நற்கருணை (Eucharist) கிறித்தவ சமயத்தில் ஆண்டவரின் திருவிருந்து, திருப்பீடத்தின் அருட்சாதனம், ஒன்றிப்பின் உணவு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நற்கருணை திருவிருந்து, இயேசு தனது இறுதி இரவுணவு வேளையில் வழங்கிய அறிவுரைகளுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. இயேசுவின் சிலுவைப் பலியின் முன் அடையாளமாக உருவாக்கப்பட்ட நற்கருணை பலி, அவரது திருவிருந்தையும் கல்வாரித் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் வரையறையின்படி நற்கருணை என்பது கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.
பெயரும் காரணமும்
நற்கருணை என்ற வார்த்தை அப்பத்திலும் இரசத்திலும் கடவுளின் கருணை பிரசன்னத்தைக் குறிக்கும் பொருளில் தோன்றியது; பொதுவாக கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே இந்த தமிழ் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டவரின் திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவுணவைக் குறிக்கிறது.
திருப்பீடத்தின் அருட்சாதனம் என்னும் சொல் பலிபீடத்தில் நிறைவேற்றப்படும் அருட்சாதனம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒன்றிப்பின் திருஉணவு என்பது இதை உண்போரிடையே ஒன்றிப்பை உருவாக்கும் உணவு என்னும் பொருளைத் தருகிறது.
அருட்சாதன அடிப்படை
நற்செய்திகள்
'அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.' (மத்தேயு 26:26-29)
'இயேசு அவர்களிடம், "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." (யோவான் 6:51,53-56)
தொடக்க கிறிஸ்தவர்கள்
'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.' (திருத்தூதர் பணிகள் 2:42)
"கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்." (1 கொரிந்தியர் 10:16-17)
புனித பவுலின் போதனை
"ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்." (1 கொரிந்தியர் 11:23-26)
தொடக்க கிறிஸ்தவ மூலங்கள்
கி.பி.2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட டிடாக்கே என்ற கிறிஸ்தவ போதனை நூல் திருமுழுக்கு, நற்கருணை ஆகியவை பற்றிய ஒழுங்குமுறைகளைத் தருவதுடன், நற்கருணை பற்றிய இரண்டு மரபுகளையும் அதன் 9 மற்றும் 10ஆம் அத்தியாயங்களில் தருகிறது; 14ஆம் அத்தியாயத்திலும் நற்கருணை பற்றி குறிப்பிடுகிறது.
திருத்தூது தந்தையர்களில் ஒருவரான அந்தியோக் புனித இக்னேசியஸ் (-சுமார் கி.பி.117), நற்கருணையை "நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சதை" என்று குறிப்பிடுகிறார். மேலும் மறைசாட்சியான புனித ஜஸ்டின் இதை உணவைவிட மேலானதாக குறிப்பிடுகிறார்: "நன்றியறிதல் செபமும், கிறிஸ்துவின் வார்த்தைகளும் சொல்லப்படுகின்ற உணவு ... உடலெடுத்த இயேசுவின் சதையும் இரத்தமுமாக இருக்கிறது ... இதில் பங்குபெறாத சிலருக்கு வழங்க திருத்தொண்டர்கள் இதை எடுத்து செல்கின்றனர்."
நற்கருணை இறையியல்
பல கிறிஸ்தவ பிரிவுகள் நற்கருணையை ஒரு அருட்சாதனமாகக் குறிப்பிடுகின்றன. சில புராட்டஸ்டான்ட்கள் இதை கடவுளின் அருளைப் பெறும் வழியாகப் பார்க்காமல், கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அவரது இறுதி இரவுணவின் நினைவாகச் செய்யப்படும் ஒரு மதச் சடங்காக மட்டும் நினைக்கின்றனர்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள், நற்கருணை வழிபாட்டில் கிறிஸ்துவின் சிறப்பான பிரசன்னம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் பிரசன்னம் எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறது என்பதில் கிறிஸ்தவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கீழைத் திருச்சபை ஆகியவை வழிபாட்டில் அர்ப்பணிக்கப்பட்ட நற்கருணை அப்பமும் இரசமும் நிலைத்திருக்கும் வரை அவற்றில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமும் நீடித்திருக்கிறது என்று போதிக்கின்றன. கத்தோலிக்க திருச்சபை, திருப்பலி வேளையில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம், இரசம் ஆகியவற்றின் தோற்றமோ, பண்போ, சுவையோ மாறாமல், அவற்றின் கருப்பொருள் (matter of substance) மட்டும் வியத்தகு முறையில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்று போதிக்கிறது; மேலும், இந்த நிகழ்வை உட்கருப்பொருள் மாற்றம் (transubstantiation) என்று அழைக்கிறது. லூதரனியர்கள், அப்பம் மற்றும் இரசத்தின் வடிவில் இயேசுவின் உடலும் இரத்தமும் பிரசன்னமாகிறது என்று நம்புகின்றனர்; இது அருட்சாதன ஒன்றிப்பு எனப்படுகிறது. கால்வின் போதனைகளைப் பின்பற்றும் சபைகள், நம்பிக்கையின் அடிப்படையிலேயே நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் அமைந்து இருக்கிறது என்று நம்புகின்றன. ஆங்கிலிக்கர்கள், நற்கருணையில் கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் என்பது விண்ணகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது என்று நம்புகின்றனர். சில கிறிஸ்தவர்கள் இதில் இயேசுவின் உண்மை பிரசன்னம் என்னும் கருத்தை மறுப்பதுடன், நற்கருணையை கிறிஸ்துவின் மரணத்தின் நினைவாக மட்டும் பார்க்கின்றனர்.
