இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் அற்புதகளின் வழியாக, அவரது இறைத்தன்மையை தெளிவுபடுத்துவது மட்டுமே நற்செய்தி ஆசிரியர்களின் முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவேதான், அவரது இறையாட்சி பணிக்கு முந்திய நிகழ்வுகள் அதிகமாக நற்செய்திகளில் இடம் பெறவில்லை.
பொதுவான சந்தேகம்
நற்செய்தியை முதலில் எழுதிய மாற்கும், இறுதியாக எழுதிய யோவானும் இயேசுவின் பிறப்பு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் குழந்தைப் பருவத்திற்கு பிறகு, மத்தேயு நேரடியாக அவரது திருமுழுக்கு நிகழ்வை எடுத்துரைக்கிறார். இடையே பன்னிரு வயது சிறுவனாக இயேசுவைக் காட்டும் லூக்காவும், அதன் பின்பு முப்பது வயது இளைஞராகவே அவரை அறிமுகம் செய்கிறார். நற்செய்திகளில் காணப்படாத பதினெட்டு ஆண்டுகளில், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு இயேசு சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று சிலர் கூறுகின்றனர். யூத மரபுகள் சிலவற்றை இயேசு கண்டிப்பதால், அவர்களுக்கு இத்தகைய சந்தேகம் எழுகிறது.
நாசரேத்தில் வாழ்ந்தார்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு குறித்து நற்செய்திகள் குறிப்பிடாத இடைவெளியை, பலரும் தங்களது கற்பனைக்கு ஏற்ப நிரப்பிக் கொள்கின்றனர். இயேசு வெளிநாட்டுக்குச் சென்று கிரேக்க ஞானத்தையோ, புத்த மதத்தின் நெறிகளையோ கற்றிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையிலான கருத்தை முன்வைக்கின்றனர். இந்த கருத்து தவறானது என்பதை லூக்கா நற்செய்தியாளர் தமது நூலில் தெளிவாக பதிவு செய்துள்ளார். ‘அவர் பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்’ (லூக்கா 2:51,52) என்ற வார்த்தைகள், அவர் நாசரேத்திலே வாழ்ந்தார் என்பதையே எடுத்துரைக்கின்றன.
ஞானத்தில் மிகுந்தார்
ஒவ்வொரு யூத சிறுவனும் பதின்மூன்று வயது முதல் திருச்சட்டத்தைக் கடைபிடிப்பது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை இயேசு கிறிஸ்து பன்னிரு வயதிலேயே தொடங்கி விட்டார் என்பதை பதிவு செய்வதற்காகவே, அவர் எருசலேம் கோவிலில் தங்கிய நிகழ்வை லூக்கா பதிவு செய்கிறார். ஆகவேதான், ‘இயேசு போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார்’ (லூக்கா 2:46) என்று அவர் குறிப்பிடுகிறார். சிறுவன் இயேசுவுக்கு திருச்சட்டம் மீது ஆர்வம் ஏற்பட்டிருந்ததை இங்கு காண்கிறோம். யூத சமூகப் பின்னணியில், மகனுக்கு திருச்சட்டத்தை கற்பிப்பது தந்தையின் முக்கிய கடமையாக இருந்தது. ‘அவர் பெற்றோருடன் சென்று அவர்களுக்குப் பணிந்து நடந்தார்’ (லூக்கா 2:51) என்ற வார்த்தைகள், இயேசுவின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் பணியில் யோசேப்பும் மரியாவும் உதவினர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
மனிதருக்கு உகந்தார்
‘இயேசு நாசரேத்தை அடைந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்’ என்ற லூக்காவின் (2:51,52) கூற்று, அவர் எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை என்பதை உறுதி செய்கிறது. நாசரேத்து தொழுகைக் கூடத்தில் நடைபெற்ற மறைநூல் வகுப்புகளில், இயேசுவும் பங்கேற்று பயிற்சி பெற்றார் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் விளைவாகவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பிக்கும் போதகர் என்ற நிலையை அடைந்தார். ஆனால், யூதர்களின் சட்டத்திற்கு எதிரான சிந்தனைகள் இயேசுவில் உருவாக யோசேப்பும் மரியாவும் காரணமாக இருந்தனர். மேலும், நாசரேத்து ஊரினர் இயேசுவைத் ‘தச்சர்’ என்று அழைத்ததாக மாற்கு நற்செய்தி (6:3) கூறுகிறது. ஆகவே, தமது வளர்ப்புத் தந்தை யோசேப்பிடம் இருந்து அவர் தச்சுத் தொழிலையும் கற்றிருந்தது தெளிவு. இதையே, நற்செய்தியாளர் லூக்கா சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.
No comments:
Post a Comment