நாள்: ஜூன்/ஜூலை
வகை: நினைவு
கடவுளின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்து, தம் வாழ்நாள் முழுவதையும் அவருக்கு அர்ப்பணித்த மரியாளின் இதயத்தை நினைவூட்டும் இந்த திருநாள், ஜூன் அல்லது ஜூலை மாதத்தின் ஒரு சனிக்கிழமையில் வருகிறது. இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாள், பொது நினைவாக இது சிறப்பிக்கப்படுகிறது.
பின்னணி
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது” (லூக்கா 1:47) என்ற மரியாளின் வார்த்தைகள், அவரது இதயத்தின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. ‘மரியாள் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்’ (லூக்கா 2:19) என்றும், அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (லூக்கா 2:51) என்றும் நற்செய்தி கூறுவது, கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் மரியாளின் ஆவலை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய மரியாளின் மாசற்ற இதயத்தையே இந்நாளில் நினைவுகூர்கிறோம்.
வரலாறு
13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித மெக்தில்து, புனித ஜெர்த்ருத் ஆகியோர் மரியாளின் இதயத்தின் மீதான பக்தியை முதலில் கடைபிடித்தனர். 15ஆம் நூற்றாண்டில் சியன்னா புனித பெர்னார்தினோ, மரியாளின் கன்னி இதயம் குறித்த சிந்தனையை உருவாக்கினார். 17ஆம் நூற்றாண்டில், கன்னி மரியாளின் இதய பக்தியை மக்களிடையே பரப்ப புனித ஜான் யூட்ஸ் ஆர்வமாக உழைத்தார். அவர் எழுதிய ‘அதிசயமான இதயம்’ என்ற நூலின் விளைவாக, 1648ல் பிரான்ஸ் நாட்டின் அட்டூன் நகரில், மரியாளின் இதயத்தின் விழா முதன்முதலில் சிறப்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே, பிரான்ஸ் நாடு முழுவதும் இந்த விழா பரவியது.
1799ல், இத்தாலியின் பலர்மோ மறைமாவட்டத்தில் ‘மரியாளின் மிகத்தூய இதய விழா’வைக் கொண்டாட திருத்தந்தை 6ம் பியுஸ் அனுமதி வழங்கினார். 1855 ஜூலை 21ந்தேதி, மரியாளின் மிகத்தூய இதய விழாவுக்கான திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை செபத்துக்கு ரோமின் திருவழிபாட்டு பேராயம் அங்கீகாரம் வழங்கியது. 1944ல் திருத்தந்தை 12ம் பியுஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ந்தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல், இயேசுவின் தூய இதயத்தின் பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.
No comments:
Post a Comment