உலகத் திருச்சபைகளின் மன்றம் வெளியிட்டுள்ள திருமுழுக்கு, நற்கருணை மற்றும் மறைபரப்பு பணி ஆவணம் கிறிஸ்தவர்களிடையேயான நற்கருணை பற்றிய பொதுவான புரிந்துகொள்ளுதலை எடுத்துரைக்கிறது. அதில் நற்கருணை "கடவுளால் நமக்காக கிறிஸ்துவில் தூய ஆவியாரின் வல்லமை வழியாக உருவாக்கப்படும் தேவையான அருட்கொடையின் அருட்சாதனம்", "தந்தை கடவுளுக்கான நன்றியறிதல்", "கிறிஸ்துவின் நினைவு", "நமக்காக எப்பொழுதும் வாழ்ந்து பரிந்துபேசும் கிறிஸ்துவின் ஒப்பற்ற பலியின் அருட்சாதனம்", "கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத்தின் அருட்சாதனம், அவரது உண்மை பிரசன்னத்தின் அருட்சாதனம்", "ஆவியின் மன்றாட்டு", "விசுவாசிகளின் ஒன்றிப்பு", "இறையரசின் திருஉணவு" என்று விவரிக்கப்படுகிறது.
சடங்கும் வழிபாடும்
கத்தோலிக்க திருச்சபை
கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் திருப்பலி என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க போதனையின்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார், அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெறுபவரும் கிறிஸ்துவை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்.
இறுதி இரவுணவு வேளையில் இயேசு கூறிய வார்த்தையின் அடிப்படையில், நற்கருணை கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபை நோக்குகிறது: ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு 26:26-28; மாற்கு 14:22-24; லூக்கா 22:19-20) மற்றும் பவுல் எழுதிய திருமுகம் (1 கொரிந்தியர் 11:23-25) ஆகியவற்றின்படி, இயேசு அப்பம் மற்றும் இரசம் ஆகியவற்றை சீடர்களிடம் அளித்து, "இது என் உடல் … இது என் இரத்தம்" என்று கூறினார். கத்தோலிக்க திருச்சபை இவ்வார்த்தைகளை, பூர்வீக எழுத்தாளர்களின் பின்னணியில் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை வரலாற்றோடு இணைத்து புரிந்துகொள்கிறது. பழைய ஏற்பாட்டின் பின்னணியில் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு தரப்படும் விளக்கம் நற்கருணையில் அவரது உண்மை பிரசன்னத்தை ஆதரிப்பதாக உள்ளது. 1551ல் திரெந்து பொதுச்சங்கம் பின்வருமாறு வரையறுத்து அறிக்கையிட்டது: "நம் மீட்பரான கிறிஸ்து அவரால் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்மையான தனது உடல் என்று கூறியதால், அது எப்போதும் கடவுளின் திருச்சபையின் உறுதியான நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்பமும் இரசமும் முழுமையாக மாற்றம் அடைந்து, அப்பத்தின் பொருள் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், இரசத்தின் பொருள் அவரது கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறுகின்றன என்பதை இந்த திருச்சங்கம் இப்போது மீண்டும் அறிக்கையிடுகிறது. இந்த மாற்றத்தை புனித கத்தோலிக்க திருச்சபை சரியாகவும் முறையாகவும் உட்கருப்பொருள் மாற்றம் என்று அழைக்கிறது." 1215ல் நான்காம் லாத்தரன் பொதுச்சங்கம், "இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும், திருப்பீடத்தின் அருட்சாதனத்தில் அப்பம், இரசம் ஆகியவற்றின் வடிவில் அடங்கியிருக்கின்றன; இறை வல்லமையால் அப்பம் உடலாகவும், இரசம் இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன." திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ல் தனது சுற்றுமடலான விசுவாசத்தின் மறைபொருள் (Mysterium fidei) 1968ல் தனது இறைமக்களின் நம்பிக்கை (Credo of the People of God) ஆகியவற்றில், நற்கருணை குறித்த விசுவாசக் கோட்பாட்டை விளக்கும் எந்த இறையியல் விளக்கமும் பின்வரும் இரு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார்: திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, 1) கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே இருக்கிறது; மேலும் 2) அப்பமும் இரசமும் உண்மையாகவே இல்லை; மேலும் இந்த இருப்பும் இன்மையும் உண்மையானவை, நம்புபவரின் மனதைப் பொறுத்த ஒன்று அல்ல.
