:15) என அழைத்ததாக வாசிக்கிறோம். விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், ‘சகோதரர்’ என்று வரும் இடத்தில் புரிதலுக்காக ‘உறவினர்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்ற இயேசுவின் கூற்றிலும் ‘சகோதரர்’ என்பதைக் குறிப்பிட, ‘அதெல்போஸ்’ என்ற வார்த்தையே இடம் பெற்றுள்ளது. இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது.
இயேசுவைத் தேடி
‘ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்’ என்று லூக்கா (2:41-42) நற்செய்தி கூறுகிறது. இங்கு இயேசுவின் சகோதர, சகோதரிகள் எவரும் அவர்களுடன் சென்றதாக நற்செய்தியாளர் குறிப்பிடவில்லை. எருசலேம் கோவிலிலேயே தங்கிவிட்ட நிலையில், மரியாவும் யோசேப்பும் மட்டுமே இயேசுவைத் தேடிச் சென்றதாக (லூக்கா 2:45) எழுதப் பட்டுள்ளது. யோசேப்புக்கும் மரியாவுக்கும் வேறு பிள்ளைகள் இருந்திருந்தால், அவர்களும் இயேசுவைத் தேடிக்கொண்டு உடன் சென்றார்கள் என்ற குறிப்பு இருந்திருக்கும். இதிலிருந்தே, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்பது உறுதியாகிறது.
யோவான் பொறுப்பில்
இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியா என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை, ‘இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியா’ என நற்செய்தியாளர் யோவான் (19:25) குறிப்பிடுகிறார். ‘அவர்களுள் மகதலா மரியாவும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்’ என மாற்கு (15:40) நற்செய்தியில் வாசிக்கிறோம். இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாவை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமோன் உள்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்திகளில் கூறப்படும் எவரும், அவரது உடன்பிறந்த ரத்த உறவுகள் இல்லை என்பதே உண்மை.
No comments:
Post a Comment