அகில உலக திருச்சபை அளவில்
1.
அன்பியமாகக்கூடி
உரையாடல் நடத்த, நட்புறவு கொள்ள, அனுபவப் பகிர்வு செய்ய இரண்டாம் வத்திக்கான்
பொதுச்சங்க ஏடு “பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி” எண் 17 பரிந்துரைக்கிறது.
“பொதுநிலையினர் தங்களுக்கிடையே சிறு சிறு குழுக்களாகக் கூடி உரையாடல் நடத்துவது
உகந்ததாகும். இவ்வாறு, உண்மையான அன்பின் சான்றே திருச்சபையின் அடையாளம் என
விளங்கும். மேலும், இவ்விதம் நட்புறவு கொள்வதாலும், அனுபவங்களைப் பரிமாறிக்
கொள்வதாலும் இவர்கள் ஒருவருக்கொருவர் அருள் உதவி அளித்துக் கொள்கின்றனர்.”
2.
திருத்தந்தை ஆறாம் பவுல் 1975 ல் வெளியிட்ட தனது
‘நற்செய்தி அறிவிப்பு’ Evangeli Nuntiandi என்ற மடலில் அன்பியங்கள் பற்றி இவ்வாறு விளக்குகிறார்: “திருச்சபையின் வாழ்வில் ஆழம் வேண்டும் என்ற தேவையின்
அடிப்படையில் அன்பியங்கள் ஊற்றெடுக்கின்றன;
அல்லது மனித வாழ்வில் ஏக்கத்திற்கும் தேடலுக்கும் பெரிய குழுக்களில் விடை
காண கடினமாக இருப்பதால் இவை உருவெடுக்கின்றன. நம்முடைய வழிபாடு அர்த்தம்
பெறுவதற்கும், நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்கும் உடன் பிறப்புகளாக பிறரைக்கருதி
உதவி செய்வதற்கும், தேவைக்கேற்ப சேர்ந்து செபிப்பதற்கும், மக்களுக்காக பணியாற்ற
நியமிக்கப்பட்டிருக்கும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் இவர்களோடு நெருக்கமாக
உறவு வைத்துக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் குழுக்கள் பெரிதும்
உதவியாக இருக்கின்றன.....”
3.
திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் “அன்பியங்களை, மறைக்கல்வியின் ஒரு தளம்” என விவரித்துள்ளார்.
4.
இலத்தின்
அமெரிக்க ஆயர் பேரவையால் வெளியிடப்பட்ட மெடலின் (Medellin, 1968), பீயூபிலா (Puebla, 1979) அறிக்கைகளில் அன்பியம் பற்றிக் காணப்படும் சில
அம்சங்கள்:
a.
அன்பியங்கள்
பெரிய சமுகத்தின் அடித்தளத் தொகுதிகள்.
b.
அன்பியங்கள்
பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு மக்களிடமிருந்து உருவெடுத்தவை.
c.
அன்பியங்கள்
நற்செய்தியைப் பெற்று நற்செய்தியை அறிவிக்கும் நிரந்தரக் குழுக்களாக ஒரளவுக்கு
சுதந்திரமாக செயல்படுகின்றன.
d.
அன்பியங்கள்
திருச்சபைப் பணிகளை, திறமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றன.
5.
டிசம்பர்
1979 ல் மணிலாவில் நடந்த அகில உலக மறைபரப்பு மாநாடு அன்பியங்கள் பற்றி கூறுவதாவது
: “அன்பியங்களை மறைமாவட்ட, தேசிய, அகில உலக அளவில் உருவாக்குவதன் மூலம் உண்மையாக
மறுமலர்ச்சியையும் சேவையையும் உலகுக்கு வாக்களிக்க முடியும். இது காலப்போக்கில்
திருச்சபையை அருட்பணியாளர்கள் ஆதிக்கத்திலிருந்தும், அதிதீவிர
நிறுவனமயமாக்கலிருந்தும், சட்டத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்கும்.”
6.
ஒரு பங்குத்திருச்சபை என்பது
பலசிறு கிறிஸ்துவ சமுகங்களைக் கொண்ட ஒரு பெரிய கிறிஸ்தவ சமூகம் என்பதை 1987 ஆம்
ஆண்டில் பொதுநிலையினர் பற்றி நடைபெற்ற அகில உலக ஆயர் பேரவை வலியுறுத்திக் கூறுகின்றது: “ஒவ்வொரு பங்குத்தளமும் பல்வேறு சிறு சமூகங்களைக்
கொண்ட, உயிர்த்துடிப்புள்ள பெரிய சமூகமாக (Communion of Communities) வளர்ந்து வருவதை மனநிறைவுடன் காண்கிறோம்.”
7.
1988 ல்
பல்வேறு சூழ்நிலைகளின் மத்தியில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட
பொதுநிலையினரின் பொதுநிலையினரின் மறைத்தூது பற்றிய அறிக்கையில் பங்கு மறுமலர்ச்சி
பற்றி பேசும் போது, அன்பியங்களை “வாழும் சமூகங்கள்” என்று விவரிக்கிறார். “இங்கு
இறைமக்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பினாலும் பணியினாலும் இறைவார்த்தைக்குச்
செயல்வடிவம் கொடுக்கிறார்கள், இக்குழுக்கள் தங்கள் மேய்ப்பர்களோடு இணைந்த நிலையில்
திருச்சபையின் ஒன்றிப்பு, நற்செய்திப் பணி ஆகியவற்றில் வெளிப்படையாக நிகழ்கின்றன.”
என மேலும் அவர் கூறுகிறார்.
மீட்பரின் பணி 51 (Redemptoris Mission) என்னும் சுற்றுமடலில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
“அன்பியங்கள் நற்செய்தி அறிவிப்பின் வல்லமை” எனக் குறிப்பிடுகிறார்.
“திருச்சபைக்குள் இக்குழுக்கள் திருச்சபையின்
உயிர்த்துடிப்பின் அடையாளங்களாகவும், வாழ்வை அன்பு நாகரீகமாக மாற்றி புது சமூகம்
உருவாக புளிக்காரமாகவும், ஏழைகளுக்கும்
கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வு நல்கி, சமூக மாற்றத்திற்கும் உதவுகின்றன. ஒவ்வொரு
கிறிஸ்தவனும் தான் ஒரு குழுவின் உறுப்பினர் என்ற உணர்வையும் அந்த குழுவுக்குத்
தான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் இவைகள் உணர்த்துகின்றன. இவ்வாறு இக்குழுக்கள்
நற்செய்தி அறிவிப்பின் சிறந்த கருவிகளாகும்.”
ஆசிய திருச்சபை அளவில் :
1)
1978 ம்
ஆண்டு நடந்த திருச்சபையின் பணி பற்றிய ஆசிய மாநாட்டில், பங்கேற்றவர்கள்
அன்பியங்கள் திருச்சபையின் அவசரத் தேவை எனச் சுட்டிக்காட்டினர். “ஆசியத்
திருச்சபையில் அன்பியங்களின் தேவை பெரிதும் உணரப்படுகிறது. சமூகமாக ஒன்று சேர்ந்து
வருவதையும் அதில் உறுப்பினர்களாக இருந்து உறவில் நாளும் வளர்வதையும், இதனால் ஒரு
சமூகத்தின் சொந்தமாக இருப்பதையும் மக்கள் தேவை என்று உணர்கின்றார்கள். கிறிஸ்தவ
வாழ்வின் முழுமையான பங்கேற்புக்குரிய தளமாகவும் இவை நிகழ்கின்றன. திருச்சபை
வாழ்வின் பங்கேற்புக்கு அன்பியங்கள் தான் ஒரே வழி என்றில்லை, என்றாலும் தூய
ஆவியானவர் அன்பியங்கள் மூலம் வல்லமையோடு செயல்படுகிறார் எனத் தோன்றுகிறது.”
2)
1980 ம்
ஆண்டு நவம்பர் 20 முதல் 30 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மறைபரப்பு அலுவலுக்கான
இரண்டாவது ஆயர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட ஆசிய ஆயர்களின் அறிக்கையில், “திருச்சபையின்
ஒன்றிப்பிற்கு இக்குழுக்களின் ஒன்றிப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் மிக
முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்றிப்பு நிலைத்திருக்க வேண்டுமானால்
ஒருவர் ஒருவரோடு கொள்ளும் உறவு களங்கமற்றதாகப் பேணிக் காக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை வாழ்வும், அர்ப்பணம் உள்ள சேவையும் இக்குழுக்களில் பகிரப்பட்டு,
ஊக்குவிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டக்
குழுக்களில் இருந்து இயல்பாகவே உருவாகிவரும் தலைவர்களின் தலைமைப் பண்புகள்
அக்குழுக்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலாக இருந்து திருச்சபையின்
படிப்பினைகளையும் மறைமாவட்டத்தின் முதன்மை அழுத்தங்களையும் நடைமுறைப்படுத்த
வேண்டும்.”
