அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'' எனக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்றான்.

அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.

உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ``பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.''

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

மன்னிப்பு இன்று மறுக்கப்படுவதால், மழை பெய்யாது போகின்றதோ என்று கேட்டுப் பார்க்கின்றேன்.

பழிவாங்கும் போக்கு இன்று பரவலாகி வருவது, சமூகத்திற்கு ஆரோக்கியமானதாகாது என்பதனை புரிந்து நடந்து கொண்டால் நல்லது.

மன்னிப்பது தெய்வீகப் பண்பு.

மன்னிக்கும் போதே நாம் மன்னிப்பு பெறுகின்றோம்.

மன்னிக்கும் போது உறவு உறுதிப் பெறுகின்றது.

மன்னிக்கும் போதே நாம் அடுத்த தலைமுறையினரிடையே மதிப்பும், மரியாதையும் பெறுகின்றோம்.

மன்னிக்கும் போது, மனது இலகுவாகின்றது. இதனால் பலநோய்கள் வராது இதயம் பாதுகாக்கப்படுகின்றது. இதயம் இறுக்கமின்றி செயல்படுகின்றது. குழந்தையாக மாறுகின்றோம்.

மன்னியுங்கள்!

மன்னிப்பு கிறித்தவ வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகளுள் ஒன்று. மன்னிப்பின் அருமையை, அவசியத்தைப் புதிய ஏற்பாடு பல வழிகளில் எடுத்துரைக்கிறது:

  1. மன்னிப்பு ஒரு நிபந்தனை:

இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கான நிபந்தனையாக நாம் பிறரை மன்னிக்க வேண்டும் என்று மொழிந்தார் இயேசு. 'மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்'(மத் 6:14-15)

  1. மன்னிப்பு ஓர் இறைச்செயல்:

நாம் பிறரை மன்னிக்கும்போது, இறைவனின் சாயலில் நாமும் பங்குபெறுகிறோம். இறைவனைப் பின்பற்றுகிறோம். எனவேதான், பவுலடியார் இவ்வாறு கூறினார்: 'கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்' (எபே 4:32). 'ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும்' (கொலோ 3:13)

  1. மன்னித்தல் ஓர் அழைப்பு:

பிறரை மன்னிக்கவேண்டும் என்பது இயேசுவின் சீடர்கள் அனைவருக்கும் அவர் தந்த கட்டளை, அழைப்பு. 'மன்னியுங்கள். மன்னிப்பு பெறுவீர்கள்'(லூக் 6:37)

  1. மன்னித்தல் ஓர் அன்புச் செயல்:

'உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.'(லூக் 17:3)

  1. மன்னிப்பு செபத்தை எளிதாக்குகிறது:

'நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார்மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்' (மாற் 11:25). எனவேதான், நாள்தோறும் திருப்பலியின் தொடக்கத்திலேயே மன்னிப்பு வழிபாட்டை அமைத்திருக்கிறது திருச்சபை.

  1. மன்னிப்பு ஒரு பழக்கம்:

'ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பிவந்து 'நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள் ' (லூக் 17:4). எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கேட்டபோது, இயேசு தந்த பதில்: 'ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்' (மத் 18:22)

எனவே, மன்னித்தலை நம் அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்வோம். -- தந்தை குமார்ராஜா

No comments:

Post a Comment