இறைமகன் இயேசுவால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அன்னை மரியாவை, மகனுக்குரிய அன்போடும் அக்கறையோடும் திருத்தூதர் யோவான் பாதுகாத்து வந்தார். மற்றத் திருத்தூதர்களும் மரியாவைத் தங்கள் தாயாக ஏற்று அவருக்கு மதிப்பளித்து வந்தனர். அன்னையின் இவ்வுலக வாழ்வின் முடிவில், அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் கடவுள்.
எபேசில் மரியா
தொடக்கத்தில் அன்னை மரியாவின் அரவணைப்பின் கீழ் யூத மக்களிடையே தங்கியிருந்து எருசலேமில் நற்செய்தி பணியாற்றிய திருத்தூதர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் இயேசுவை அறிவிக்கச் சென்றனர். யோவான் அன்னை மரியாவோடு எபேசு நகருக்கு சென்று, கடவுள் மனிதரான நற்செய்தியை மக்களிடம் பறைசாற்றினார். யோவானோடு சேர்ந்து அன்னை மரியாவும் எபேசு நகர் மக்களுக்கு கடவுளின் மேன்மையை எடுத்துரைத்து வந்தார்.
தொடக்க கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாட்களில் இறைவேண்டலுக்காக ஒன்று கூடியபோது, அன்னை மரியாவும் அவர்களோடு சேர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இறைமகன் இயேசுவின் தயாகுமாறு, ஆண்டவராகிய கடவுள் தமக்கு செய்த அரும்பெரும் செயல்களை மரியா அவர்களுக்கு எடுத்துரைத்தார். கடவுளாய் இருந்தும் மனிதரான இயேசு, இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற அனுபவித்த துன்பங்களைப் பற்றியும் அவர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு இயேசுவின் விண்ணேற்றத்துக்குப் பிறகு, அன்னை நற்செய்தி பணி செய்தார்.
விண்ணில் அன்னை
அன்னை மரியாவின் இறுதிக்காலம் நெருங்கியபோது, யோவான் அவரை அழைத்துக் கொண்டு எருசலேம் நகருக்கு சென்றார். பல்வேறு நாடுகளுக்கும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கச் சென்றிருந்த திருத்தூதர்கள் கடவுளின் தூண்டுதலால் அன்னையைக் காண புறப்பட்டனர். தோமாவைத் தவிர மற்றத் திருத்தூதர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் எருசலேம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கியதும், அன்னை மரியா மரணம் அடைந்தார். தெய்வீக ஒளி வீசிய அவரது உடலை விலையுயர்ந்த துணிகளால் பொதிந்த திருத்தூதர்கள், யூத முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர்.
திருத்தூதர் தோமா மூன்று நாட்கள் தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்தார். அன்னை மரியாவின் ஆசியைத் தேடி வந்த தோமா, அவரது மரணச் செய்தியைக் கேட்டு மனமுடைந்து போனார். இறையன்னையின் முகத்தைக் காணும் வாய்ப்புக்கூட கிடைக்காதது குறித்து பெரிதும் வேதனை அடைந்தார். மற்றத் திருத்தூதர்களை வற்புறுத்தி அன்னையின் கல்லறைக்கு அழைத்துச் சென்றார். கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அன்னையின் உடலை அங்கு காணவில்லை. மாறாக, விண்ணக ஒளியும் மணம் வீசும் மலர்களும் அங்கு காணப்பட்டன. ஆண்டவர் இயேசு, தம் அன்னை மரியாவை உடலோடு விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என அவர்கள் முழு மனதோடு நம்பினர்.
வீட்டிற்குத் திரும்பிய திருத்தூதர்கள், அன்னையின் விண்ணேற்பை எண்ணி கடவுளைத் துதித்துப் பாடினர். ஆனால், அன்னையின் முகத்தை மீண்டும் ஒருமுறை காண வேண்டுமென்ற ஆவல் திருத்தூதர் தோமாவை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. அதற்காக, அவர் விண்ணகத்தை நோக்கி இடைவிடாமல் மன்றாடி வந்தார். அதன் பயனாக, மரியன்னை தலையில் மணிமுடி சூடியவராய் தோமாவுக்கு காட்சி அளித்தார். தாம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருப்பதை உறுதி செய்த அன்னை மரியா, தோமாவுக்கு தம் இடைக்கச்சையைப் பரிசாக வழங்கிவிட்டு மறைந்தார்.
No comments:
Post a Comment