3)
1982
அக்டோபர் 20 முதல் 27 வரை சாம்பிராணில் Sampran ‘ஆசியாவில் திருச்சபை ஒரு விசுவாச சமூகம்’ என்ற
தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அன்பியங்கள் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கும்
செயல்பாட்டுக்கும் அடையாளமாக விவரிக்கப்பட்டன. “அடித்தள கிறிஸ்துவ சமூகங்கள்
தொடக்க கிறிஸ்துவ மக்களிடம் இருந்த நட்புறவையும் அன்பையும் பகிர்தலையும்
வெளிப்படுத்துவதோடு பல்வேறு பணிகளும் திறமைகளும் இயல்புகளும் கொண்டவர்கள் ஒன்று
சேர்ந்து சிந்திக்க முடியும், செயல்பட முடியும் என்ற உறுதிப்பாட்டையும்
கொடுக்கின்றன” என மாநாட்டின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4)
1990 ல் இந்தோனேசியாவிலுள்ள
பாந்தூங் நகரில் நடந்த 5 வது ஆசிய ஆயர்கள் மாநாட்டில் அன்பியங்கள் ஆசிய திருச்சபையின்
ஒரு இலட்சிய மார்க்கமாக கொள்ளப்பட்டது. அம்மாநாட்டு அறிக்கை இவ்வாறு கூறுகிறது. “அன்பியத்தை இலக்காகக் கொண்ட திருச்சபை எப்படி
இருக்க வேண்டுமென்றால் பொதுநிலையினரும், துறவிகளும், அருட்பணியாளர்களும்
ஒருவரையொருவர் அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டு சிறுசிறு சமூகங்களாக இயங்க வேண்டும்.
இறைவார்த்தையால் உருவாக்கபடும் இக்குழுக்கள் செபிப்பதற்கும், இயேசுவின்
நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், அன்றாட வாழ்க்கையில் ஒருவர் ஒருவருக்குத்
துணையாக இருந்து சேர்ந்து செயல்படவும் இதனால் ஆதித்திருச்சபைமக்களைப் போன்று ஒரே
மனமும், ஒரே உள்ளமும் கொண்ட மக்களாக வாழவும் வேண்டும். இது ஒரு பங்கேற்பு
திருச்சபையாகும். இங்குத் திருச்சபையைக் கட்டி எழுப்பவும்அதன் பல்வேறு பணிகள்
செவ்வனே நடைபெறவும், பரிசுத்த ஆவியின் கொடைகள் உணரப்பட்டு செயலாக்கம் பெறுகின்றன.
இது மக்களின் இதயங்களில் கட்டி எழுப்பப்பட்ட
திருச்சபையாகும். இதனால் இத்திருச்சபை வாக்குப் பிறழாமையாலும் அன்பாலும் உயிர்த்த
இயேசுவுக்கு சான்று பகர்ந்து, உரையாடல் மூலம் பிற சமயத்தினரையும் இணைந்து அனைவரின்
முழுவிடுதலைக்காக பாடுபடும் ஒன்றாகும்.
இறுதியாக இது புளிக்காரம் போல இவ்வுலகை உருமாற்றி
இன்னும் நிறைவு பெறாத இறையாட்சியின் வருகையை அறிவிக்கும் இறைவாக்கின்
அடையாளமாகவும் திகழ்கிறது.
5)
1999 ஆம்
ஆண்டு டெல்லியில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘ஆசியத்திருச்சபை’
என்னும் மடலில் கீழ்வரும் உண்மைகளை கோடிட்டுக் காட்டுகிறார்.
¨
நம்பிக்கையாளர்கள்
அன்பும் தோழமையும் கொண்டு வாழ அன்பியங்கள் உதவுகின்றன. “அடிப்படைக் கிறிஸ்துவ
சமூகங்கள் எல்லாப் பங்குகளிலும், மறைமாவட்டங்களிலும் ஒன்றிப்பையும், பங்கேற்பையும்
வளர்க்கும் வழிமுறைகளாகவும், நற்செய்தி அறிவிப்பின் சக்தியாகவும் திகழ்கின்றன.......... தொடக்கக்கால கிறிஸ்துவர்களைப் போன்று
நம்பிக்கையாளர்கள் நம்பவும், செபிக்கவும், அன்புச் சமூகங்களாக வாழவும் அன்பியங்கள்
உதவிசெய்யும்.”
¨
அன்பியம், அன்புக்
கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும் “இறைமக்களுக்கு உதவும் நோக்கம் என்னவென்றால்,
நற்செய்தியை அன்பு, தொண்டு மனப்பான்மையாய் வாழ உதவுவதற்காகும். இந்த வகையில்,
புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் தொடக்கமாக இது அமைகிறது. அதுவே “அன்புக்
கலாச்சாரத்தின்” (Civilization of Lover) வெளிப்படாகவும் அமையும்.
