திருத்தந்தை ஃபேபியன் (Pope Fabian) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 236 சனவரி 10ஆம் நாளிலிருந்து 250 சனவரி 20ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை அந்தேருஸ் ஆவார். திருத்தந்தை ஃபேபியன் கத்தோலிக்க திருச்சபையின் 20ஆம் திருத்தந்தை ஆவார்.
ஃபேபியன் (இலத்தீன்: Fabianus) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "ஃபேபியுஸ் குடும்பத்தவர்" என்னும் பொருள்தரும்.
வரலாறு
பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் செசரேயா யூசேபியுஸ் (Eusebius of Caesarea) என்பவர் தாம் எழுதிய "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“உரோமை நகருக்குப் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கிறித்தவர்கள் ஒன்றுகூடினார்கள். அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையோர் பலர் இருந்தார்கள். ஆனால் குருகுலத்தைச் சாராத, பொதுநிலையினராக இருந்த எளிய மனிதரான ஃபேபியன் மீது ஒரு புறா வந்திறங்கியது. உடனே மக்கள் ஒரே குரலாக 'ஃபேபியன் திருத்தந்தை ஆக வேண்டும்' என்று குரலெழுப்பினார்கள்.”
உரோமைப் பேரரசன் அராபிய பிலிப்பு (Philip the Arab) (ஆட்சி: 244-249) என்பவருக்கும் அப்பேரரசரின் மகனுக்கும் ஃபேபியன் திருமுழுக்குக் கொடுத்து அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேர்த்தார் என்று ஒரு மரபுச் செய்தி உள்ளது.
ஃபேபியன் கிறித்தவக் கல்லறைத் தோட்டங்களை மேம்படுத்தினார் என்றும், சபை நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தினார் என்றும், மறைச்சாட்சிகளாக இறந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பதிவுசெய்ய அலுவலர்களை ஏற்படுத்தினார் என்றும் தெரிகிறது.
பிற்கால வரலாற்று ஏடுகள்படி, உரோமை மன்னன் டேசியஸ் (Decius) கிறித்தவ சமயத்தைக் கடுமையாகத் துன்புறுத்தியதால் அழிந்துபோகும் நிலையிலிருந்த அச்சமயத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் வண்ணம் ஃபேபியன் இன்றைய பிரான்சு நாட்டுப் பகுதியான காலியாவில் (Gaul) கிறித்தவ மறையைப் பரப்புவதற்கு கிபி 250இல் மறைப்போதகர்களை அனுப்பினார்.
பிரான்சு பகுதியில் மறைபரப்புவதற்காக ஃபேபியன் அனுப்பிய ஆயர்கள்:
தூர் நகர கிராசியான் - சென்ற இடம்: தூர்
ஆர்ல் நகர த்ரோஃபிமுஸ் - சென்ற இடம்: ஆர்ல்
நார்போன் நகர பவுல் - சென்ற இடம்: நார்போன்
சத்தூர்னியன் - சென்ற இடம்: தூலுஸ்
டெனிஸ் - சென்ற இடம்: பாரிசு
ஆஸ்த்ரோமோன் - சென்ற இடம்: க்ளேர்மோன் மறைமாவட்டம்
புனித மார்சியல் - சென்ற இடம்: லிமோஜ்
சார்தீனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இறந்த திருத்தந்தை போன்தியன் மற்றும் இப்போலித்து ஆகியோரின் உடல்களை அங்கிருந்து உரோமைக்குக் கொண்டுவர ஃபேபியன் ஏற்பாடு செய்தார்.
கிறித்தவம் துன்புறுத்தப்படலும் ஃபேபியன் மறைச்சாட்சியாக இறத்தலும்
திருத்தந்தை ஃபேபியன் உரோமை மன்னன் டேசியஸ் ஆட்சியின் போது கொல்லப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்நீத்தார் (250, சனவரி 20).
