அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, July 26, 2024

வலையும், வாழ்வும்.

 வலையும், வாழ்வும்.

மத்தேயு 13 : 47 – 50

“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்

இங்கே இயேசு விண்ணக வாழ்க்கையை வலைக்கு ஒப்பிடுகிறார். வலை கடலில் வீசப்படும்போது பாகுபாடு பார்ப்பதில்லை. சில மீன்களுக்கு கண்ணியாகவும், சில மீன்களுக்கு கருணையாகவும் செயல்படுவதில்லை. மீன்கள் எல்லாமே வலைக்கு ஒன்று தான்.

எல்லா வகையான மீன்களையும் அள்ளி வருகின்ற மீன்களில் நல்ல மீன் எது கெட்ட மீன் எது என்பது நமக்குத் தெரியாது. அது மீனவர்களுக்கு மட்டுமே தெரியும். நமது பார்வைக்கு அட்டகாசமான மீனைப் போல தோன்றுவதை அவர்கள் ஜஸ்ட் லைக் தேட் தூக்கிப் போடுவார்கள்.

தூரத்திலிருந்து பார்த்தே ஒரு மீனின் எடையைக் கணிக்கும் அவர்களுடைய திறமையையும், மெதுவாகத் தொட்டுப் பார்த்தே ஒரு மீன் பிடிக்கப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லும் அவர்களுடைய திறமையையும் நேரடியாய் வியந்திருக்கிறேன்.

இயேசு சொல்லும் இந்த உவமை இரண்டு வித மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. இறைவார்த்தையைக் கேட்டு, இறைவனை ஏற்றுக் கொண்டு வழிவிலகிப் போகும் மக்கள் நிராகரிக்கப்பட்ட மீன்கள் எனலாம். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அந்த வலையின் உள்ளே மையத்தில் நின்று, இயேசுவை விட்டு வெளியே செல்ல விரும்பாத‌ மக்களை நல்ல மீன்கள் எனலாம்.

வலையில் தொங்கிக் கொண்டு கிழிந்த மீன்களை மீனவர் நிராகரிப்பார். உலகம், கடவுள் என உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுபவர்களின் நிலையும் அது தான். அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் செய்த முக்கியமான பணிகள் நான்கு.

ஒன்று விவசாயம். இயேசு தனது உவமைகளில் பலவற்றை விவசாயத்தோடு தொடர்பு படுத்திப் பேசினார். பயிராக வளராமல் களையாக இருந்தால் தூதர்கள் கைகளால் அறுபட்டு, தீச்சூளையில் எறியப்படுவோம் என எச்சரித்தார்.

இரண்டாவது தொழில், கால்நடை மேய்த்தல். அதை வைத்தும் அவர் பல உவமைகள் சொன்னார். செம்மரிகளையும், வெள்ளாடுகளையும் பிரிப்பேன். செம்மரியாடுகள் விண்ணகம் செல்ல, வெள்ளாடுகள் எரிநரகத்தில் எறியப்படும் என்றார்.

மூன்றாவது தொழில், வணிகம். நல்ல வணிகன் ஒரு நல்ல முத்தைக் கண்டடைவான். வணிகனின் கையில் நாம் ஒரு நல்ல முத்தாக இருக்க வேண்டும். அப்போது தான் விண்ணக வாழ்க்கை சாத்தியமாகும். விலைமதிப்பற்ற, போலித்தனமான முத்துகள் புறங்கையால் ஒதுக்கப்படும் என்றார்.

நான்காவது மீன்பிடி தொழில். இந்த உவமையில் நல்ல மீன்கள் கெட்ட மீன்கள் என தரம்பிரிக்கப்படும். நல்ல மீன்கள் மட்டுமே விண்ணகம் செல்லும் என்றார்.

விண்ணரசுக்கான உவமைகளில் கடைசியாக இந்த உவமையைச் சொல்லி, இதுவரை இறையரசின் செய்திகளைக் கேட்ட நீங்கள் மனம் திரும்பாவிடில் நீங்கள் நரகத்துக்கே தகுதியானவர்கள் என்கிறார் இயேசு.

தூதர்கள் விண்ணகத்தின் பிரதிநிதிகள். நல்ல விஷயங்களை மண்ணுலகிற்குப் பகிர்ந்தவர்கள். இயேசுவின் பிறப்பை அறிவித்ததும் அவர்கள் தான். இயேசுவின் உயிர்ப்பை அறிவித்ததும் அவர்கள் தான். நமக்கு பாதுகாவலர்களாய் இருப்பவர்களும் அவர்கள் தான். ஆனால் கடைசியில் நம்மை தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போவதும் அவர்கள் தான் !!!

நமது வாழ்வின் கடைசி வரை நமக்கு நன்மை செய்யவும், நன்மையைச் சொல்லவும் வழிகாட்டவும் இருக்கும் தூதர்கள் கடைசியில் நமக்கு தீர்ப்பிட வருவார்கள். அப்போது அவர்கள் சற்றும் வழுவாத நீதியுடன் செயல்படுவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதே போல இறைவார்த்தை நமக்கு வாழ்வளிக்கிறது. இறுதியில் அந்த வார்த்தையே நமக்கு தீர்ப்பிடும் வாளாகவும் மாறிவிடும் என்கிறது பைபிள். எனவே இறைவார்த்தையைக் கேட்கின்ற இந்த காலத்தில் நாம் மனம் திரும்பி இறைவனின் வழியில் வரவேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு.

உலகத்தின் முடிவு நிச்சயம் உண்டு. ஒவ்வொருவருடைய மரணமும், அவருடைய‌ உலகத்தின் முடிவு. இறுதித் தீர்ப்பு இறைவன் முடிவு செய்யும் நாளில் நடக்கும். இப்போது வலை வீசப்பட்டுள்ளது. இந்த வலைக்குள் நுழைந்து இறைவனின் எல்லைக்குள் பிரியத்துடன் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.

இறைவனுக்கு ஏற்புடைய நல்ல‌ மீன்களாக வாழும் ஒவ்வொருவரும் இறைவனின் கூடையில் நுழைவது நிச்சயம். இறைவார்த்தையைக் கேட்டபின்பும் கெட்ட மீன்களாகவோ அல்லது இரண்டாங்கெட்டானாகவோ வாழ்பவர்கள் முடிவில்லா நெருப்பில் விழப் போவதும் சர்வ நிச்சயம்.

வலைவாழ்வே நிலைவாழ்வு !

மனம் வருந்துவோம்

உடன் திருந்துவோம். 

No comments:

Post a Comment