நாள்: மே 13
வகை: விருப்ப நினைவு
பின்னணி
1917 மே 13 முதல் அக்டோபர் 13ந்தேதி வரை போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியாள் ஆறு முறை காட்சி அளித்தார். லூசியா டி சான்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் சிறாருக்கு தோன்றிய அன்னை, “நான் செபமாலை அன்னை. மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாவிகள் மனந்திரும்ப செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும்” என்று கூறினார்.
ஏராளமான பாவிகள் நரகத்தில் விழும் காட்சியை சிறுவர்களுக்கு காட்டிய அன்னை மரியாள், இயேசுவின் திருப்பாடுகள் வீணாகாமல் ஆன்மாக்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். “எனது மாசற்ற இதயத்தின் பக்தி உலகில் நிறுவப்பட வேண்டுமென இறைவன் விரும்புகிறார். உலகமும் ரஷ்யாவும் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்” என மரியன்னை அறிவுறுத்தினார்.
மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் மீண்டும் ஓர் உலகப் போர் ஏற்படும், திருச்சபைக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் எனவும் அன்னை எச்சரித்தார். 1917 அக்டோபர் 13ந்தேதி கடைசி காட்சியின்போது, சூரியன் அங்குமிங்கும் தள்ளாடிய வியப்பூட்டும் அற்புதத்தை எழுபதாயிரம் பேர் பார்த்தனர்.
வரலாறு
அன்னை காட்சி அளித்த இடத்தில் செபிப்பதற்காக ஏராளமானோர் பாத்திமாவுக்கு திருப்பயணம் சென்றனர். காட்சிகள் குறித்து விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்தனர். 1930 அக்டோபரில், இந்த காட்சிக்கு திருத்தந்தை 11ம் பியுஸ் அங்கீகாரம் வழங்கினார். பாத்திமாவில் மரியன்னை கூறியவை அடுத்தடுத்து நிறைவேறியதால், உலகெங்கும் வாழும் மக்கள் மத்தியில் இந்த காட்சி புகழ் பெற்றது.
1981 மே 13ந்தேதி பாத்திமா அன்னை திருவிழா அன்று, அலி ஆக்கா என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்ட திருத்தந்தை 2ம் யோவான் பவுல், தாம் அன்னையின் கரங்களால் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக கூறினார். அவரது உடலில் பாய்ந்த தோட்டா, பின்பு பாத்திமா அன்னையின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த காட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் சிறப்பித்தார்.
No comments:
Post a Comment