இயேசு கிறிஸ்துவுக்கு மனைவியோ பிள்ளைகளோ இருந்ததாக நற்செய்தி எதிலும் கூறப்படவில்லை. ஆகவே, அவர் திருமணம் செய்திருந்தார் என்று கூறுவது உண்மைக்கு முரணான ஏமாற்று வேலையே என்பது தெளிவு.
பொதுவான சந்தேகம்
இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுப்பதற்காக, அவர் மகதலா மரியாவை மணம் முடித்திருந்தார் என்று கூறுவது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களின் வழக்கமாக இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியரான டா வின்சி (1452-1519) வரைந்த ‘இறுதி இரவுணவு’ ஓவியத்தில் திருத்தூதர் பேதுருவுக்கு செவிகொடுக்கும் யோவானை (யோவான் 13:24), மகதலா மரியா என்று சிலர் தவறாக கூறுகின்றனர். யூத சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளும், ‘பிலிப்பு நற்செய்தி’ என்ற மூன்றாம் நூற்றாண்டு மறைவு நூலும், விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தியும் இயேசு திருமணம் செய்ததற்கான சான்றுகளை வழங்குவதாக அவர்கள் சந்தேகம் அடைகின்றனர்.
துறவற சமூகம்
யூதர்களின் வழக்கப்படி முப்பது வயதை எட்டிய ஆண் திருமணம் செய்வது கட்டாயம் என்பதால், இயேசு கிறிஸ்து திருமணம் செய்திருக்க வேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறானது என்பதற்கு இயேசுவின் காலத்தில், சாக்கடலை ஒட்டிய கும்ரான் பகுதியில் வாழ்ந்த எஸ்ஸேனியர்களே சான்றாக உள்ளனர். மெசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த எஸ்ஸேனிய பிரிவைச் சேர்ந்த ஆண்கள், திருமண உறவை விலக்கித் துறவற வாழ்வில் ஈடுபட்டிருந்தனர். இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாக விளங்கிய திருமுழுக்கு யோவானும் எஸ்ஸேனிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அக்காலத்தில் எஸ்ஸேனிய துறவிகளின் வாழ்வால் கவரப்பட்ட பலரும், திருமணம் செய்யாமல் தாமதித்து வந்தனர். இத்தகையச் சூழலில், இறையாட்சி குறித்து போதித்து வந்த இயேசுவைத் திருமணம் செய்ய வேண்டுமென உறவினர்கள் வற்புறுத்தி இருக்க வாய்ப்பில்லை.
பிலிப்பு நற்செய்தி
‘பிலிப்பு நற்செய்தி’ என்ற மறைவு நூலில், மகதலா மரியாவை இயேசு முத்தமிட்டார் என வருவதால் இருவரும் திருமணம் செய்திருந்தனர் என கூறுகின்றனர். மகதலா மரியா என்பவர் ‘ஏழு பேய்கள் பிடித்திருந்ததாக’ கருதப்பட்ட கொடிய நோயில் இருந்து இயேசுவால் குணமாக்கப் பெற்றவர். யோவன்னா, சூசன்னா போன்ற பெண்களோடு சேர்ந்து, அவரும் இயேசுவுக்கு பணிவிடை செய்து வந்ததாக லூக்கா (8:2-3) நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆகவே, இயேசுவின் பெண் சீடர்கள் பலரில் மகதலா மரியாவும் ஒருவர் என்பது தெளிவு. மரியா மீண்டும் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க இயேசு அவர் மீது சிறப்பாக அன்பு காட்டினார் என்பதையே, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நூலின் ஆசிரியர் ‘முத்தமிட்டார்’ என்ற வார்த்தையால் கற்பனையாக குறிப்பிடுகிறார். உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா (யோவான் 20:14) என்பதில் இருந்து, இறைமகன் மீதான அவரது அன்பை உணரலாம்.
குருவும் சீடரும்
“என்னை இப்படி பற்றிக் கொள்ளாதே” (யோவான் 20:17) என்று மகதலா மரியாவிடம் இயேசு கூறிய வார்த்தைகள், இருவருக்கும் இடையே அதிகமான நெருக்கத்தைக் காட்டுவதாக சிலர் கருதுகின்றனர். இது கணவன் – மனைவி உறவில் வெளிப்படும் நெருக்கத்தை ஒத்ததாக இருக்கிறது என்றும் அவர்கள் கற்பனையாக வாதம் செய்கின்றனர். உயிர்த்த இயேசுவுக்கும் மகதலா மரியாவுக்கும் இடையிலான உரையாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்று உள்ளது. “மரியா” என்று பெயர் சொல்லி இயேசு அழைத்தபோது, ‘அன்பரே’ என்றோ, ‘கணவரே’ என்றோ அவர் பதில் கூறவில்லை; “போதகரே” என்ற வார்த்தையே மகதலா மரியாவின் பதிலாக இருந்தது. இறந்துபோன தமது தலைவர் இயேசுவை, உயிர்ப்பின் நாயகராக கண்டதாலேயே மரியா அவரைப் பற்றிக் கொள்கிறார். இது குருவுக்கும் சீடருக்கும் இடையிலான உறவே என்பது வெளிப்படையாகத் தெரிவதால், இதை திருமண உறவாகக் கற்பனை செய்வது தவறு.
No comments:
Post a Comment