நாள்: ஆகஸ்ட் 22
வகை: நினைவு
அனைத்துலக அரசராம் இயேசுவின் தாய் மரியாள் விண்ணக, மண்ணக அரசியாக இருக்கிறார் என்பதை நினைவூட்டும் இந்த திருநாள், ஆகஸ்ட் 22ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் பொது நினைவாக இது இடம் பெற்றுள்ளது.
பின்னணி
‘வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடியிருந்தார்’ (திருவெளிப்பாடு 12:1) என்ற வார்த்தைகள், ஒரு விதத்தில் மரியாளின் விண்ணக மாட்சியை சுட்டிக் காட்டுகின்றன. “ஆண்டவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்” (லூக்கா 1:51,52) என்னும் கன்னி மரியாளின் வார்த்தைகள் அதை உறுதி செய்கின்றன.
வரலாறு
கன்னி மரியாள் ‘இறைவனின் தாய்’ என்று கி.பி.431ல் அறிக்கையிட்ட எபேசு பொதுச்சங்கம், அவரை ‘அரசி’ என்றும் அழைத்து பெருமைப்படுத்தியது. கன்னி மரியாவை விண்ணக அரசியாக போற்றி, நாடுகளை அவரது பாதுகாவலில் ஒப்படைக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மனி கவிஞரான ஹெர்மான், “வாழ்க அரசியே!” என்று தொடங்கும் லத்தீன் செபத்தை (கிருபை தயாபத்து மந்திரத்தை) இயற்றினார். இவ்வாறு, இறைவனின் தாயை ‘விண்ணக அரசி‘ என்று வாழ்த்தும் நடைமுறை நூற்றாண்டுகள் தோறும் தொடர்ந்தது.
1592 செப்டம்பர் 8ந்தேதி வேளாங்கண்ணியில் தோன்றிய அன்னை மரியாள், “நான் விண்ணக அரசி” என்று கூறியதாக அறிகிறோம். 1932 நவம்பர் 29ல் பெயரைங் பகுதியில் காட்சி அளித்த அவர், “நான் இறைவனின் தாய்; விண்ணக அரசி” என்று தம்மை அறிமுகம் செய்தார். 1954 அக்டோபர் 11ந்தேதி திருத்தந்தை 12ம் பியுஸ், ‘விண்ணக அரசிக்கு’ என்ற சுற்றுமடல் வழியாக அரசியான கன்னி மரியாள் விழாவை மே 31ல் கொண்டாடுமாறு நிறுவினார். இந்த விழாவை ஆகஸ்ட் 22ந்தேதி கொண்டாடும் வகையில், 1969ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் மாற்றம் செய்தார்.
No comments:
Post a Comment