நாள்: அக்டோபர் 7
வகை: நினைவு
பின்னணி
கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாளுக்குத் தோன்றி, “அருள்நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து உரத்த குரலில் மரியாளிடம், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!” என்றார். (லூக்கா 2:28,42) கடவுளிடம் இருந்து வந்த இவ்வாழ்த்தின் வழியாக, அன்னை மரியாளின் உதவியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இத்திருநாள் நமக்கு எடுத்துரைக்கிறது.
வரலாறு
மங்கள வார்த்தை செபத்தை 150 முறை சொல்லி செபமாலையாக அர்ப்பணிக்கும் வழக்கம் 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. 1208ல் அன்னை மரியாளைக் காட்சியில் கண்ட புனித தோமினிக், தமது சபையினர் மூலம் செபமாலை பக்தியை மக்களிடையே ஊக்குவித்தார். 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கார்த்தூசியன் துறவி தோமினிக், செபமாலைக்கான விவிலிய சிந்தனைகளை 1410ல் அறிமுகம் செய்தார். 1464ஆம் ஆண்டு, மகிழ்ச்சி, துயரம், மகிமை ஆகியவற்றின் 15 மறையுண்மைகளை அருளாளர் ஆலன் தெ ரூப்பே வெளியிட்டார். 1569ல் திருத்தந்தை புனித 5ம் பயஸ், அதிகாரப்பூர்வ செபமாலை பக்தியை ஏற்படுத்தினார்.
1571 அக்டோபர் 7ந்தேதி ரோமில் நடைபெற்ற செபமாலை திருப்பவனியால், லெப்பன்டோ கடற்போரில் துருக்கியரைத் தோற்கடித்து கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றனர். அதேநாளில், திருத்தந்தை புனித 5ம் பியுஸ் ‘வெற்றியின் அன்னை’ விழாவை ஏற்படுத்தினார். 1573ல் திருத்தந்தை 13ம் கிரகோரி, இதற்கு ‘திருச்செபமாலை விழா’ என்று பெயர் மாற்றினார். திருச்செபமாலை விழாவை அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிய திருத்தந்தை 11ம் கிளமென்ட், 1716ஆம் ஆண்டில் திருச்சபை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.
செபமாலையின் திருத்தந்தை என்று அழைக்கப்படும் 13ம் லியோ, 1883ல் அக்டோபரை செபமாலை மாதமாக அறிவித்தார். இதனால், “திருச்செபமாலையின் அரசியே, எங்களுக்காக மன்றாடும்” என்ற மன்றாட்டு தோன்றியது. 1913ல் திருத்தந்தை புனித 10ம் பியுஸ், திருச்செபமாலை விழாவை அக்டோபர் 7ந்தேதிக்கு மாற்றம் செய்து ஆணையிட்டார். 1917ஆம் ஆண்டு பாத்திமாவில் காட்சி அளித்த கன்னி மரியாள், “நான் செபமாலை அன்னை” என்று கூறினார். இதன் அடிப்படையில் இத்திருநாளை, ‘செபமாலை அன்னை’ விழா என்று 1960ல் திருத்தந்தை 23ம் யோவான் பெயர் மாற்றம் செய்தார். 2002ல் திருத்தந்தை 2ம் யோவான் பவுல், இயேசு கிறிஸ்துவின் பணி வாழ்வை மையப்படுத்தி ஒளியின் மறையுண்மைகளை செபமாலையில் இணைத்தார்.
No comments:
Post a Comment