உரோமை மன்னன் அராபிய பிலிப்பு காலத்தில் திருச்சபை அமைதியாக செயல்பட்டது. ஆனால் கிபி 249இல் பிலிப்பு மன்னனின் எதிரியாக இருந்த டேசியஸ் என்பவர் பிலிப்பைக் கொன்றுவிட்டு பதவியைக் கைப்பற்றினார். வெளியிலிருந்து படையெடுப்பைத் தடுக்க வேண்டும் என்றால் உள்நாட்டில் மக்கள் ஒரே மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டேசியஸ் கருதினார்.
எனவே, உரோமை மக்கள் எல்லாரும் மரபுசார்ந்த உரோமை மதத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கிறித்தவர்கள் தம் மதத்தைக் கடைப்பிடித்தால் தேசத்துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் மன்னர் அறிவித்தார். உரோமைப் பேரரசின் தெய்வங்களுக்குப் பலி ஒப்புக்கொடுத்து, எல்லாக் குடும்பங்களும் ஓர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவேண்டும், அவ்வாறு அடையாள அட்டை பெறாதவர்கள் சிறைத்தண்டனையும் கொலைத்தண்டனையும் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.
அடையாள அட்டை பெறாதவர்கள் நாட்டுக்கு எதிரிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கருதப்பட்டனர். இதற்கு கிறித்தவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். சிலர் உயிர்பிழைப்பதற்காக மன்னன் கேட்டபடி பலி செலுத்தி அடையாள அட்டை பெற்றார்கள். வசதிபடைத்தவர்கள் பணம் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அரச ஆணையை எதிர்த்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாயினர்.
அரச ஆணையை எதிர்த்தவர்களுள் திருத்தந்தை ஃபேபியன் முக்கியமானவர். அரச அலுவலர்கள் ஃபேபியனைக் கைதுசெய்தனர். துல்லியானோ (Tulliano) சிறையில் அவரை அடைத்தனர். அங்கு அவர் பட்டினியாலும் களைப்பாலும் 250 சனவரி மாதம் 20ஆம் நாள் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார்.
அடக்கம்
திருத்தந்தை ஃபேபியனின் உடல் கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் திருச்சபையால் மறைச்சாட்சியாகப் போற்றப் படுகிறார்.
ஃபேபியனின் கல்லறைக் குழி 1850இல் அகழ்வாளர் ஜோவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லெழுத்து கிரேக்க மொழியில் உள்ளது. இப்போது அவரது தலை மீபொருள் புனித செபஸ்தியான் பெருங்கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையர் நூல் தரும் பிற செய்திகள்
திருத்தந்தை ஃபேபியன் பற்றி "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டில் மேலும் சில செய்திகள் உள்ளன. திருத்தந்தை திருச்சபை பரவியிருந்த பகுதிகளை ஏழு மண்டலங்களாகப் பிரித்தார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு திருத்தொண்டரை (deacon) பொறுப்பாக நியமித்தார். ஏழு துணைத்திருத்தொண்டர்களையும் (subdeacons) ஏற்படுத்தி, அவர்கள் பிற அலுவலர்களோடு சேர்ந்து, மறைச்சாட்சிகளாக உயிர்நீத்த கிறித்தவர்கள் பற்றிய நீதிமன்ற விசாரணைக் குறிப்புகளைச் சேகரித்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.
திருமுழுக்கின்போது பயன்படுத்தப்படுகின்ற திருத்தைலத்தை (chrism) தயாரிக்கும் முறையை இயேசுவே தம் திருத்தூதர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் என்றும், அந்த அறிவு வழிவழியாக வந்துள்ளது என்றும் ஃபேபியன் ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.
பண்டைக்காலக் கிறித்தவ அறிஞர்கள் பலரும் திருத்தந்தை ஃபேபியன் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக, புனித சிப்ரியான், நோவாசியான் ஆகியோரைக் கூறாலாம். ஃபேபியனைப் பற்றிப் பேசும்போது நோவாசியான் "அவர் மிகச் சிறப்பு வாய்ந்தவர்" என்றுரைக்கிறார். ஓரிஜென் என்னும் பண்டைக் கிறித்தவ எழுத்தாளரும் ஃபேபியனோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். ஓர் ஆசிரியர் ஃபேபியன் என்னும் பெயரை "ஃப்ளேவியன்" என்று குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment