புதையல் கண்ட மனிதன்
https://www.facebook.com/photo/?fbid=1220518871378196&set=oa.329101447490869
மத்தேயு 13: 44

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
மத்தேயு 13 : 44
பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, விண்ணரசு இந்த புதையலைப் போன்றது என்கிறார். இந்த உவமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.
1. இயேசுவே அந்த நிலம், புதையல் அவர் தரும் வாழ்வு.
இயேசுவை அந்த நிலமாகப் பார்க்கலாம். இயேசு எனும் நிலத்தில் பரலோக வாழ்வு எனும் புதையல் இருக்கிறது. ஒரு மனிதன் இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளை, வாழ்க்கையை, போதனையை ஆழமாய்த் தோண்டும்போது புதையல் அவனுக்குச் சொந்தமாகிறது.
இயேசு எனும் நிலத்தை விட்டு விட்டு, வேறு வளமான நிலங்களிலோ, வறண்ட நிலங்களிலோ அல்லது மற்றெந்த நிலங்களிலோ தேடினால் இந்தப் புதையல் கிடைக்கப் போவதில்லை. எனவே விண்ணக வாழ்வு எனும் புதையலுக்கு முதல் தேவை, இயேசு எனும் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதே.
2. எதேச்சையாய்க் கண்டடையும் புதையல் :
நிலத்தில் இருக்கின்ற புதையலை ஒருவர் எதேர்ச்சையாய்க் கண்டு பிடிக்கிறார். அவர் புதையலுக்காக அந்த நிலத்தைத் தோண்டவில்லை. ஆனால் அவர் தோண்டிக்கொண்டிருக்கிறார். அது அவருடைய உழைப்பைக் காட்டுகிறது. ஒருவர் விண்ணரசு எனும் புதையலைக் கண்டடைய வேண்டுமெனில் சோர்வைக் கழற்றி வைத்து விட்டு சுறுசுறுப்பாய் இயங்குபவராய் இருக்க வேண்டும்.
இயேசு வாழ்ந்த காலத்தில் எந்தக் கணத்திலும் அவர் சோம்பி இருக்கவில்லை. அவருடைய சீடர்களும் உழைப்பாளிகளாகவே இருந்தார்கள். சோம்பல் இறைவனின் எதிரி. சோம்பலாய் இருப்பவர்கள் விண்ணக வாழ்வைக் கண்டடைவதில்லை.
3. சொந்தமல்லாத நிலம்.
நிலத்தைத் தோண்டுபவருக்குச் சொந்தமானதல்ல அந்த நிலம். கிறிஸ்தவர் அல்லாத ஒருவர், இயேசு எனும் நிலத்தை ஆழமாய்த் தோண்டி ஆன்மீகத்தின் உண்மை அர்த்தத்தைக் கண்டுணரும் பரவச தருணமாக இதைப் பார்க்கலாம்.
தேடல் இல்லாத மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை. தொடர்ந்த தேடல் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகிறது. அது இறைவனைத் தேடுவதாகும் போது அர்த்தமடைகிறது.
4. மகிழ்ச்சி தரும் புதையல்
புதையல் முதலில் மகிழ்ச்சி தருகிறது. இறை அனுபவம் ஒரு பரவச மகிழ்ச்சியைத் தராவிட்டால் நமது ஆன்மீக வாழ்வில் ஏதோ குறைபாடு என்பதே அர்த்தம். பிற மார்க்கங்களிலிருந்து கிறிஸ்தவத்துக்கு வரும் மக்கள் ஒரு பரவச நிலையை அடைவதாகவும், சொல்லொண்ணா மகிழ்ச்சிக்குள் நுழைவதாகவும் பகிர்ந்து கொள்வதுண்டு.
அத்தைய பெரும் மகிழ்ச்சியே இறை தரிசனத்தின் மிக முக்கியமான அம்சம். அந்த அனுபவம் வாய்த்தால் பின் எல்லாவற்றை விடவும் இறைவனே தேவை எனும் உறுதி மனதில் எழும்.
5 தற்காலிகமாய் மறைக்கும் மனிதன்.
ஆன்மீக அனுபவம் தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதே அவன் புதையலை மறைக்கக் காரணம். எப்பாடு பட்டேனும் எனக்குப் புதையல் வேண்டும் என்பதே அவனுடைய சிந்தனை.