ஆலயத்தில் நுழைந்தவுடன் ரோமன் கத்தோலிக்கர்கள் நற்கருணை பேழையின் முன்பாக மண்டியிட்டு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை வணங்கி ஆராதிக்கின்றனர். இயேசுவின் பிரசன்னத்தை உணர்த்தும் வண்ணம் நற்கருணை பேழையின் அருகில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
மரபுவழி திருச்சபை
மரபுவழி திருச்சபையைச் சார்ந்த கீழை ரீதி கிறிஸ்தவர்கள் நற்கருணை வழிபாட்டை இறை வழிபாடு என்று அழைக்கின்றனர். இது இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: முதலாவது தயாரிப்பு வழிபாடு, இதில் தொடக்க மன்றாட்டுகள், விவிலிய வாசகங்கள் மற்றும் மறையுரை ஆகியவை இடம் பெறுகின்றன; இரண்டாவது விசுவாசிகளின் வழிபாடு, இதில் நற்கருணை அர்ப்பணிக்கப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. இதில் நற்கருணை மன்றாட்டு அனஃபோரா (anaphora, (ἀνα- + φέρω) literally: "offering" or "carrying up") என்று அழைக்கப்படுகிறது. கான்ஸ்டான்டிநோபுள் வழிபாட்டு ரீதியில் புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பேசில் ஆகியோரின் இரண்டு வேறுபட்ட அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழை மரபுவழி திருச்சபைகளில், கான்ஸ்டான்டிநோபுள் ரீதிக்கு ஒத்த வடிவமுடைய பல அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்ஃபோராவின் இறுதியில் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் கருதப்படுகின்றன. ரோம் திருச்சபையைப் போலன்றி, கிழக்கு மரபுவழி திருச்சபையில் புளித்த அப்பம் பயன்படுத்தப்படுகிறது; இது தூய ஆவியின் பிரசன்னத்தை அடையாளப்படுத்துகிறது. ஆர்மேனிய அப்போஸ்தல திருச்சபையில், ரோம் திருச்சபையைப் போன்றே புளிப்பற்ற அப்பம் பயன்படுத்தப்படுகிறது.
முறைப்படி இந்த அர்ப்பண பொருட்களின் மாற்றம் தூய ஆவியின் உதவியைக் கோரி, அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற ஒப்புக்கொடுக்கும் மன்றாடின் (கிரேக்க மொழி: Epiclesis) நிறைவில் நிகழ்கிறது.
சிரியாக் திருச்சபை
புனித காணிக்கை அல்லது புனித பலி என்பது கீழை சிரியன் ரீதி மற்றும் மேலை சிரியன் ரீதி மரபுகளின் சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை வழிபாடு கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான முறையாகும்.
ஆங்கிலிக்கன் திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியத்தின் பெரும்பாலான ஆலயங்களில், ஒவ்வொரு ஞாயிறும் காலை செபத்துக்கு மாற்றான முதன்மை வழிபாடாக நற்கருணை கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் பல்வேறு பொது செப புத்தகங்களில் இதற்கான வழிபாட்டு முறைகள் இடம் பெற்றுள்ளன; இதில் அப்பமும் இரசமும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான கதீட்ரல்களில் தினமும், பங்கு ஆலயங்களில் வாரத்தில் பல முறைகளும் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இதன் வழிபாட்டு முறைகள் இடத்துக்கும், மக்களின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.
மிக சிறப்பான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கும் உங்களுக்கும் மிகுந்த நன்றி. ஆமேன்.
ReplyDelete