கடைசி இடத்தில் அமருங்கள்
லூக்கா 14 : 7 -14
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை;
“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.
அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.
மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.
***
இயேசுவின் இந்த போதனை, நேரடியான உவமையாக இல்லாமல் ஒரு அறிவுரை போல வந்திருக்கிறது. பந்திகளில் முதன்மையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என முண்டியடித்த மக்களைக் கண்ட இயேசு பொதுப்படையாக இந்த அறிவுரையைச் சொல்கிறார். அது ஆன்மீகச் செறிவான அறிவுரையாய் அமைந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் யூதர்கள் விருந்துக்கு தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலையாட்கள், பெரிய மனிதர்கள் போன்றவர்களை அழைப்பதுண்டு. ஆங்கில யூ வடிவிலான மேஜையில் அவர்கள் வந்தமர்வார்கள். விருந்துக்கு அழைத்தவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருப்பது மிகப்பெரிய கவுரவமாய் பார்க்கப்பட்டது. கடைசி இடத்தில் இருப்பது, குறைவானதாகக் கருதப்பட்டது. இந்த சூழலில் தான் இயேசு இந்த அறிவுரையைச் சொல்கிறார்.
இந்த பகுதி நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.
1. மேன்மை இறைவனிடமிருந்து கிடைக்க வேண்டுமெனில், தாழ்மை நம்மிடம் இருக்க வேண்டும். மற்றவர்களை உயர்வாகக் கருதி அவர்களுக்கு வழிவிட்டு நாம் கடைசி இடங்களில் அமரும் போது, நமது தாழ்மையைக் காணும் இயேசு நமக்கு மேன்மையைத் தருகிறார். இதற்கு மேல் தாழ்வான இடமில்லை எனுமளவில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பது நமக்குள் கர்வமில்லை என்பதன் அடையாளம்.
2. மனிதர்கள் முன்னிலையில் பெருமையடைய வேண்டும் எனும் சிந்தனையே தவறானது. மனிதர்களின் முன்னால் உயர்வாய்க் கருதிக் கொள்வதில் எந்த ஆன்மீக வளர்ச்சியும் இல்லை. இறைவன் முன்னிலையில் நாம் உயர்வாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். எனவே எந்த விஷயத்தைச் செய்யும் போதும் மனிதர் பார்வையில் இழச்சிக்குரியதாய் இருந்தாலும், இறைவன் பார்வையில் புகழ்ச்சிக்குரியதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இறைவனால் நமக்குக் கிடைக்கும் அழைப்பே மிகப்பெரிய விருது. எனவே அழைக்கப்பட்ட இடத்தில் நாம் முண்டியடிக்க தேவையில்லை. என்னை இறைவன் அழைத்திருக்கிறார் எனும் மகிழ்ச்சி மட்டுமே போதுமானது. இவ்வளவு பாவியான என்னை இறைவன் அழைத்திருக்கிறார் எனும் உணர்வு இருந்தால் நாம் வேறெந்த புகழ் தேடலுக்குள்ளும் புக மாட்டோம்.
4. அழைத்தவரே இருக்கைகளை நமக்கு அளிப்பவர். எந்த இருக்கையில் அமர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கக் கூடாது. அது இறைவனின் திட்டப்படியே நடக்க வேன்டும். நம்மை அழைத்தவருக்குத் தெரியும் நம்மை எங்கே அமர வைக்க வேண்டும் எனும் திட்டம். அதற்காய்க் காத்திருக்க வேண்டும்.
5. தாழ்மை என்பது உண்மையாய், ஆத்மார்த்தமாய் வரவேண்டும். இறைவனிடம் மேன்மை கிடைக்கும், இறைவனால் ஏதோ ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக வெளிக்காட்டப்படும் போலித்தனமான தாழ்மையாய் இருக்கக் கூடாது. உண்மையிலேயே இதயத்தில் “நான் இந்த இடத்துக்கானவன் தான்” எனும் சிந்தனை இருக்க வேண்டும்.
6. விருந்துக்கு நாம் அழைக்கும்போது பதிலுக்குப் பதில் செய்ய வலிமை அற்றவர்களையே அழைக்க வேண்டும். மற்ற அனைத்து வித விருந்துகளும் ஆன்மீக வெளிச்சத்தில் வெற்றிடங்களே. நண்பர், உறவினர், உடன் ஊழியர் எனும் எல்லா எல்லைகளையும் தாண்டிய ஏழைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரை விருந்துக்கு அழைக்க இறைவன் அறிவுறுத்துகிறார்.
7. மனிதரால் கிடைக்கும் கைமாறு, இறைவனால் கிடைக்கும் கைமாறு. இதில் எது வேண்டும் என தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது நமது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. இறைவனுக்கானதை விருப்பத்தோடு தேர்ந்தெடுக்கையில் மனிதர்களால் வரும் அங்கீகாரம் அர்த்தமற்றதாகிவிடும். மனிதர்களின் அங்கீகாரங்களை விரும்புகையில் ஆன்மீகம் அங்கே அஸ்தமனமாகிவிடும்.
8. இறைவன் பார்வையில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், செல்வந்தர்கள், தலைவர்கள் எல்லோருமே ஒன்று தான். நாம் பிறரைப் பார்க்கும் போது இறைவனின் பார்வையில் பார்க்க வேண்டுமே தவிர நமது பார்வையில் பார்க்கக் கூடாது.
9. நமது பார்வை மனிதர்களை அவர்களுடைய பொருளாதாரம், பதவி, அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையிலேயே அளவிடுகிறது. எனவே தான் விருந்துகளில் இவர்கள் இடம் பெறுகின்றனர். ஏழைகள் மீதியானவற்றின் பிள்ளைகளாய் வீதியில் நிற்கின்றனர். அந்த நிலையை மாற்ற வேண்டும். இறைவனின் பந்தியில் அனைவரும் சமம். அது போல, நமது அன்பின் பந்தியிலும் அனைவரும் சமமாய் இருக்க வேண்டும்.
10. தாழ்மையை அணிந்து கொண்டு இறை பணி ஆற்றுபவர்களுக்கும், இறைவனின் சித்தப்படி வாழ்பவர்களுக்கும் இந்த வாழ்வில் அவமானங்கள் கிடைக்கலாம். ஆனால் மறுவாழ்வில் நிச்சயம் வெகுமானம் உண்டு என்பதை இந்த அறிவுரை நமக்கு விளக்குகிறது.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
தாழ்மையை இதயத்தில் அணிந்திருப்போம்,
ஏழைகளை இதயத்தால் அரவணைப்போம்.
No comments:
Post a Comment