¨
பங்குத்தந்தையர்கள்
அன்பியத்தைக்கட்டி வளர்க்க அழைக்கப்படுகின்றனர்.
“கிறிஸ்தவர்களுக்குள் ஒன்றிப்பையும் நம்பிக்கையையும் அருளடையாளங்கள் வழியாக
நெருக்கமான இறையனுபவத்தையும், வாழ்வு மாற்றத்தையும் எற்படுத்தும் புதுப்பித்தல்
இயக்கங்களை ஆயர் மற்றும் ஏற்றுக்கொண்டது. இக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள்,
பங்கு மறைமாவட்டத்தில் வாழ்வு பணியோடு இணைந்து செயல்படுவதற்காக அவர்களை பங்குத்
தந்தையர்கள் வழிகாட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.”
இந்திய
திருச்சபை அளவில் :
1.
1981 ம்
ஆண்டு பெங்களூரில் NBCLC நடத்திய கருத்தரங்கில் அன்பியங்கள் பற்றி அலசப்பட்டது. இக்கருத்தரங்கில்
அன்பியங்கள் நீதியான ஒரு சமூதாயத்தை உருவாக்கும் தலத்திருச்சபை பணியில் ஒரு
திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
2.
அகில
இந்திய ஆயர் பேரவை 1974 முதல் 1988 வரை நடத்திய பொது அமர்வுகளின் இறுதி அறிக்கைகள்
நற்செய்தி அறிவிப்பு, உரையாடல், இறைவேண்டல், நீதி போண்றவை செயல்பட
நம்பிக்கையையும், அன்பையும், செபத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தச்
சிறுக்குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றன.
3.
1992 ல்
நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையின் பொது மாநாட்டில் இறுதி அறிக்கையில் இந்தியத்
திருச்சபை இன்று சந்திக்கும் தலித் கிறிஸ்தவர்களின் கிளர்ச்சி, பெண்களுக்குச்
சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் படும் அவதி,
பாதுகாப்பின்மை ஆகிய மூன்று சமூக பிரச்சனைகளையும் மிகச்சிறந்த முறையில் சமாளிக்க
அன்பியங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
4.
1992 ல்
பூனாவில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், இக்கால கட்டத்தில் திருச்சபையின்
பல்வேறு தேவைகளை நிறைவு செய்யக்கூடிய விரும்பத்தக்க அமைப்பாக அடித்தளத் திருச்சபை
சமூகங்கள் உள்ளன. இறைமக்கள் சமூகத்தில் எல்லா பிரிவினரும் சிறு குழுக்களில் ஒன்று
கூடி தலத் திருச்சபையின் எல்லா திட்டங்களையும் தீர்மானங்களையும் எடுத்து அதன்
பலவிதப் பணிகளை நிறைவேற்றுகிற நம்பிக்கையாளர்களின் சமூகமே பங்கு ஆகும். ஒவ்வொரு
மறைமாவட்டமும் இத்தகைய பங்கேற்புத் திருச்சபையை உருவாக்க வேண்டும்.
5.
1996 ல்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், சிறு கிறிஸ்துவ
சமூகங்களின் ஒன்றியமே திருச்சபையின் மாதிரியாகத் துலங்குகிறது. பங்குப் பேரவை
உறுப்பினர்களை அன்பிய பொறுப்பாளர்களிடமிருந்து தெரிவு செய்தல் சிறந்ததாகும்.
இத்தகைய அன்பியத் திருச்சபையை இந்நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்ற எமது 1992
ம் ஆண்டு புனே தீர்மானத்தை மீண்டும் இப்போது உறுதி செய்கிறோம்.
6.
1998 ல்
வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையின் போது, நமது எல்லா
மறைமாவட்டங்களிலும் சிறு கிறிஸ்துவ சமூகங்களை (அன்பியங்களை) அமைப்பதற்கான
முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அன்பியங்களின் வழியாகவே
திருச்சபை சமூகத்தின் புளிக்காரமாக செயல்படுவதை நாம் இருக்கும் இடங்களில் அனுபவ அடிப்படையில்
உணர்ந்துக்கொள்ள முடியும்.
7.
2001 ல்
கொல்கொத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், இந்தியாவில் உள்ள எல்லா
மறைமாவட்டங்களிலும் அன்பியங்களை 2001 ஆம் ஆண்டு முடிவதற்குள் தொடங்க வேண்டும் என்ற
கொள்கை வரைவை ஏற்படுத்தியது.
8.
2007,
ஜனவரி ஆல்வேயில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டத்தில், “பொது நிலையினரை
உருவாக்கும் நாற்றங்கால் அன்பியம் ஆகும்.”
தமிழக திருஅவை
அளவில் :
1)
தமிழக
ஆயர் பேரவை 1989 ஆம் ஆண்டு “புது வாழ்வு – 2000” என்னும் திட்டத்தின் வழியாக
“விசுவாசப்பகிர்வுக் குழுக்களை” தமிழகத்தில் கட்டியெழுப்ப முயன்றனர். இந்த
விசுவாசப் பகிர்வுக் குழுக்களை சிறு கிறிஸ்துவ சமூகங்களாகக் கட்டியெழுப்ப முடிவு
செய்தனர்.
2)
2007,
ஜீலை 31 முதல் ஆகஸ்டு 5 முடிய தூத்துக்குடியில் கூடிய தமிழக இலத்தின் ஆயர்களின்
பேரவை அன்பியத்தை மேய்ப்புப் பணி முதன்மையாக, முதன்மைகளில் முதன்மையாகத்
தீர்மானித்து, பினி வருபவற்றை முன்னிருத்தியது.
v அன்பியம் பணிக்குழுக்களில் ஒரு பணிக்குழு அல்ல : அன்பியம் என்பது ஒரு பக்த சபையோ, சமூக சேவை சங்கமோ,
மக்கள் இயக்கமோ, குழுவோ, செபத்திற்காக மட்டும் கூடும் கூட்டமோ அல்ல. மாறாக மனித
வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இறைவார்த்தையின் ஒளியில் வாழ முற்படும் ஒரு
குட்டித் திருச்சபை.
v அன்பியம் ஒரு வாழ்க்கை முறை. புதிய முறையில் திருச்சபை: அன்பியங்கள்
திருச்சபையை புதிய இயல்புக்கு இட்டுச் செல்லவும், நம்பிக்கை துடிப்பு மிக்க இறைமக்களின்
இயக்கமாக மாறவும், அன்பும், நீதியும் கொண்ட சமூகமாக விளங்கவம், இறைவார்த்தைக்கு
செவிமடுத்து, அதன் உண்மையான பொருளைத் தியானித்து, உள்ளன்புடன் ஏற்று நம்பிக்கையுடன்
செயல்படுத்தி, அதனை அறிக்கையிட வேண்டும். இப்படி அன்பியங்கள் நற்செய்திப் பகிர்வை
மேற்கொண்டு, இறைவார்த்தையை அடித்தளமாகவும், கிறிஸ்துவை மையமாகவும் கொண்ட
சமூகங்களாக உருவாகும் போது திருச்சபை புதிய இயல்புடையதாக மாறும்.
v அன்பியத்தைப் பற்றிய தெளிவுகள் தரப்பட வேண்டும் : பங்கேற்பு
அமைப்புக்களான அன்பியம் பற்றிய தெளிவு, பங்கு பேரவை மற்றும் நிதிக்குழுக்களின்
தேவை, இவற்றிற்கு வேண்டிய பயிற்சிகளுக்கு மாநில மற்றும் மறைமாவட்ட விவிலியம்,
அன்பியம் மற்றும் பொதுநிலையினர் பணிக்குழுக்கள் சிறப்பு கவனம் செலுத்துவது
அவசியம்.
v அன்பியங்களில் சமூதாய மாற்றத்திற்கான கூறுகள் இருக்க
வேண்டும் : அன்பியங்கள் கிறிஸ்துவ அறிவை வளர்க்கவோ ஆறுதல் தரவோ,
பொருளாதர உதவி செய்யவோ மட்டுமல்ல, ஆனால், இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை
மையமாகக் கொண்ட ஒரு சமத்துவ சமதர்ம சமூதாயத்தை உருவாக்குவதற்காகவே ஆகும்.
v நமது மேய்ப்புப்பணி விளிம்பில் உள்ள அன்பியங்களில் தான்
இருக்க வேண்டும் : தற்போது பங்கு, ஆலயம், ஆலய வளாகம், மற்றும்
அருட்பணியாளர் இல்லம் இவைகளைச் சுற்றியே பெரும்பாலும் வழிபாடுகள், பணிகள், செயல்பாடுகள்,
சுழன்று கொண்டிருக்கின்றன. இவை இனி விளிம்பில் உள்ள அன்பியங்களை நோக்கி செல்ல
வேண்டும். இயேசுவின் இயக்கமும் அவரது பணியும் சமுதாயத்தில் ஒரங்கட்டப்பட்ட,
ஒதுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை நோக்கியதாகவே அமைந்தது என்பது இங்கு நினைவு
கூறத்தக்கது.
No comments:
Post a Comment