கொடிய குத்தகைக்காரர் உவமை
மத்தேயு 21 : 33 - 46
நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்” என்றார்.
தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த இன்னொரு உவமையாக இது விளங்குகிறது. தலைமைக் குருக்கள், பரிசேயர் இவர்களை குறிவைத்தே இயேசு இந்த உவமையைச் சொன்னார். அது அவர்களுக்கும் புரிந்திருந்தது. எனவே தான் அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்.
இறைவன் தனது மக்களைப் பராமரிக்க தலைவர்களையும், வழிகாட்டிகளையும் ஏற்படுத்துகிறார். அவர்கள் வழி தவறிப் போகும் போது கடவுளின் கோபம் அவர்கள் மேல் விழுகிறது !
இறைவன் நாம் கனிகொடுக்க வேண்டும் என விரும்புகிறார். நாம் பிறரை கனிகொடுக்கும் வாழ்க்கைக்குள் வழிநடத்த வேண்டும் என விரும்புகிறார். இந்த வாழ்க்கை நமக்குச் சொந்தமானதல்ல, இது இறைவனின் சித்தத்தைச் செயல்படுத்தும் தளம்.
இந்த உவமை பல சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது.
1. நிலத்தின் சொந்தக்காரர் நான்கு விஷயங்களைச் செய்கிறார். முதலாவது, நிலத்தில் திராட்சைத் தோட்டம் போடுகிறார். திராட்சைத் தோட்டம் செழித்து வளர்வதற்கு ஏதுவான வகையில் நிலத்தை அவர் பக்குவப்படுத்திய பின்பே திராட்சைத் தோட்டத்தை அமைத்திருக்க வேண்டும். இறைவன் மக்கள் வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்கான வழிவகைகளை செய்யாமல் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதை இது விளக்குகிறது.
2. இரண்டாவதாக அவர் ஒரு வேலி அமைக்கிறார். இது பாதுகாப்பைக் குறிப்பது. இறைவனில் நமக்குக் கிடைக்கும் உன்னதமான பாதுகாப்பு இது என கொள்ளலாம். தனது மக்களை இறைவன் பாதுகாப்புக்குள் வைக்கிறார். உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுகிறான் என்று சொன்ன இறைவன், தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்.
3. பிழிவுக் குழி ஒன்றை அமைக்கிறார் எஜமான். அதில் தான் பழங்கள் பதப்படுத்தப்படும், விளைச்சல்கள் சேமிக்கப்படும். விளைகின்ற கனி எதுவும் வீணாகாதபடி அதை பாதுகாக்கும் தலைவனுடைய மனம் இதில் வெளிப்படுகிறது.
4. நான்காவதாக ஒரு காவல் மாடம் அமைக்கிறார். காவல்மடம் தங்குவதற்கானது, கூடவே தனது தோட்டம் விஷமிகளால் தகர்க்கப்படாமல் இருக்க செய்கின்ற பாதுகாப்புக்கானது. இப்படி தேவையான அனைத்தையும் செய்து கொடுத்த பின்பே தலைவன் தனது நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை தொழிலாளர்களிடம் ஒப்படைக்கிறார். தகுதிக்கு மீறியவற்றையோ, நம்மால் இயலாதவற்றையோ அவர் கேட்பதில்லை.
5. தலைவரின் நெடும்பயணம் இரண்டாம் வருகைக்கு முந்தைய இடைவெளியைக் குறிப்பிடுகிறது. இது தலைவரின் நீண்ட பயணத்துக்கு ஒப்பாய் இருக்கிறது. தலைவர் நீண்ட பயணம் முடித்து ஒருநாள் திரும்பி வருவார் எனும் உத்தரவாதம் இதில் தெரிகிறது. ஆனால் அவர் எப்போது வருவார் என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் அவர் வருவார்.
6. தலைவர் தமக்குச் சேரவேண்டிய பழங்களை வாங்க ஒருநாள் நிச்சயம் வருவார். அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவர் எதிர்பார்ப்பது கனிகளைத் தான். அவருக்கேற்ற கனிகளை தோட்டம் தரவேண்டும் என விரும்புகிறார். அதற்கு ஏற்ற வகையில் தோட்டத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது. அதுவே அவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. நாம் கனிகொடுக்கிறோமா ? இறைவனுக்கேற்ற கனி கொடுக்கிறோமா என்பதை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பாகவும் கொள்ளலாம்.
7. இறைவனின் பணியாளர்கள் தலைவனுக்கான பணியை நிறைவேற்ற வருபவர்கள். அவர்களை நையப் புடைப்பதும், கொல்வதும், மிகப்பெரிய பாவம். இறைவாக்கினர்களை யூத மக்கள் நிராகரித்த நிகழ்வை இது சுட்டிக் காட்டுகிறது. எனினும் கடவுளின் கோபம் வெளிப்படவில்லை. மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இறைவன் மேலும் அதிக பணியாளர்களை அனுப்புகிறார். எனினும் மக்கள் மனம் திரும்பவில்லை. அப்போதும் இறைவன் அன்பு கொள்கிறார். தனது மகனையே அனுப்புகிறார்.
8. இயேசுவை நிராகரிக்கும் நிலையே தலைவரின் மகனை நிராகரிப்பது. மகன் சொத்துக்கு உரியவர் என்பது தொழிலாளர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி அவரைக் கொல்கின்றனர். கொல்கொதா மலையின் உச்சியில் இயேசு மரணமடைவதை இது விளக்குகிறது. மகனைக் கொன்றதும் கடவுளின் சினம் வெளிப்பட்டு அனைவரையும் அழித்துவிடும் என மக்கள் நினைத்தனர். ஆனால் இறைவனின் அன்பு எல்லை கடந்தது. அவர் தூய ஆவியானவரை நமக்கு அளித்து நமக்கு மீண்டும் ஒரு கிருபையின் காலத்தைக் கொடுத்திருக்கிறார்.
9. எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறைமகன் இயேசுவே திருச்சபையின் மூலைக்கல் ஆகிறார். அவரை வைத்தே திருச்சபையின் கற்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இயேசுவின் மீது விழுகின்ற நபர்கள் உடைகின்றனர், இயேசுவின் கோபம் யார் மீது விழுகிறதோ அவரும் உடைகிறார். ஆதியும், அந்தமுமான இறைவனாய் இருக்கிறார் இயேசு. நாம் உடைகையில் அவரில் இணைகிறோம். அவரை உடைக்க நினைகையில் அழிவை அணைக்கிறோம்.
10. யூத மக்களுக்கு மட்டுமென இறைவன் உருவாக்கி வைத்திருந்த மீட்பின் திட்டம் பிற இனத்தாருக்குக் கிடைக்கும் எனும் நம்பிக்கையையும், உறுதியையும் இந்த உவமை விளக்குகிறது. இறையாட்சி உங்களிடமிருந்து அகற்றப்படும் எனும் வார்த்தைகள் யூதத் தலைவர்களை எரிச்சலூட்டின. அவர்கள் சட்டத்தின் மூலம் இறையாட்சியை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்தவர்கள். ஆனால் இறைமகனோ கனிகொடுக்கும் வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்
No comments:
Post a Comment