இயேசு கிறிஸ்து உண்மையாக வரலாற்றில் வாழ்ந்த மனிதரே என்பதற்கு விவிலியத்திற்கு வெளியிலும் சான்றுகள் உள்ளன. கிறிஸ்தவ சமயத்தைச் சாராத சில பழங்கால ஏடுகளிலும் இயேசுவைப் பற்றிய பதிவுகள் உள்ளன.
பொதுவான சந்தேகம்
இயேசு கிறிஸ்துவைத் தங்கள் தலைவராகவும் கடவுளாகவும் கொண்டாடிய கிறிஸ்தவர்களே, அவரைப் பற்றி பல நூல்களையும் கடிதங்களையும் எழுதியுள்ளனர். அவரைப் பற்றி நற்செய்தி நூல்கள் தரும் செய்தி ஒரு கதை போன்று இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆகவே, இயேசு உண்மையாக வாழ்ந்த நபராக இருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களின் சந்தேகம். ரோம பேரரசைப் பொறுத்த வரையில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட பல குற்றவாளிகளில் இயேசுவும் ஒருவர் அவ்வளவுதான். ஆயினும், அவரை சிலுவையில் அறைந்து கொன்றது பற்றி, ஆளுநர் பிலாத்து தமது ‘பணிகள்’ என்ற அறிக்கையில் எழுதியிருந்ததாக குறிப்புகள் உள்ளன. கிறிஸ்தவம் சாராத வேறு சிலரின் சான்றுகளை இங்கு காணலாம்.
"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்."
பிளாவியு யோசேப்பு
பிளாவியு யோசேப்பு (கி.பி.37-97) என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் தாம் எழுதிய ‘யூத மரபு வரலாறு’ என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரது நடத்தை நல்லதாக இருந்தது; அவர் குற்றமற்றவராக இருந்தார். யூதர்களி லும், மற்ற நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் அவரது சீடர்களானார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் சீடத்துவத்தை விட்டுவிடவில்லை. இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவர்கள் அறிவித்தார்கள்; அதன்படி, இறைவாக்கினர்கள் முன்னுரைத்த மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்.”
கொர்னேலியு தாசித்து
கொர்னேலியு தாசித்து (கி.பி.55-120) என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் தாம் எழுதிய ரோம வரலாற்று நூலில் பின்வருமாறு கூறுகிறார்: “தாமே ரோமுக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக, நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர் மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறிஸ்தவர்கள் என்று மக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்த கிறிஸ்து திபேரியு ஆட்சிக் காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார்.”
மாராவும் லூசியனும்
சிரியாவைச் சார்ந்த மாரா பார் செரப்பியன் (கி.பி.52-145), இயேசுவைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “யூதர்கள் தங்கள் ஞானமுள்ள அரசரை (இயேசுவை) கொன்றதால் என்ன இலாபம் அடைந்தார்கள்? அதன்பிறகு அவர்களின் அரசு அழிக்கப்பட்டது. இந்த ஞானமுள்ள அரசர் நன்மைக்காக இறந்தார்; அவரது போதனைகளின்படியே அவர் வாழ்ந்து காட்டினார்.” கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கேலிப் பேச்சாளர் லூசியன் (கி.பி.125-180), “சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு தனிப்பட்ட மனிதரை (இயேசுவை), கிறிஸ்தவர்கள் இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள்” என்று கிண்டலாக குறிப்பிடுகிறார்.
யூத போதனை நூல்
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யூத போதனை நூல் (தால்மூத்) பின்வரும் தகவலைத் தருகிறது: “பாஸ்கா விழாவுக்கு முன்தினம் மாலையில், இயேசு கழுவில் (சிலுவையில்) கொலையுண்டார். அதற்கு நாற்பது நாட்கள் முன்பாக, ‘அவர் மாய வித்தைகள் (அற்புதங்கள்) வழியாக இஸ்ரயேலை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதால், கல்லால் எறிந்து கொல்லப்பட இருக்கிறார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்வந்து, அவருக்காக பரிந்து பேசலாம்’ என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக யாரும் வராததால் அவர் கொல்லப்பட்டார்.”
No comments:
Post a Comment