இயேசுவை பெற்றுக் கொண்டபின் அவரை மறைத்தல் பாவம். அவரை வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் பெற்றுக் கொள்ளும் வரை எழுகின்ற சமூக, உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட தற்காலிக மறைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அது இயேசுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அதீத ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.
6. எல்லாவற்றையும் விற்கும் மனிதன்.
எது முக்கியம், எது முதன்மையானது, எது தேவையானது என்பதை ஒரு மனிதன் கண்டுணரும் போது அவன் தனக்குள்ள யாவற்றையும் இழக்கத் தயாராகிறான். தனக்குள்ள யாவற்றையும் விற்று, அல்லது விட்டு விட்டு இயேசுவை மட்டுமே பெற்றுக் கொள்ள தயாராகிறார்.
இந்த மனிதனும் இதுவரை தான் சேமித்து வைத்திருந்த பணம், அசையும் அசையாச் சொத்துகள் எல்லாவற்றையும் விற்று விட்டு அந்த நிலத்தை வாங்க முடிவு செய்கிறான்.
7. நிலத்தை வாங்கும் மனிதன்.
எல்லாவற்றையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை அவன் முழுவதுமாய் நிலத்தை வாங்க செலவிடுகிறான். அவனுக்கு அந்த நிலமும், அந்தப் புதையலும் அதி முக்கியமாகிவிட்டன.
நிலத்தை குத்தகைக்கு எடுக்கவோ, அல்லது சொந்தமற்ற நிலத்தில் திருட்டுத் தனமாய் புதையலை எடுக்கவோ அவன் விரும்பவில்லை. இயேசுவும் வேண்டும், கூட நான்கைந்து தெய்வங்களும் வேண்டும் எனும் வலுவற்ற ஆன்மீகம் அவனிடம் இல்லை.
அனைத்தையும் விட்டு விட்டேன் இயேசுவுக்காக, அனைத்தையும் விற்றுவிட்டேன் அவருக்காக என அவன் ஆனந்தமாய் இருக்கிறான். இயேசுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் இழக்கும் பணம், புகழ், பதவி, நேரம் எல்லாமே நம்மை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.
8 புதையலை சொந்தமாக்கும் மனிதன்.
நிலத்தை வாங்கியபின் மனிதன் சோர்ந்து போய்விட்டலோ, அல்லது நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் இனிமேல் எதுவும் தோண்டத் தேவையில்லை என்று நினைத்தாலோ அதனால் ஒரு பயனும் இல்லை. அவன் விற்றது அவனுக்கு கேடாகவே அமையும்.
வாங்கிய பின் நிலத்தை இன்னும் ஆழமாக, கவனமாகத் தோண்டுவதும், நுனி கண்ட புதையலில் ஆழம் கண்டு ஆனந்தப்படுவதும் தேவையான விஷயங்கள்.
9. இழந்ததை திரும்பப் பெறலாம்
புதையல் வலிமையானது. முதலில் கடவுளுக்குரிய விஷயங்களைத் தேடினால் மற்றவை கூடக் கொடுக்கப்படும் என்பது போல, புதையலைக் கைக்கொண்ட மனிதன் அதன் பின் தான் இழந்த அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கியமாக இயேசு தரும் விண்ணக வாழ்வுக்கான புதையலைக் கண்டடைந்தவன் பாவமற்ற வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். நிம்மதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலை மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும். நிறைவான ஆனந்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எதையெல்லாம் இழந்தானோ அவற்றையெல்லாம் இறைவன் திரும்ப தருவார். எவையெல்லாம் நமக்குத் தேவையோ அவற்றையெல்லாம் இறைவன் நிச்சயமாய்த் திரும்பத் தருவார்.
10. பிறருக்கும் பகிர்ந்து வாழலாம்.
தன்னைப் போல பிறரையும் நேசிக்கச் சொன்னார் இயேசு. தான் அடையும் மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, மீட்பு எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதே உண்மையான அழைத்தல்.
பரலோக ராஜ்ஜியமாகிய புதையலை, விண்ணரசாகிய புதையலை சொந்தமாக்கிக் கொண்டவன் சற்றும் தயங்காமல் அதை பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது இந்த உவமை சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தியாகும்.
No comments:
Post a Comment