இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு என்பது முதல் கிறிஸ்தவர்களுக்கு ஒரு மறைபொருளாகவே இருந்தது. இயேசுவை விடவும் திருமுழுக்கு யோவான் பெரியவரோ என்று சிந்திக்கத் தூண்டினாலும், அப்படி இல்லை என்பதே இந்த நிகழ்வு நமக்கு தரும் செய்தி.
பொதுவான சந்தேகம்
“நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று இயேசுவிடம் திருமுழுக்கு யோவான் கேட்டதாக மத்தேயு (3:14) நற்செய்தியில் வாசிக்கிறோம். அப்படியெனில், திருமுழுக்கு கிறிஸ்தவத்தின் புகுமுகச் சடங்கு என்பதால், இயேசு அதை நிறைவேற்றினார் என்று நற்செய்தியாளர்கள் தாங்களே எழுதியிருப்பார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. இயேசு கிறிஸ்து ‘மானிடரின் பாவம் போக்கத் தோன்றிய இறைமகன்’ என்பதே திருத்தூதர்கள் காலம் முதல் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், மனந்திரும்பிய பாவிகளுக்கு யோவான் கொடுத்த திருமுழுக்கை இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
பாவநிலை ஏற்றார்
“நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்” (2கொரிந்தியர் 5:21) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், இயேசுவில் நிறைவேறிய இறைத்தந்தையின் திட்டத்தை வெளிப்படுத்துகின்றன. தூயவரான இயேசு கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகத் திருமுழுக்கு பெறுவது தந்தையாம் கடவுளின் திட்டமாக இருந்தது. ஆகவேதான், “கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை” (மத்தேயு 3:15) என்று யோவானிடம் இயேசு பதிலளிக்கிறார். இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தாலும், அவர் பாவிகளை மீட்க இவ்வுலகிற்கு வந்தவர் என்பதை அவரது திருமுழுக்கு உணர்த்துகிறது.
தொடக்க அடையாளம்
ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் சாதாரண மனிதராக, யூத சமூகத்தின் ஓர் உறுப்பினராக மட்டுமே வாழ்ந்த இயேசு, தந்தையாம் இறைவனின் பணியை உரிமையோடுத் தொடங்க இந்த திருமுழுக்கு வழி வகுக்கிறது. “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” (மாற்கு 1:11) என்ற விண்ணகத் தந்தையின் வார்த்தைகள், இயேசுவின் பணிக்குத் தெளிவானத் தொடக்கத்தை அளிக்கின்றன. ‘இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது’ (லூக்கா 3:21-22) என நற்செய்தியில் வாசிக்கிறோம். இறைமகன் இயேசுவின் மீட்புச் செயல் அவரது திருமுழுக்கில்தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது என்பதையே தூய ஆவியாரின் வருகை உணர்த்துகிறது.
சான்றுக்கு வாய்ப்பு
“எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (மத்தேயு 3:11) என்று போதித்து வந்த யோவான், இயேசுவை அடையாளம் கண்டு சான்று பகர்வதற்கான வாய்ப்பை அவரது திருமுழுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதைக் காண்கிறோம். “இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னை விட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்” (யோவான் 1:29-34) என்ற யோவானின் சான்று, இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகிறது.
No comments:
Post a Comment