அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 26, 2018

மூதாதையர் பட்டியல்

இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை மத்தேயு, லூக்கா ஆகியோர் எழுதிய இரண்டு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். ஆபிரகாம் மற்றும் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு என்பதையே இருவரின் பட்டியல்களும் உறுதி செய்கின்றன.

பொதுவான சந்தேகம்
யூத சமூகத்தில் ஒருவரின் தந்தை வழியாகவே, அவரது வழிமரபு உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, இயேசுவின் தந்தையாக கருதப்பட்ட யோசேப்பின் முன்னோர்கள் பட்டியலை நற்செய்தியாளர்கள் தருகின்றனர். மெசியாவாகிய இயேசு அரச வழிமரபில் தோன்றியவர் என்பதை உறுதி செய்யவே, மத்தேயுவும் லூக்காவும் அவரது மூதாதையர் பட்டியலை வழங்குகின்றனர். மத்தேயு நற்செய்தியில் 1:1-17 வசனங்களும், லூக்கா நற்செய்தியில் 3:23-38 வசனங்களும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை வழங்குகின்றன. ஆபிரகாமில் தொடங்கி இயேசு வரை 42 தலைமுறைகளை மத்தேயுவும், இயேசு தொடங்கி ஆதாம் வரை 77 தலைமுறைகளை லூக்காவும் பதிவு செய்கின்றனர். இந்த பட்டியல்களில் எண்ணிக்கை மட்டுமின்றி, பெயர்களிலும் வேறுபாடு காணப்படுவதால் இவற்றில் யார் தரும் பட்டியல் சரியானது என சந்தேகம் எழுகிறது.

“தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!”

மத்தேயு நற்செய்தி
குலமுதுவர் ஆபிரகாம் மற்றும் அரசர் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு கிறிஸ்து என்பதை நற்செய்தியாளர்கள் இருவருமே உறுதி செய்கின்றனர். ஆபிரகாம் தொடங்கி இயேசு வரை 42 தலைமுறை பட்டியலை வழங்கும் நற்செய்தியாளர் மத்தேயு, அவற்றை மூன்று 14 தலைமுறைகளாக பிரித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், தாவீது என்ற பெயருக்கு உரிய எண் மதிப்பு 14 என்பதே. ‘ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமாகிய இயேசு கிறிஸ்து’ என்று தமது நற்செய்தி நூலைத் தொடங்கும் மத்தேயு (1:1), தாவீதின் வழிமரபில் தோன்றிய மெசியா இயேசுவே என்பதை உறுதிப்படுத்தவே இந்த எண் முறையைக் கையாள்கிறார். மேலும், தாவீதின் வழிமரபில் அவருக்குப்பின் ஆட்சி செய்த அரசர்களை இயேசுவின் முன்னோராகக் காட்டுவதன் வழியாக, யூதர்கள் எதிர்பார்த்த மெசியாவின் அரசை இயேசுவே அமைக்கிறார் என்று மத்தேயு விளக்குகிறார்.

லூக்கா நற்செய்தி
நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவில் தொடங்கி ஆதாம் வரை மூதாதையர் பட்டியலைத் தலைகீழாக வழங்குகிறார். முதல் ஆதாமால் பாவத்திற்கு உட்பட்ட இந்த உலகம், புதிய ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலால் புதிய படைப்பாகிறது என்பதை அவர் உணர்த்துகிறார். ஆகவேதான், இயேசு திருமுழுக்கு பெற்று தமது பணியைத் தொடங்கும் இடத்தில் அவரது மூதாதையர் பட்டியலை லூக்கா வைத்துள்ளார். இயேசுவை யூதர்களின் மெசியாவாகக் காட்டும் மத்தேயு நற்செய்தியின் நோக்கத்திற்கு மாறாக, அவரை உலக மீட்பராக வெளிப்படுத்தும் எண்ணம் லூக்கா நற்செய்தியில் வெளிப்படுகிறது. முதல் மனிதரான ஆதாம் வரை தலைமுறை வரிசையை நீட்டுவதன் வழியாக, இயேசு வழங்கும் மீட்பு உலக மக்கள் அனைவருக்கும் உரியது என்பதை லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கிறார்.

பெயர் வேறுபாடு
இரண்டு மூதாதையர் பட்டியல்களும் வேறுபட இறையியல் பார்வை மட்டுமே காரணமில்லை. யூதர்களின் ‘சகோதர திருமணச் சட்டமே’ மத்தேயு, லூக்கா ஆகியோர் தரும் மூதாதையர் பட்டியல் வேறுபட காரணம் என்பது அறிஞர்களின் கருத்து. மரியாவின் கணவர் யோசேப்பின் தந்தையாக லூக்கா குறிப்பிடும் ‘ஏலி’ மகப்பேறின்றி இறந்திருக்க வேண்டும். ஆகவே, ஏலிக்கு வழிமரபு ஏற்படுத்தும் கடமையுள்ள நெருங்கிய உறவினரான (ரூத்து 2:20) ‘யாக்கோபு’ அவரது மனைவியை மணந்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் மகனாக பிறந்தவரே மரியாவின் கணவரான யோசேப்பு. உயிரியல் முறைப்படி யோசேப்பின் தந்தை யாக்கோபே என்றாலும், யூத சட்டப்படி ஏலியே தந்தை என்று கருதப்பட்டார். ஆகவே, ‘யாக்கோபின் மகன் யோசேப்பு’ என மத்தேயு குறிப்பிடுவதும், ‘யோசேப்பின் தந்தை ஏலி’ என லூக்கா கூறுவதும் சரியே. இதன் காரணமாகவே, அவர்களின் முன்னோர்களின் பெயர்களில் வேறுபாடு காணப்படுகிறது.

No comments:

Post a Comment