விடாமுயற்சியுடன் கூடிய ஜெபம்
தூய மோனிக்கா எப்படி இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபிக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். அவருடைய விடா முயற்சியுடன் கூடிய ஜெபம், அவருடைய மகனை மனமாறச் செய்தது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவனிடத்தில் விடாமுயற்சியோடு ஜெபிக்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக் 18: 7-8). ஆம், நாம் விடாமுயற்சியோடு ஜெபிக்கும்போது இறைவன் நம்முடைய ஜெபத்திற்கு பதில் தருவார் என்பதே இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. ஆகவே, நாம் விடாமுயற்சியோடு எதையும் செய்யவேண்டும் என்பதைத் தான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
மைக்கேல் ஆஞ்சலோ, வான்கோ பிராய்டு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வடித்தவர் இர்விங் ஸ்டோன் என்பவர். அவர் ஒருமுறை சொன்னார், “தங்கள் வாழ்வுக்கென்று ஒரு கனவைக் கொண்டவர்கள் அந்தக் கனவை நிறைவேற்றியே தீர்வதென்று போராடுகிறார்கள். அந்தப் பாதையில் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் அவர்களின் மனவுறுதி குலைவதில்லை. அத்தனை சாதனையாளர்களும் செதுக்கும் ஒரே உளி விடாமுயற்சி”.
விடாமுயற்சியோடு ஒரு செயலைச் செய்பவர்கள் அதனை வென்றே தீருவார்கள் என்பதைத்தான் மேலே உள்ள வார்த்தைகளிலிருந்து கண்டு கொள்கிறோம்.
ஆகவே, தூய மோனிக்காவைப் போன்று இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். விடாமுயற்சியோடு எதையும் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். –
Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment