அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

''சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்'' (மத்தேயு 19:13)

''சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்'' (மத்தேயு 19:13)

இயேசு கடவுளாட்சி பற்றிய போதனையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு உரையாற்றும்போது, மணமுறிவு கடவுளுக்கு ஏற்புடையதல்ல எனவும் இயேசு விளக்கிச் சொல்கிறார். வைத்த கண் வாங்காமல் இயேசுவின் சொற்களை மக்களெல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கின்ற அந்த வேளையில் பெற்றோர் சிலர் தங்கள் சிறு குழந்தைகளோடு இயேசுவை அணுகி வருகின்றனர். தம் பிள்ளைகள்மேல் கைகளை வைத்து இயேசு அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என அப்பெற்றோர் வேண்டுகின்றனர். இயேசுவின் சீடருக்கோ தாங்க முடியாத எரிச்சல்! சிறுபிள்ளைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், விளையாட்டுத்தனமாய்ப் பேசிக்கொண்டும் இருந்தால் இயேசுவின் சொற்களை மக்கள் கேட்பது கடினமாகும்; பராக்குக்கும் இடமாகும். அது மட்டுமல்ல, இயேசு போதிக்கின்ற இடத்தில் குழந்தைகளுக்கு என்ன வேலை? பெரியவர்கள் கூடியிருந்து உரையாடும் வேளையில் சிறுபிள்ளைகள் அங்கே நுழைந்தால் குழப்பம்தானே! எனவே அச்சிறுபிள்ளைகளையும் அவர்களைக் கூட்டி வந்தவர்களையும் பார்த்து இயேசுவின் சீடர் முறுமுறுக்கின்றனர்; அங்கிருந்து போய்விடுமாறு அவர்களை அதட்டுகின்றனர். இதைக் கண்ட இயேசுவின் கவனம் அக்குழந்தைகள்மீது திரும்புகிறது. அவரது பார்வையில் குழந்தைகளும் வயதில் முதிர்ந்தோரும், பெற்றோரும் பிள்ளைகளும் எல்லாருமே சமம்தான். யாரையும் ஒதுக்கிவைக்கின்ற போக்கு இயேசுவுக்குக் கிடையாது. எனவே இயேசு ''சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்'' என்கிறார்.
-- இன்னார் இன்னார் மட்டுமே கடவுளை அணுகிச் செல்ல முடியும் என நம் சமுதாயம் எல்லைக் கோடுகளை வரைகின்ற நேரங்கள் உண்டு. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோவிலுக்குள் நுழைந்து இறை சன்னிதானத்தில் வழிபடலாம் எனவும் அநீதியான கட்டுப்பாடுகள் ஆங்காங்கே உண்டு. அல்லது, மக்களைப் பிரித்து வேறுபடுத்தி அவர்களுக்குக் கடவுளின் இல்லத்தில் உயர்ந்த இடம், தாழ்ந்த இடம் என்று இட ஒதுக்கீடு செய்யும் பாணிகள் நிலவுகின்றன. இயேசு இவ்வாறு மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமமே என்பதுதான் கடவுளின் மகனாகிய இயேசு நமக்கு வழங்குகின்ற போதனை. அன்றைய சமுதாயத்தில் சிறுபிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உரிமைகள் இருக்கவில்லை. இன்றும்கூட சில இடங்களில் இதே நிலைதான். அனைவரையும் கைகளை விரித்து வரவேற்கின்ற சமுதாயம் உருவாக வேண்டும். மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர், சிறியவர் பெரியவர் என வேறுபடுத்திப் பிரித்து, சம நீதி வழங்க மறுக்கின்ற சமுதாயம் மறைந்து, புதிய உலகம் உதித்திட வேண்டும்.
மன்றாட்டு
இறைவா, மனிதர் அனைவரும் உம் பிள்ளைகளே என்பதை மறவாமல், அனைவருக்கும் மதிப்பளித்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment