நாள்: மே 31
வகை: விழா
பின்னணி
அதன்பின் மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். (லூக்கா 1:39-45) இந்த நிகழ்வின் அடிப்படையிலேயே, இவ்விழாவைக் கொண்டாடுகிறோம்.
வரலாறு
முதல்முறையாக 1263 ஜூலை 2ந்தேதி, மரியாள் எலிசபெத்தை சந்தித்த விழா பிரான்சிஸ்கன் சபையில் கொண்டாடப்பட்டது. அச்சபையினரின் முயற்சியால், 1389ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் உர்பன் இந்த விழாவைத் திருச்சபையில் நிறுவினார். 1390ல் திருத்தந்தை 9ம் போனிபஸ், கன்னி மரியாள் எலிசபெத்தை சந்தித்த விழாவை ஜூலை 2ந்தேதி கொண்டாட அறிவுறுத்தினார். பாசல்-புளோரன்ஸ் பொதுச்சங்கம் 1441ல் இயற்றிய 43வது விதியும், இத்திருநாளை ஜூலை 2ந்தேதி கொண்டாடுவதை உறுதி செய்தது.
1585ல் திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ், மரியாள் எலிசபெத்தை சந்தித்த விழாவை திருச்சபை முழுவதும் கொண்டாடுமாறு அறிவித்தார். 1850 மே 13ந்தேதி திருத்தந்தை 9ம் பியுஸ், இந்த திருநாளை முக்கியத்துவம் கொடுத்து கொண்டாட ஆணையிட்டார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல், மே 31ந்தேதியில் மரியாள் எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடுமாறு மாற்றம் செய்தார்.
No comments:
Post a Comment