அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 20, 2017

‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’

‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’

நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற ஆலயம் அது. அந்த ஆலயத்திற்கு வருவோரெல்லாம் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் இன்னும் மெத்தப் படித்த மேதாவிகளும்தான்.

ஒருமுறை அந்த ஆலயத்தைக் கடந்து சென்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஓவன் என்ற இளைஞன் ஆலயத்தின் வெளித்தோற்றத்தையும் அழகையும் பார்த்துவிட்டு அந்த ஆலயத்தில் பொறுப்பாளராக இருந்த பாஸ்டரிடம், தன்னையும் ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பாஸ்டர் அவனிடம், “ஓவன்! பிறப்பால் நீ கருப்பினத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால், உன்னை இந்த ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வதற்கு இங்கே உள்ளவர்கள் யோசிப்பார்கள். ஆகையால் நீ நேராக வீட்டுக்குச் சென்று, இறைவனிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராக சேரவா? வேண்டாமா? என்று கேட்டுவா. கொஞ்சம் கால அவகாசம் கூட எடுத்துக்கொள்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அப்படியாவது அவனது தொந்தரவு தீரும் என்றுதான் அவர் அனுப்பிவைத்தார்.

ஏறக்குறைய ஒருமாதம் ஆகியும் ஓவன் அந்த ஆலயத்தின் பக்கம் வராததைக் கண்டு பாஸ்டர் மிகவும் சந்தோசப்பட்டார். ஆனால் திடிரென்று ஒருநாள் ஓவன் பாஸ்டரை சென்று சந்தித்தான். அவனைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அப்போது அவர் அவனிடத்தில் கேட்டார், “ஓவன்!, நீ உன்னுடைய வீட்டிற்குச் சென்று கடவுளிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்வதற்காக அவருடைய விருப்பத்தைக் கேட்டாயா? என்று வினவினார். அதற்கு ஓவன், “நான் கடவுளிடம் என்னுடைய கருத்தைக் கேட்டேன். அதற்கு அவர், ‘ஓவன் நீ தயவுசெய்து இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேராதே, ஏனென்றால் நானும்கூட இந்த ஆலயத்தில் ஒரு உறுப்பினராகக்கூட இல்லை. என்னையும் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளே வர அனுமதிப்பதில்லை” என்றான். இதைக் கேட்ட பாஸ்டர் அவமானத்தால் வெட்கித் தலை குனிந்து நின்றார்.

ஆலயம் என்பது எல்லா மக்களுக்கும், எல்லா இனத்தாருக்கும் சொந்தமானது. அதை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுகிறபோது, அங்கே கடவுள் இருப்பதில்லை என்று உண்மையை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கிறது.

பொதுக்காலம் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’ என்ற என்பதாகும். ஆம், கடவுள் எல்லா மக்களுக்கும் பொதுவானவர். அவர் தங்கி இருக்கும் திருக்கோவிலானது எல்லாருக்கும் சொந்தமானது. எனவே நாம் இத்தகைய கருத்துகளை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பிற இன மக்களைக் குறித்துக் கூறுகின்றார், “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்ச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திக்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்” என்று. இங்கே கடவுள், யூதர்கள் மட்டுமல்ல பிற இனத்தார் எழுப்பும் ஜெபங்களைக் கூட கேட்பார் என்றும், அவர் தங்கியிருக்கும் ஆலயம் எல்லா மக்களுக்கும் உரிய இறைவேண்டலில் வீடு என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். ஆகவே, கடவுளை  - அவர் தங்கி வாசம் செய்யும் ஆலயத்தை - ஒரு  குறிப்பிட்ட இனத்திற்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் கொண்டாடுவது மடமையிலும் மடமை என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சாலமோன் அரசர் எருசலேம் திருக்கோவிலைக் கட்டிமுடித்த பின்பு சொல்லக்கூடிய ஜெபம் இதுவாகத்தான் இருக்கின்றது: இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றம் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்த கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை அருள்வாயாக” என்று ( 1 அர 8: 41- 43). ஆதலால்தான் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் பொதுவான எருசலேம் ஆலயத்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவர் சொந்தம் கொண்டாடியபோது, அவர்களை விரட்டியடித்து இறைஇல்லம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்கிறார்.

இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகம் கூட, ஆண்டவர் இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்பதை நிரூபணம் செய்வதாக இருக்கின்றது.  இயேசு புறவினத்தார் அதிகமாக வாழும் தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறார். அங்கேதான் கானானியப் பெண்மணி ஒருத்தி பேய்பிடித்து கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளைக் குணப்படுத்தும்படி கேட்கின்றார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதைக் கண்டுகொள்ளாதவராய், ஏன் அவரை நாயென அழைக்கின்றார். (இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் அப்பெண்ணின் நம்பிக்கையை சோதிப்பதற்காகக்கூட இப்படிப் பேசியிருக்கலாம் என புரிந்துகொள்ளலாம்). ஆனாலும் அப்பெண்மணி இயேசுவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தததால் அவளுடைய மகளுக்கு நலமளிக்கிறார். இங்கே இயேசு தான் ஒரு யூதன் என்பதையும் கடந்து, புறவினத்துப் பெண்மணியின் மகளுக்கு நலமளித்து தான் எல்லாருக்கும் பொதுவானவர், மேலும் நம்பிக்கையோடு கேட்டால், கேட்கிற வரங்களை அள்ளித்தருபவர் என்பதை எண்பித்துக் காட்டுகின்றார்.

இப்பகுதி இயேசுவின் பரந்த உள்ளத்தினைச் சுட்டிக்காட்டும் அதேவேளையில் கானானியப் பெண்மணியின் நம்பிக்கையை நமக்கு எடுத்தியம்புகிறது. கானானிய பெண்மணியோ இயேசு தன்னைக் கண்டுகொள்ளாவிட்டாலும், தன்னை அவர் நாயென அழைத்த பின்பும் அவள் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தன்னுடைய மகளது நோய் நீங்கப் பெறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் கனானியாப் பெண்மணியிடம் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் இறைவனை நோக்கிய நம்முடைய ஜெபம் கேட்கப்படவில்லையென்றால் நாம் நம்பிக்கையில் நம்பிக்கையில் தளர்ச்சியுற்று விடுகின்றோம். ஆனால் தளராத நம்பிக்கைதான் தலைவன் இயேசுவிடமிருந்து எல்லா ஆசிரையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.

அது ஓர் அழகிய கிராமம். அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். அவர் ஊருக்கு மத்தியில் இருந்த ஒரு மரத்தடியில்போய் அமர்ந்தார். சிறுது நேரம் கழித்து அவருக்குத் தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் கேட்டார். ஆனால் ஊரில் இருந்த  யாருமே  அவரைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் அந்த ஊருக்கு  இன்னும்  50 வருடங்களுக்கு மழையே பெய்யாது, வானம் பொய்த்துவிடும்” என்று சாபம் போட்டார்.

இந்த சாபம் பற்றிக் கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று அவர் கூறிவிட்டார். வேறு வழியின்றி
அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த வருண பகவான் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்துப் படுத்துவிட்டான். (வருண பகவான் சங்கை எடுத்து ஊதினால்தான் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்

இப்படி இருக்க அந்த ஊரில் ஓர் அதிசயம் நடந்தது. ஆம், அந்த ஊரில் இருந்த ஒரே ஓர் உழவன் மட்டும் தினமும் கலப்பையை எடுத்து, வயலுக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஒருநாள் அவனிடம் அவர்கள் கேட்டே விட்டனர். “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம். 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.

இது வானத்தில் இருந்த மழைக் கடவுளான வருணபகவானுக்குக் கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார், ”50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்படி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். உடனே இடி இடித்தது.மழை பெய்ய ஆரம்பித்தது இறுதியாக அந்த உழவனின் நம்பிக்கை ஜெயித்து விட்டது. ஆம், நாம் நம்பிக்கையோடு வாழும்போது கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நன்மைகள் ஏராளம்.

இறைவாக்கினர் எரேமியாப் புத்தகம் 39:18 ல் வாசிக்கின்றோம். அங்கே ஆண்டவர் எரேமியாவைப் பார்த்துக்கூறுவார்,  “நான் உறுதியாக உன்னைக் காப்பாற்றுவேன்; நீ வாளால் மடிய மாட்டாய்; உன் உயிரே கொள்ளைப்பொருளாய் அமையும். ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய்” என்று. ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவும் அவர்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதைபோன்று அவர் எப்படி யூதர் என்று புறவினத்தார் என்று பிரித்துப் பார்க்காமல் பரந்த பார்வைகொண்டு வாழ்ந்தாரோ, நாமும் அப்படி பரந்த பார்வை கொண்டு வாழ்வோம்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார், தாம் புறவினத்தருக்கு பணிசெய்வதைக் குறித்து பெருமையாகச் சொல்கிறார். அவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர், அவர் நம்முடைய அம்மையப்பன், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். நம்பிக்கையில் நிலைத்திருந்து இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:

Post a Comment