இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்து மக்கள், தீராத நோய்களையும் தீய ஆவியின் பாதிப்பாக கருதினர். அந்த வகையில் வலிப்பு நோயால் வருந்திய சிறுவனையும், நெடுநாள் நோய் பாதித்த சிறுமியையும் இயேசு நலமாக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
வலிப்பு நோய்
இயேசுவும் அவரது சீடர்களும் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். கூட்டத்தில் இருந்து ஒருவர், “போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன். ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது; உடனே அவன் அலறுகிறான்; வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான்; அது அவனை நொறுக்கி விடுகிறது; அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை” என்று உரக்கக் கூறினார். அதற்கு இயேசு, “உம் மகனை இங்கே கொண்டுவாரும்” என்று அம்மனிதரிடம் கூறினார். அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது. இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார். அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். (லூக்கா 9:37-43)
கொடிய நோய்
தீர், சீதோன் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. (மத்தேயு 15:22-28)
No comments:
Post a Comment