அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

திருப்பலி விளக்கம் - நற்கருணை மன்றாட்டு

ஆ.நற்கருணை மன்றாட்டு
உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் நற்கருணை மன்றாட்டு பற்றிய பின்வரும் குறிப்பை வாசிக்கிறோம்:

“திருப்பலி கொண்டாட்டம் முழுவதற்கும் மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருனை மன்றாட்டு... நன்றி மன்றாட்டாகவும் புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறை வேண்ட லுடனும், நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருன்பணியாளர் அழைப்பார். அவர்களை தம்முடன் இறைவேண்டலில் இணைத்து திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைதந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெறும் செயல்களை அறிக்கையிடுவதிலும், பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது.” ( எண் 78).

இந்த மேற்கோவிலிருந்து நற்கருணை வழிபாட்டில் பயனுள்ள முறையில் பங்கு கொள்வதற்கு நற்கருணை மன்றாட்டுகளைச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமென்பது தெளிவாகிறது. எனவே இப்பொழுது நற்கருணை மன்றாட்டுகளின் பின்னணி, தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, அவற்றில் பொதிந்துள்ள இறையியல் சிந்தனை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

1. நற்கருணை மன்றாட்டுகளின் பின்புலம்
நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இறுதி இரவு உணவு பகுதியில் பயன்படுத்தபட்டுள்ள “நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து” எனும் வார்த்தைகள் நற்கருணை மன்றாட்டு தோன்றுவதற்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றாலும், இப்பகுதி நற்கருணை மன்றாட்டு தோன்றிய விதமனைத்தையும் விளக்குகிறது என்று சொல்ல முடியாது. எனவே இதன் மூலத்தை வேறு இடங்களில் தேட வேண்டும்.

1.1. யூதர்களின் பெராக்கா (Berakah)
யூதர்களுக்கு ஒவ்வொரு உணவும், குறிப்பாக பாஸ்கா விழாவுக்கு முந்தினநாள் மாலை உணவு திருவழிப்பாட்டுத் தன்மை உடையதாக இருந்தது. அப்பத்தையும், இரசக்கிண்ணத்தையும் ஆசீர்வதித்தல். யூதர்களின் அன்றாட செப அமைப்பின் ஒரு கூறாக இருந்தது. அவர்களுடைய “யாவே வழிபாட்டில்” இறை புகழ்ச்சி சிறப்பிடம் பெற்றிருந்தது. மனித வரலாற்றில் விளங்கும் இறைவனின் அன்புக்கு, மனிதர் காட்டும் நன்றியறிதலும், வாழ்த்துரையும் ஒரு பதிலுரையாக அமைந்திருந்தது. தம் வியத்தகு படைப்பு செயலினால் இறைவன் பேச, அவருடைய படைப்பின் கைவன்மைக்குப் புகழ் கூறி மனிதன் பதிலளித்தான்
(காண் சங் 26:7). எனவே யூதர்களின் “இறைபுகழ்ச்சி” இயல்பிலேயே இறை வார்த்தைக்கு அளிக்கும் பதில் மன்றாட்டாக இருந்தது. இறைவன் தங்களுக்குச் செய்தவற்றை வெளிப்படை யாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும், நம்பிக்கையை வெளிப்படுத்து வதாகவும் இருந்தது. இவ்வாறு அது மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த இறை புகழ்ச்சியாக இருந்தது.

இது போன்ற புகழ்ச்சி மன்றாட்டுக்குப் பழைய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன ( காண் தொ.நூ 24:27; 1அரச 1:48). புதிய ஏற்பாட்டிலும் இறைபுகழ்ச்சிக்குச் சான்றுகளைக் காணலாம்( காண் மத் 11:25‡27; எபே 1:3‡14) . இப்புகழுரைகள் கடவுளின் வியத்தகுச் செயல்களைப் பிந்திய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தின. அவர்களும் இச்செயல்களை நினைவு கூர்ந்து இறைவனைப் போற்றி புகழ்ந்தனர். கால போக்கில் இப்புகழுரைகள் மாறாத வாய்ப்பாட்டு செபங்களாக மாறின. (Stereotype formulas). யூதர்களிடையே பழக்கத்திலிருந்த 18 புகழுரைகள் குறிப்பிடத்தக்கவை.

1.2. புதிய ஏற்பாட்டில் பின்னணி
புதிய ஏற்பாட்டில் “ நன்றி கூறுதல்” என்பதற்கு “யூக்கரிஸ்தேயின்”(Eucharistein) என்ற கிரேக்கச் சொல்லும், “புகழுரைத்தல்” என்பதற்கு “யூலோகேயின்” (Eulogein) என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் எபிரேய மொழியில் “நன்றி கூறுதல்” என்பதற்குத் தனிச்சொல் கிடையாது. எனவே இக்கருத்தை வெளிப்படுத்த “பெராக்கா” (Berakah=இறை புகழ்ச்சி) என்றே சொல்லே பயன்படுத்தப்பட்டது.
அப்பம் பலுகுதலை விவரிக்கும் பகுதிகள் இறுதி இரவு உணவைப்பற்றி கூறும் பகுதியுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டுள்ளன. ( காண். மாற் 6:35; 8:26). மாற்6:41 இல் நற்செய்தியாளர் “இறை புகழ்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யோவானோ அதே புதுமையை விவரிக்க “நன்றி கூறுதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ( யோவா 6:11). மாற்கு ஏழு அப்பம் பலுகுதலை விவரிக்குமிடத்தில் ( 8:6) “நன்றி கூறுதலும்” என்ற சொல்லை உபயோகிக்கிறார். இதிலிருந்து“நன்றி கூறுதலும்”, “இறை புகழ்ச்சியும்” ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என உணர முடிகிறது.

இது போன்றே மத்தேயும், மாற்கும் அப்பத்தைப்பற்றிக் கூறும்போது “இறைபுகழ்” என்றும், கிண்ணத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது “நன்றி” என்றும் சொல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் பவுலும், லூக்காவும் இரண்டு செயல்களுக்கும் “நன்றி கூறி” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். முதல் கிறிஸ்தவர் களுக்கும் இவ்விரு சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தின ( காண் 1 கொரி 14: 16‡17) இவ்வாறு ( 1 ) இயேசுவின் இறுதி இரா உணவும் (2) யூதர்களின் “பெராக்காவும்” ( 3) புதிய ஏற்பாட்டுக் கால மக்களின் “ இறை புகழுரைதல்” மற்றும் “நன்றி கூறுதலும்” நற்கருணை மன்றாட்டுக்கு பின்னணியாக அமைந்தன.

2. நற்கருணை மன்றாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
நமது ஆண்டவர் தமது இறுதி உணவின்போது தம் சீடர்களுக்கு அப்பத்தையும் கிண்ணத்தையும் அளித்து, “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்றார். இது தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் நற்கருணை மன்றாட்டைத் தமக்கேற்ப அமைத்துக் கொள்ள வாய்ப்பும், உரிமையும் அளித்தது.

முதல் கிறிஸ்தவர்கள் காலத்தில் “ நற்கருணை வழிபாடு” பொது உணவு வேளையின் முடிவில் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக நம் ஆண்டவருடைய இறுதி உணவின் இரு “இறைபுகழுரைகளும்” ( துவக்கத்திலும் முடிவிலும்) ஒரே இறைபுகழ் மன்றாட்டாக இணைக்கப்பட்டன. இதிலிருந்துதான் பிற்கால நற்கருணை மன்றாட்டு செபங்கள் விரிவாக்கப்பட்டன.

நற்கருணை மன்றாட்டைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துத் தொகுக்கக்கூடிய வாய்ப்பு அதன் பொது அமைப்பிலே இருந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வரையறுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் ஏதுவும் இல்லை. இதை மறைசாட்சியான புனித ஜஸ்டின் என்பவருடைய “ சமயதற்காப்பு” (Apology of Justin) உரையிலும், அதன் உட்கூறுகளின் சுருக்கத்தை ஹிப்போலிட்டஸ் (Hypolitus) என்பவரின் “திருத்தூதர்களின் மரபு” (Apostolic Tradition) என்ற நூலிலும் இருந்து அறிகிறோம்.

நான்காம் நூற்றாண்டிற்கு முன் ஒரே ஒரு நற்கருணை மன்றாட்டு இருந்ததாக புனித ஜஸ்டின் குறிப்பிடுகிறார். மேலும் அது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். எனினும் 4‡ஆம் நூற்றாண்டி லிருந்து, வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் தேவையயனும் ஒரு பொதுவான மனப்பாங்கு நிலவி வந்தது. இத்தகைய எண்ணம் முதலில் கீழக்குத் திருஅவையில் தான் தோன்றியது. ஏனெனில் இது “ஆரியனிஸம்” (Arianism) போன்ற தப்பறையான கொள்கைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தவும் பாதுக்காகவும் அவசியம் என உணரப்பட்டது.

இதன் விளைவாக கால போக்கில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நற்கருணை மன்றாட்டுகள் தோன்றின. இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன.

1. எகிப்திய அல்லது அலெக்சாந்திரிய வழிபாடு
2. அந்தியோக்கியா அல்லது மேற்குசீரியா வழிபாடு
3. கிழக்கு சீரிய வழிபாடு
4. உரோமைய வழிபாடு
5. கல்லிக்கன் மற்றும் ஸ்பெயின் சார்ந்த வழிபாடு

இவற்றுள் உரோமை வழிபாட்டு முறையைச் சார்ந்த நற்கருணை மன்றாட்டு (உரோமைத் திருமுறை-Roman Canon) காலபோக்கில் மேற்குதிரு அவையில் 11-ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப் பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் இது மட்டுமே உலகெங்கும் இலத்தின் திருஅவையில் பரவி நிலைத்து 1970 வரை நின்றது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உரோமை வழிபாட்டில் மற்றும் மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்ட பின் இந்த உரோமன் திருமுறை சிலசிறு மாற்றங்களுடன் முதல் நற்கருணை மன்றாட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது இலத்தீன் திருஅவையில் நான்கு நற்கருணை மன்றாட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றோடு ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவரோடு நிகழ்த்தும் திருப்பலிக்கான நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும், பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சிறுவர்களுக்கான திருப்பலியின் மூன்றாவது நற்கருணை மன்றாட்டு இருபாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு நற்கருணை மன்றாட்டுகளின் கருப்பொருள் ஒன்றே. அதாவது இறைவன் புரிந்த அரும்பெரும் செயல்களுக்குப் புகழ்பாடி, நன்றிகூறி மன்றாடுவதாகும். திருப்பலியில் கிறிஸ்துவின் மீட்புச்செயல் நினைவு கூறப்படுகிறது. இதற்கு மூலக்காரணராகிய இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறப்படுகிறது. மீட்பின் பலனை நம்பிக்கையாளர் அடையும்படி மன்றாட்டுகள் இடம் பெறுகின்றன. அவை பயனை விளைவிக்கும்படி காணிக்கைகள், அதாவது பலிபொருள் (கிறிஸ்துவே) ஒப்புக் கொடுக்கப்படுகிறது.

3. நற்கருணை மன்றாட்டின் அமைப்பும் பொருளும்
நற்கருணை மன்றாட்டு “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்ற தொடக்க உரையாடலில் ஆரம்பித்து இறுதி புகழுரைக்குப் (Doxology) பின் நம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் “ஆமென்” என்ற பதிலோடு நிறைவடைகிறது.

3.1 தொடக்க உரையாடல்
தொடக்கவுரை (Preface) திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருப்பலிக்குக் குழுமி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களிடையே இடம் பெறும் உரையாடலோடு தொடங்குகிறது. “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்” என்று அருள்பணியாளர் விடும் அழைப்பு அவர் தொடங்கியிருக்கும் இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறும் தொடர் செயலில் திருக்குழுமத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த அழைப்பு அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் சேர்ந்துதான் இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

3.2 தொடக்கவுரை ( Preface)
“பிரிப்பேஸ்” என்பது “ப்ரேபாசியும்” (Prefatium) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இது ஒரு நூலுக்கு முன்னுரை போல் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் இருக்கிறது என்று பொருளல்ல. மாறாக இந்த இலத்தீன் சொல்லுக்கு “முன்மொழிதல், பறைசாற்றுதல், எடுத்துரைத்தல்” போன்ற பொருள் உண்டு.

இத்தொடக்கவுரை கடவுளை போற்றுவது ஏன் “தகுதியும் நீதியும் ஆகும்” என விளக்குகிறது. இது யூதர்களின் பெராக்கா (இறை புகழ்ச்சிப்) பாணியில் தொடங்குகிறது. இறைவனின் திருப்பெயரைக் கூவியழைத்து, மீட்பின் வரலாற்றில் படைப்பு, மனுவுருவாதல், மீட்பு ஆகிய மாபெறும் செயல்களுக்காக வாழ்த்தும், நன்றியும் கூறப்படுகிறது. இறைவன் புரிந்த அருஞ்செயலுக்காக இறைபுகழ் கூறுவதே யூதர்களின் இறைபுகழ்ச்சியிலும், கிறிஸ்தவர்களின் இறைபுகழ்ச்சியிலும் காணப்படும் சிறப்புமிக்க ஓர் அம்சமாகும். விண்ணக தந்தை தம் மக்கள் மீது பொழிந்திருக்கும் அன்பிற்கு, அவர்களின் பதில் அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த ‘பதிலாகவும்’ இது அமைகிறது. இறைபுகழும், நன்றியும் நிறைந்த இவ்வழிபாடு இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் எல்லா கிறிஸ்தவர்களும் இடைவிடாது செபிக்க வேண்டுமென புனித பவுல் அழைக்கின்றார்.

இரண்டாவது நான்காவது நற்கருணை மன்றாட்டுகளுக்குச் சிறப்பான தொடக்கவுரைகள் உள்ளன. இரண்டாவதுக்கான தொடக்கவுரையில் முக்கிய நிகழ்ச்சிகளான படைப்பு, மனிதராதல், மீட்பு ஆகியவற்றின் வழியாக மீட்பின் வரலாறு சுருக்கமாக நினைவு கூறப்படுகிறது. நான்காவது நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரையிலிருந்து தூய ஆவியாருக்குரிய முதல் மன்றாட்டு (First Epiclesis) வரையில் நீண்டதொரு வாழ்த்துரையைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு வழிபாட்டு வல்லுநர் ஜேலினோ கருத்துப்படி இதன் முதல் பகுதி விண்ணகத் தந்தைக்குரிய நன்றி மன்றாட்டாகும். இது அவருடைய உள்ளியல்புகளை நினைத்து வாழ்த்துவதாகவும் அவருடைய படைப்புக்காக குறிப்பாக, மனிதரின் படைப்புக்காகவும் வீழ்ச்சிக்காகவும் அவர் தொடங்கிய மீட்புசெயலுக்காகவும், மெசியாவாகிய இறைமகன் மனிதராகி, பாடுபட்டு, இறந்து உயிர்த்து ஆற்றிய மீட்பு பணிகளுக்காகவும், திருஅவையின் அருள்அடையாள வாழ்விலே தூய ஆவியார் புரியும் திருப்பணிக்காகவும் நன்றியறிதலாக அமைந்துள்ளது.

முதலாவது நற்கருணை மன்றாட்டுக்கும் மூன்றாவது நற்கருணை மன்றாட்டுக்கும் தொடக்கவுரை கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மறைபொருளுக்கும், விழாவிற்கும் ஏற்றாற்போல் மாறுபடலாம். இன்று திருப்பலி நூலில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், பெருவிழாக்கள், விழாக்களுக்கும், புனிதர் விழாக்களுக்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூற்றுக்கு மேற்பட்ட தொடக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

3.3 புகழ்பாடல் ( Sanctus)
இது வானதூதர் எழுப்பிய வாழ்த்தொலி ( எசா 6:3) நமதாண்டவர் எருசலேமுக்கு நுழைந்த போது மக்கள் கூட்டம் அவரை வரவேற்று எழுப்பிய ஆர்ப்பரிப்பு ( மத் 23: 1 ; 21:9) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. சேராபீன்கள் என எபிரேயத்தில் அழைக்கப்படும் பக்தி சுவாலகர் என்னும் வானதூதர்கள் விண்ணகக் கோயிலைத் தம் பிரசன்னத்தால் நிறைத்தெழுந்து இறைவனுக்கு இப்பாடலைப் பாடியதாக வாசிக்கிறோம். அவர் அனைத்து உலகிற்கும் ‘ஆண்டவர்’ ஆவார். அவர் வானகச் சேனைகளுக்கும் வானின் வல்லமைகளுக்கும், அதாவது தேவதூதர் அணிகளுக்கும், விண்மீன்களின் கூட்டங்களுக்கும் ஆண்டவராகப் புகழ்ந்தேத்தினர் இஸ்ரேயல் மக்கள் ( திப 103; 148:1‡4; 1 அரச 22:19 காண்க.) திருவெளிப்பாட்டிலும் புனித யோவான் கண்ட காட்சியில் “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்” என்று இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகிறதைக் குறிப்பிடுகிறார். மூன்று முறை ‘தூயவர்’ என்பது மூவொரு கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய அறிஞர்.

இவ்வார்ப்பரிப்பின் இறுதிபகுதி நம் ஆண்டவர் மகிமையோடு எருசலேம் நுழைந்த குருத்தோலை விழாவை நினைவு கூறுகிறது. இச்சொற்களை திருப்பாடல்கள் 118:26 இல் காண்கிறோம். இவ்வார்ப்பரிப்பு இரண்டும் தொடக்கவுரையில் கூறப்பட்ட அனைத்திற்கும் இறைமக்கள் இயல்பாகவே கொடுக்கின்ற ஒரு பதிலாகவும் அமைந்துள்ளன.

3.4 ‘நீர் மெய்யாகவே தூயவர்’ ( Vere Sanctus)
இது புகழ்பாடலின் விரிவாகவும், அதனை பின் பகுதியோடு இணைப்பதாகவும் அமைந்துள்ளது. இது புகழ்பாடலோடு இணைந்து நன்றி மன்றாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதை ‘நிலைமாற்றச் செபம்’
(Transition Prayer) என்று கூட சொல்லலாம். இந்த மன்றாட்டு வேறு முறையில் விரிவாகலாம் என்பதற்கு முதல் நற்கருணை மன்றாட்டும், நான்காவது நற்கருணை மன்றாட்டும் தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஒன்றில் பரிந்துரை மன்றாட்டுகளும், புனிதர்களை நினைவு கூறும் செபமும், மன்றொன்றில் மீட்பு வரலாற்றின் விரிவுரையும் இருக்கின்றன.

3.5 காணிக்கைகளை புனிதபடுத்த மன்றாட்டு
மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அர்ச்சிக்கப்படவும், அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் தூய ஆவியாரை அனுப்பும்படி இங்கு மன்றாடப்படுகிறது. இம்மன்றாட்டு (Epiclesis) தொன்றுத்தொட்டு நற்கருணை மன்றாட்டின் வழக்கில் உள்ளது. முதல் நற்கருணை மன்றாட்டில் இது நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. “இரக்கம் மிகுந்த தந்தையே இக்கொடைகளையும், காணிக்கைகளையும்” ( ஞற்ழிது நுணுயிழிமிஷ்லிஐeது) என்று தொடங்கும் மன்றாட்டு பின்பு சேர்க்கப்பட்டது. ஆனால் தூய ஆவியாரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்போது இருக்கும் எல்லா புதிய நற்கருணை மன்றாட்டுகளில் தூய ஆவியாருக்குரிய மன்றாட்டைத் தெளிவாகக் காணலாம். நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்குமுன் இம்மன்றாட்டை அமைத்திருப்பதால், மேற்கு திருஅவை மரபின் நற்கருணை வழிபாட்டு இயலுக்கு மதிப்புக் கொடுக்கிறது.

3.6 நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதி
நற்கருணையை ஏற்படுத்துதலை விவரிக்கும் இப்பகுதியில் விசுவாசமும் பக்தியும் நிறைந்த சூழ்நிலையில் அருள்பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் கைகளிலேந்தி அர்ச்சிக்கும் வார்த்தைகளை, அதாவது கிறிஸ்து சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறி இயேசுகிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகின்றார். படைப்பிலும், மீட்பின் வரலாற்றிலும் மனிதரின் நலன்கருதி இறைவன் செய்த அனைத்தும் இதில் மீண்டும் நினைவுகூறப்படுகின்றன, உடனிருக்கச் செய்யப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

3.7 எழுந்தேற்றம்
வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கி மக்களுக்குக் காட்டுதல் தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மரபு அன்று. திருப்பலியில் இது முக்கியமானதோ, உச்சக்கட்டமான செயலோ அன்று . இரண்டாம் வத்திக்காம் சங்கம் வரை பலிபீடம் திருப்பலி பீட முற்றத்தில் பின்புறம் சுவரோடு ஒட்டியதாக இருந்தது. சுவற்றின் மேல் பகுதியில் பாடுபட்ட சுருபமுடைய சிலுவைத் தொங்கியது. அருள் பணியாளர் தமது முதுகை மக்கள் பக்கம் காட்டிச் சுவரை நோக்கிய வண்ணமாக பலியை ஒப்புக் கொடுத்தார். வழிபாடும் இலத்தீன் மொழியில் இருந்தது.

மக்களுக்கு வழிபாட்டு மொழி புரியாததாலும், எப்பொழுது இயேசுகிறிஸ்து அப்பத்தையும் இரசத்தையும் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி பலிபீடத்தில் பிரசன்னமாகிறார் என்று தெரியாததாலும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் ஆனதும் தங்களுக்குத் தூக்கி காட்ட வருந்திக் கேட்டதால் உண்டான பழக்கம் எழுந்தேற்றம். இது 9‡ஆம் நூற்றாண்டில் உண்டான ஒரு பழக்கம். அருள்பணியாளர் தொடர்ந்து சுவரைப் பார்த்து நின்றதால், தமது தலைக்குமேல் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. இயல்பாக மக்கள் தலைவணங்கி ஆராதிக்கத் தொடங்கினார்கள். இது திருப்பலியில் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது விதிவிலக்காக வந்த ஒரு தவிர்க்க முடியாத வழக்கம் என்று சொல்ல வேண்டும்.

இப்பொழுது மக்களைப் பார்த்து திருப்பலி நிகழ்த்தும் முறை கையாளப்பட்டாலும், வழிபாடு அவரவர் தாய் மொழியில் நிகழ்ந்த போதிலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும் இரசக்கிண்ணத்தையும் மக்களுக்கு தூக்கிக் காட்டும் நீண்டநாள் மரபு நிறுத்தப்படவில்லை.

அருள்பணியாளர்கள் இப்பொழுது தலைக்கும் மேல் தூக்கிக் காட்ட வேண்டியதில்லை. தங்கள் முகத்துக்கு முன்வரை தூக்கி காட்டினால் போதும். மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தூக்கிபிடிப்பது சரியல்ல. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தலை வணங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்களுடைய பக்திக்கும், கவனத்திற்கும் ஊறு விளைவிக்கும். மற்றும் புதியதோர் தவறுதலான கேட்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.

3. 8. நினைவு ஆர்ப்பரிப்பு
இது நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்கும் அதற்குப் பின்வரும் பகுதிக்குமிடையே ஒரு தொடர்பை உருவாக்கு வதற்காக அமைந்துள்ளது. “நம்பிக்கையின் மறைபொருள்” என்று ஆர்ப்பரிப்பது ஆண்டவர் மீது மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அவரை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் தூண்டுவதாய் அமைகிறது. விசுவாசத்தின் மறைபொருளை விளக்குவதாகவும் அமைகிறது. இதைத்தான் “ஆண்டவரே நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்” என்ற நினைவு ஆர்ப்பரிப்பு வெளிப்படுத்துகிறது. இது போன்ற மேலும் 3 பாடங்கள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றையும் நாம் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். “எனக்காக பிறந்து, எனக்காக மரித்து .... உமக்கே ஆராதனை” என்று சொல்வது தவறாகும். தவிர்க்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் பறைசாற்றக் கூடியே நேரம் இது. இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும் நேரம் அன்று.

3.9. நினைவாக்கம் (Sacrificial Memorial)
நற்கருணை வழிபாட்டின் இரண்டாவது பகுதி இந்த செபத்தோடு தொடங்குகிறது. முதல் பகுதி கிறிஸ்துவின் உடலை அருள் அடையாள உடலாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இரண்டாவது பகுதி மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளாகிய பாஸ்கா மறைபொருளை நினைவு கூறுவதோடு, இயேசு, கிறிஸ்துவையே இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கும் நேரமாக அமைகிறது. மேலும் கூடியிருக்கும் இறைமக்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்து (Second Epiclesis) அவர்களை ஒன்றிணைக்க வேண்டப்படுகிறது. இந்த இரண்டாவது பகுதி கிறிஸ்துவின் மறையுடலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. “மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என தாழ்மையுடன் உம்மை மன்றாடு கிறோம்” என்று சொல்லப்படுகிறது. (இரண்டாவது நற்கருணை மன்றாட்டு காண் ந.ம. III, IV).
தூய ஆவியார் உயிர்த்த கிறிஸ்துவின் கொடை. விண்ணகம் சென்ற கிறிஸ்து இதற்காகத் தந்தையிடம் பரிந்து மன்றாடிக் கொண்டுள்ளார். தூய ஆவியார் மக்கள் மீது இறங்கி வர மன்றாடுவது இரு நோக்கங்கள் கொண்டது: ஒன்று தூய ஆவியார் அனைவரையும் ஒன்றுசேர்த்து செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்பது (காண் உரோ 8:26-27). மற்றொன்று நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வதால் அதன் பயனாகிய ஒன்றிப்பை அடைய வேண்டும் என்பது (காண் 1 கொரி 10:17).

3.10. திரு அவையின் தேவைகளுக்காக மன்றாட்டு
அதன்பின் திருஅவையின் தேவை-களுக்காகவும் மக்களுடைய தேவைகளுக்காகவும் மன்றாட்டுகள் தொடர்கின்றன. இவை தூய ஆவியாரின் வருகைக்குரிய மன்றாட்டின் இயல்பான தொடர்ச்சியாகும். முதலில் திருஅவைக்காகவும், திருத்தந்தைக்காகவும், அடுத்து திருப்பணியாளர்கள், மற்றும் மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். (காண் ந.ம. ணூணூ, ணூணூணூ). நான்காவது மன்றாட்டில் “நேர்மையான உள்ளத்தோடு உம்மை தேடிவரும் யாவரையும் நினைவுகூர்ந்தருளும்” என்பது கவனிக்கத்தக்கது.

3.11 . புனிதர்களின் நினைவு
இறைவனின் அன்பில் சிறந்து வாழ்ந்து, இன்று விண்ணக பேரின்பத்தில் பங்கு பெற்றிருக்கும் நம் மூத்த சகோதரர்களாகிய புனிதர்களையும் சுருக்கமாக நினைவு கூர்ந்து நமக்காக பரிந்துரைக்க மன்றாடுகிறோம். முதல் நற்கருணை மன்றாட்டில் நற்கருணை ஏற்படுத்துதலை விவரிக்கும் பகுதிக்கு முன்னும் பின்னும் புனிதர்களை நினைவுகூர்வதைக் காணலாம். மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் கன்னிமரியும், அவரது கணவர் புனித சூசையப்பரைத் தவிர மற்றவர்கள் திருத்தூதர், மறைசாட்சியர் என்று பொதுவாக நினைவு கூறப்படுகிறார்கள்.

3.12. இறந்தோருக்காக வேண்டல்
இவ்வுலகில் வாழ்வோருக்காக செபித்த அருள்பணியாளர் இப்போது இவ்வுலகில் வாழ்ந்து மரித்தவர்களுக்காக மன்றாடுகிறார். இறைவன் அவர்கள் மீது கருணைக்காட்டிட மன்றாடுகிறார்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட மூன்று வேண்டுதல்களும் புனிதர்களின் சமூக உறவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இடம் பெறுகின்றன. பரிந்துரைகளின் கருத்துகளைக் குறிப்பிடுவதிலும், புனிதர்களை நினைவுகூர்தலிலும் ஒரே வகையான வரிசைகிரமத்தை நற்கருணை மன்றாட்டுகளில் காண்பதில்லை. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில் புனிதர்களை நினைவுகூர்தல் முதலிலும், மற்ற இரண்டிலும் (ணூணூ &ணூV) இறுதியிலும் அமைந்துள்ளது. வாழ்வோர்க்கான பரிந்துரைத்தலுக்குப் பின் இறந்தோர்க்காக மன்றாடுவது 3ஆம், 4ஆம் நற்கருணை மன்றாட்டுகளில் வரிசைக் கிரமமாயிருக்கிறது. ஆனால் 2 ஆம் நற்கருணை மன்றாட்டில் இறந்தோரை நினைவுகூர்ந்த பின்னரே நமக்காக வேண்டுதல் புரிகிறோம்.

3.13. இறுதி புகழுரை (Doxology)
இது நற்கருணை மன்றாட்டின் முடிவுரையாகும். என்றாலும் இதுவே நற்கருணை மன்றாட்டின் சிகரமாக அமைந்துள்ளது. எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் இந்த இறைபுகழ் ஒரே வகையாக அமைந்திருக்கிறது. திருப்பலியின் இறையியல்பையும் நோக்கத்தையும் மிகச் சுருக்கமாக, ஆனால் தெளிவாக எடுத்துரைக்கிறது. தூய ஆவியாரால் ஒன்றிணைக்கப்பட்ட திருஅவை இயேசுகிறிஸ்து வழியாக தந்தையாகிய கடவுளுக்கு உரிய வாழ்த்தும் வணக்கமும் ஆராதனையும் அளிக்கிறது. நற்கருணை மன்றாட்டின் இந்த இறுதிப் பகுதியைத் திருப்பலிக்குத் தலைமையேற்று நிகழ்த்தும் அருள்பணியாளர் பாட அல்லது பறைசாற்ற, மக்கள் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி இப்புகழுரையை உறுதிப்படுத்துகினறனர், தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். இதைப் பெரிய ‘ஆமென்’ என்று சொல்வதுண்டு. இந்த இறுதி புகழுரையை திருப்பணியாளர் மட்டுமே பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இது நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாகும். எவ்வாறு நற்கருணை மன்றாட்டில் எந்த ஒரு செபத்தையும் சொல்ல மக்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல்தான் இங்கும். இந்த இறுதிபுகழுரையில் வரும் ‘இவர்’ இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்றது. மேலும், அருள்பணியாளர் திருதட்டையும், கிண்ணத்தையும் தூக்கிப் பிடித்து நிற்பதால், அப்ப இரச குணங்களுள் பிரசன்னமாயிருக்கும் இயேசுவையே, ‘இவர்’ குறிக்கிறது. கூட்டுத்திருப்பலியில் திருதட்டுடன் அப்பத்தை ஒருவரும், இரசக் கிண்ணத்தை மற்றொருவரும் தூக்கிப் பிடிப்பர். ஏனைய கூட்டுப் பலியாளர் வேறு அப்பப் பாத்திரங்களை தூக்கிப் பிடிப்பது முறையானது எனக் கூறமுடியாது; அவசியமும் இல்லை.

4. நற்கருணை மன்றாட்டுகளின் சிறப்பு பண்புகள்
நற்கருணை மன்றாட்டின் அமைப்பு கூறுகளை விளக்கியபின் அவற்றில் இழையோடும் சில பண்புகளைப் பற்றிய விளக்கம் இங்கு இடம் பெறுகிறது.

4.1. நினைவாக்கம் (Anemnesis)
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று நம் ஆண்டவர் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். இன்று நாம் அப்பத்தைப் பிட்டும், கிண்ணத்தைப் பகிர்ந்தும் கொள்வதின் வழியாக கிறிஸ்து தம்மையே பகிர்ந்தளித்ததை நினைவு கூர்கிறோம்.
விவிலியத்தில் ‘நினைவுகூர்தல்’ என்பது செயலாக்கம் உடைய இரு பண்புகளைக் கொண்டது. ஒன்று கடவுள் மீட்புக்கடுத்த வாக்குறுதிகளில் பிரமாணிக்கம் தவறமாட்டார் என்பதை மக்களுக்கு நினைவூட்டுதலாகும். இது மக்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கும். மற்றொன்று அதே மீட்புக்கடுத்த வாக்குறுதிகனைக் கடவுளுக்கும் நினைவுப்படுத்துதலாகும். அதாவது, மக்கள் கடவுளின் திருமுன் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவற்றைக் காட்டி அவரது மீட்பின் வாக்குறுதிகளை மீண்டும் செயலாக்க மன்றாடுவது. எனவே நினைவாக்கம் வெறும் குறித்துக் காட்டுதல் மட்டுமல்ல, செயலூக்கமும், படைக்கும் ஆற்றலு முடைய ஒரு செயல்.
இதன் அடிப்படையில் யூதர்கள் பாஸ்கா வைக் கொண்டாடும் போது கடவுளுடைய அரும் பெரும் செயல்களை நினைவுக்குக் கொண்டுவந்து பறைசாற்றினர். தங்கள் முன்னோர்களுக்குக் கடவுள் செய்த அதே மீட்புச்செயல்களை இப்பொழுதும் தங்களுக்குச் செய்ததாகவும் அதனால் அதன் பயனை தாங்கள் தூய்ப்பதாகவும் உணர்ந்தனர். எனவே இறைவனை உளமாற புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இன்றும் திருப்பலி கொண்டாட்டத்தில் இது நடைபெறுகிறது. நற்கருணை மன்றாட்டு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வுகள், அதாவது மீட்கும் ஆற்றலுடைய அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை முனைப்பான (எஸஷ்ஸஷ்d) முறையில் நினைவு கூறப்படுகின்றன. திருப்பலியில் பங்கு பெறுவோர் இங்கே இப்பொழுது மீட்கப்படுவதாக உணரமுடிகிறது. இயல்பாகவே அவர்கள் இறைவனை புகழ்ந்து நன்றிகூற உந்தப்படுகின்றனர்.

4.2. புகழுரையும் நன்றிகூறலும்
நற்கருணை வழிபாட்டிற்குச் சிறப்பளிப்பது புகழ்ச்சியும் நன்றியுமாகும். இவை இரண்டும் ஒரே பொருளுடையவை என மேலே குறிப்பிடப்பட்டது. இப்புகழுரை கடவுள் தம் திருமகனின் பலி வழியாக நமக்கு மீட்பளித்துள்ளார் என்பதை உயிராற்றல் உள்ளமுறையில் உணர்வதால், இயல்பாகவே நமது எதிர்விளைவும், பதிலுரையும் புகழ்ச்சியாகவும் நன்றியாகவும் உருவெடுக்கிறது.

4.3. இறைஞ்சி மன்றாடுதல் (Supplication)
புகழ்ச்சியும் நன்றியும் நிறைந்த ஆர்ப்பரிப்பு, கடவுள் தம் மீட்கும் செயலை, இப்பொழுது இங்கு தம் மக்கள் சார்பாக தொடர்ந்து செய்யவும் புதுப்பிக்கவும் வேண்டும் என்று மன்றாட திருகுழுமத்தைத் தூண்டுகிறது. இது நினைவாக்கத்தின் விளைவுமாகும். நினை-வாக்கத்தோடு இறைஞ்சி மன்றாடுவதும் இணைந்து செல்ல வேண்டும் என்பது கடவுளுடன் மனிதன் கொண்டிருக்கும் உறவின் தன்மைக்குத் தேவைப்படுகிறது. நற்கருணை வழிபாட்டில் தம் திருமகனின் சாவு ‡ உயிர்ப்பின் பேறு பலன்களால் நம்மை மீட்கும்படி தந்தையாகிய இறைவனிடம் மன்றாடப்படுகிறது. இறைவனின் மீட்புத்திட்டம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் முற்றுப்பெறும் வரை, அவரை அனுப்ப வேண்டுமென்று இறைஞ்சுகிறோம். இக்கண்ணோக்கில், நினைவாக்கம் கிறிஸ்துவின் மீட்புச்செயலின் ஓர் அருள்அடையாள வடிவமாகும். இதன் வழியாக, இன்னும் முற்றுபெறாத மீட்பின் வாக்குறுதியை நிறைவு செய்யும்படி தந்தையிடம் மன்றாடுகிறோம்.

4.4. காணிக்கை (பலி)
நாம் செய்த மன்றாட்டுகள் ஏற்கப்பட்டு நமக்குப் பயன் அளிக்கும் வகையில் நாம் நமது காணிக்கைகளை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இக்காணிக்கை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படுவதால் நாம் இயேசுகிறிஸ்துவையே கடவுளுக்குக் காணிக்கை யாக்குகிறோம். இதில்தான் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி அமைந்துள்ளது. இயேசுகிறிஸ்து கடவுளின் உகந்த மகனாகையால் அவர் ஏற்றுக்கொள்ளபடுவார். அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாம் இறைஞ்சி மன்றாடினதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிபாடு நமக்கு உண்டு. 

No comments:

Post a Comment