இயேசு காட்டும் சமயம்
சமயம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
எப்படி இருக்கக்கூடாது என்பதை மத்தேயு 23: 1-12 நற்செய்தி வாயிலாக
இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். சமயம் என்பது கடவுளுடனான உறவு மட்டுமல்ல, மனிதர்களுடனான உறவும் கூட. கடவுள் பத்துக்கட்டளைகளை மோசே வழியாக
இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். அதனுடைய அடிப்படையே கடவுளுக்கும், மனிதர்களுக்கும் உண்மையான மதிப்பைக் கொடுக்கக்கூடிய செயல்பாடுதான்.
ஆனால், சமயம் என்ற பெயரில் பரிசேயர்களும், சதுசேயர்களும் செய்த அக்கிரமங்களை இயேசு கடுமையாகச் சாடுகிறார்.
சமயம் என்பது பள்ளத்திலே வீழ்ந்து
கிடக்கிற மக்களை தூக்கிவிடுவதாக இருக்க வேண்டும். மேலும், மேலும்
அவர்கள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட காரணமாக இருக்கக்கூடாது. சமயம் என்பது சோர்வுற்ற
மக்களை தேற்றுவதாக இருக்க வேண்டும். அவர்களை மேலும் தடுமாறுவதற்கு காரணமாக
இருந்துவிடக்கூடாது. சமயம் என்பது அடிமைத்தளையை உடைத்தெறிந்து விடுதலை தருவதாக
அமைய வேண்டும். அவர்களை அடிமைச்சிறைக்குள்ளாக வைப்பதாக இருக்கக்கூடாது.
எப்படியெல்லாம் சமயம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம்
அதிகாரவர்க்கத்தினர் சமயத்தை தங்கள் கைப்பாவையாக்கி மாற்றியிருந்தனர். இந்த தவறான
கண்ணோட்டத்தை இயேசு உடைக்கிறார்.
நாமும் கூட சமயம் என்பதன் பொருளை
அறிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறோம். அதனால் தான், சமயத்தின்
பெயரால் அநீதிகளையும், சாதிச்சண்டைகளையும், அரசியல் குள்ளநரித்தனத்தையும் இங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம்.
இவையனைத்துமே பரிசேயத்தனம். இயேசுவால் வெறுக்கப்படக்கூடிய செயல்பாடு. அந்த
அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment