முன்னுரை :
தொடக்கச் சடங்கு திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. அடுத்து வருவது ‘வார்த்தை வழிபாடு’ ஆகும். இதைப் பற்றி குறிப்பிடும்போது திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் பின்வருமாறு கூறுகிறது. “நம்பிக்கை கொண்டோருக்கு இறைவார்த்தைப் பந்தியில் இன்னும் மிக நிறைவாக உணவு வழங்கப்படவேண்டும். இதற்காக விவிலியத்தின் கருவூலங்களை இன்னும் தாராளமாகத் திறந்திடவும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாக விவிலியத்தின் முதன்மையான பகுதிகளை மக்களுக்கு வாசித்திடவும் வேண்டும்” (தி.வ.எண் 51).
அதைத் தொடர்ந்து உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது : “(விவிலிய) வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படுகின்றன. விவிலிய வாசகங்களில் உள்ள அமைப்பு முறையைப் பின்பற்றுவது பெரிதும் நம்பத்தக்கது. ஏனெனில் அது இரு ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும் மீட்பின் வரலாற்றையும் தெளிவுப்படுத்துகின்றது. வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது”. (உ.தி.தூ.பொது படிப்பினை எண் 57. இனிமேல் றூணூயூனி ).
இந்த அறிவுறுத்தலையும், படிப்பினையையும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது என இனி காண்போம்.
அருள் அடையாள கொண்டாட்டமும், இறைவாக்கும் :
திருப்பலியில் வார்த்தை வழிபாட்டை விளக்கும் முன் பொதுவாக அருள் அடையாளங்களைக் கொண்டாடுவதற்கு இறைவார்த்தை எவ்வாறு தேவைப்படுகிறது எனக் காண்போம்.
ஒவ்வொரு அருள் அடையாள கொண்டாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது இறைவார்த்தை போதகமாகும். நற்செய்தி அறிவிப்பு இல்லாமல் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் ஓர் இடத்தில் கூட நாம் காண முடியாது. ஏனெனில் இறைவார்த்தை பறைசாற்றப்படும்போதுதான் விசுவாசம் பிறக்கிறது. அதுவே அருள் அடையாளத்தைப் பெறும் சூழலை உருவாக்குகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குத் தோன்றி ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்’..... (மாற்கு 16 : 15 ‡ 16) என்று கூறினார். இதிலிருந்து நற்செய்தி போதகம் விசுவாசத்திற்கு வழிகோலுகிறது என்றும், விசுவாசம் திருமுழுக்குக்கு இட்டுச் செல்கிறது என்றும்
அறியமுடிகிறது.
ஆக போதகம் ‡ விசுவாசம் ‡ அருள் அடையாளம் என்பது அடிப்படை அமைப்பு எனத் தெரிகிறது. அதாவது இறைவார்த்தையை அறிவித்து அது விளக்கப்படும்போது, அதைக் கேட்பவர்கள் அதை ஏற்று விசுவசிக்கிறார்கள். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). அதன் பயனாக திருமுழுக்குப் பெறுகிறார்கள். இதற்கு எத்தியோப்பிய நிதி அமைச்சர் திருமுழுக்குப் பெற்றதை எடுத்துக்காட்டாக இங்கு குறிப்பிடலாம். (தி ப 8 : 35 - 38 காண்க). புனித பேதுரு தம் போதனைக்குப் பிறகு திருமுழுக்கு அளித்ததாக திருத்தூதர் பணிகளில் வாசிக்கிறோம் (திப 10 : 44 - 48 காண்க).
இதே போன்று இன்று ஒவ்வொரு அருள் அடையாளக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு தேவையாக உள்ளது. ஏனென்றால் இறைமக்களின் விசுவாச சூழலில்தான் அருள் அடையாளம் கொண்டாடப்படுகிறது. இந்த விசுவாச சூழலை உருவாக்கிக் கொடுப்பது வார்த்தை வழிபாடாகும்.
வார்த்தை வழிபாடு - விசுவாசம் - அருள் அடையாள வழிபாடு
மேலே நாம் குறிப்பிட்டதிலிருந்து நற்செய்தி முழக்கமில்லாது அருள் அடையாளங்கள் இடம் பெற முடியாது எனத் தெரிகிறது. இங்கு நாம் சிந்திப்பது திருப்பலி கொண்டாட்டத்தில் முக்கிய பகுதியாகிய வார்த்தை வழிபாடு பற்றியது ஆகும். இந்த வார்த்தை வழிபாடு திடீரேன இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குப் பின் புகுத்தப்பட்ட ஒரு வழிபாடு அன்று. யூத மரபிலும், திருஅவையின் தொடக்கக் காலத்திலும் இது நடைமுறையில் இருந்ததாக நாம் அறிகிறோம்.
யூத மரபில் வார்த்தை வழிபாடு :
யூதர் தம் செபக்கூடங்களில் நடத்திய வழிபாடு இன்றைய வார்த்தை வழிபாட்டிற்கு முன்னோடியாக இருந்தது என்று சொல்லலாம். யூதர்களுக்குக் கோவில் ஒன்றுதான் இருந்தது. அது எருசலேம் தேவாலயமாகும். அங்கு பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கலாம். வாரத்தின் இறுதி நாளாகிய சாபாத் என்னும் சனிக்கிழமை தோறும் மக்கள் தங்கள் ஊர் மத்தியில் இருந்த செபக்கூடத்தில் கூடி வழிபாடு நடத்தினர். அந்த வழிபாட்டில் சில செபங்கள் சொல்லப்படும்; மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவர். பின் விவிலியத்திலிருந்து வாசகங்கள் இடம்பெறும். இந்த வாசகங்கள் தோரா எனப்படும் சட்ட நூலிலிருந்து ஒன்றும், இறைவாக்கினர் நூலிலிருந்து மற்றொன்றுமாக அமைந்திருக்கும். இவ்விரு வாசகங்களுக்கிடையில் திருப்பாடல்களைப் பாடுவர். அதன்பின் அங்கு கூடியுள்ளவர்களில் பெரியவர் அல்லது தனிச் சிறப்புடையவர் வாசகங்கள் பற்றிய விளக்கத்தைக் கொடுப்பார். இறுதியாக நீண்ட செபத்துடன் செபக்கூட வழிபாடு முடிவடையும்.
இதே போன்ற வழிபாட்டு முறை புதிய ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவே தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத் செபக்கூடத்தில் எழுந்து வாசகங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம் (4 : 16 ‡ 23 காண்க). அதோடு திருத்தூதர் பணிகளில் திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்துப்பின் மக்களுக்கு அறிவுரை கூற புனித பவுலை செபக்கூடத்தலைவர் அழைப்பதைக் காண்கிறோம் (தி ப 13 : 14 ‡ 16).
இத்தகைய யூத மரபு இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கு ஏவுதலாக இருந்தது என்பதில் ஐயமே கிடையாது.
திருஅவையின் தொடக்கக் காலம் :
தொடக்ககால திருஅவையில் முதல் கிறிஸ்தவர்கள் யூதர்களாக இருந்ததால் செபக்கூட வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தனர். அதற்குத் தடை ஏற்பட்டபோது வீடுகளில் அப்பம் பிட்கக் கூடினபோது அதற்குத் தயாரிப்பாக வாசகங்களை வாசித்து இறைவாக்கு வழிபாட்டை நடத்திய பின்பே நற்கருணை விருந்து உண்டனர். இவ்வாறு தங்களுக்குப் பழக்கப்பட்ட சடங்குமுறையைக் கிறிஸ்தவக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.
நாளடைவில், பழைய ஏற்பாட்டு வாசகங்களோடு புனித பவுல் தங்களுக்கும் மற்றும் தங்களுக்கு அருகாமையில் இருந்த வேறு திருஅவைக்கும் எழுதியனுப்பிய மடல்களையும் வாசிக்கத் தொடங்கினர். திருத்தூதர்களின் போதனைகள் எழுத்து வடிவம் பெற்று நற்செய்தி நூல்களாக வந்தபோது அவற்றிலிருந்தும் ஆண்டவருடைய வாழ்க்கை வரலாறும் போதனைகளும் வாசிக்கப்பட்டன.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்பே இப்பழக்கம் நிலையாகிவிட்டது. அக்காலம் முதல் இறைவாக்கு வழிபாடு நற்கருணை வழிபாட்டுடன் இணைந்தே வந்துள்ளது.
இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்கு வார்த்தை வழிபாடு :
தொடக்க கால திருஅவையில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் நாளடைவில் தளர்வுற ஆரம்பித்தன. மக்கள் பேசும் கிரேக்க மொழியில் கொண்டாடப்பட்ட வழிபாடு 4‡ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது. அதனால் இறைவாக்கு வழிபாடும் இலத்தீன் மொழியிலேயே கொண்டாடப்பட்டது. எல்லா மக்களாலும் இறைவாத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் விவிலியத்தின் எல்லா பகுதிகளும் இறைவாக்கு வழிபாட்டில் இடம் பெறவில்லை. சில பகுதிகளே வாசிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இறைவாக்கு வழிபாட்டின் முதல் வாசகம் புதிய ஏற்பாட்டு திருமுகங்களிலிருந்து வாசிக்கப்பட்டது. அதனால் இது ‘நிருபம்’ வாசகம் என்று அழைக்கப்பட்டது. இது பெரும்பாலும் புனித பவுல் எழுதிய திருமுகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு விதிவிலக்காக திருவருகைக் காலத்திலும், தவக்காலத்திலும் மட்டும் பழைய ஏற்பாட்டிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன.
மற்றும் வார நாட்களின் திருப்பலி கொண்டாட்டங்களுக்குத் தனிவாசகம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்பட்ட அதே வாசகங்கள் அடுத்து வந்த வார நாட்களிலும் வாசிக்கப்பட்டன. அதனால் விவிலியத்தின் எல்லா பகுதிகளையும் கேட்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லாமல் போனது.
இத்தகைய தளர்ச்சி திருஅவையின் இடைக்காலங்களில், அதாவது ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டு இரண்டாவது வத்திக்கான் சங்கத்தில் கொணரப்பட்ட மறுமலர்ச்சி வரை நீடித்திருந்தது.
திருவழிபாட்டில் மறுமலர்ச்சி :
இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொண்டுவந்த மறுமலர்ச்சியை நாம் இறைவாக்கு வழிபாட்டிலும் காண முடிகிறது.வழிபாட்டை அந்தந்த மக்களின் மொழிகளில் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டதால், திருவழிபாட்டில் பறைசாற்றப்படும் இறைவார்த்தையை மக்கள் தத்தம் மொழிகளில் கேட்டு புரிந்துக்கொள்ள முடிகிறது.
திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் இடம் பெறும் விவிலிய வாசகங்கள் அதிகமாகவும் பல்வகையாய் வேறுபட்டனவாகவும், பொருத்தமானவையாகவும் (தி. வ 35 / 1 காண்க) இருப்பதால் விவிலியத்தின் கருவூலங்கள் இன்னும் தாராளமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்டு காலத்துக்குள் முக்கியமான பகுதிகள் எல்லாம் மக்களுக்கு வாசிக்கப்படுகின்றன (தி வ 51 காண்க). மேலும் பதிலுரை பாடல்கள் திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால் விவிலிய வார்த்தைகளிலேயே செபிக்க மக்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. மறையுரை, அதாவது பறைசாற்றப்பட்ட வாசகங்களின் விளக்கம், இறைவார்த்தை வழிபாட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டு இடம்பெறுவதால், நற்கருணை உணவை உண்ணும்முன், மக்கள் இறைவாக்கு விருந்தில் அமர்ந்து ஊட்டம் பெற்று ஆன்ம வளம் அடைய முடிகிறது. அந்த வளமையோடு நற்கருணை விருந்தில் பங்குபெற தகுதி கிடைக்கிறது.
முடிவுரை :
இவ்வாறாக இறைமக்கள் விவிலியத்தை மென்மேலும் அறிய புதுப்பிக்கப்பட்டுள்ள வார்த்தை வழிபாடு வாய்ப்பளிக்கின்றது.
வார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறை:
முன்னுரை
திருவழிபாட்டில் கொண்டாடப்படுவது திருப்பலியாக இருந்தாலும் சரி, வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும் சரி, முதலில் வார்த்தை வழிபாடு நடைபெற வேண்டும் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழுத்தமான போதனையாகும். ‘இறைவார்த்தை வழிபாடும்’, ‘அருள் அடையாள வழிபாடும்’ (நற்கருணை வழிபாடும்) இணைபிரியாத வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது ‘இறைவார்த்தை வழிபாடே’ அருள் அடையாள கொண்டாட்டத்தைப் பொருள் உள்ளதாக மாற்றுகிறது. “திருஅவை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறைவார்த்தையையும், கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்க தவறுவதில்லை” என்று இறைவெளிப்பாடு கோட்பாட்டு விளக்கத்தில் (இ.வெ.21) கூறப்பட்டுள்ளது. இறைவார்த்தைக்கும் அருள் அடையாளத்திற்கும் (இங்கு நற்கருணை வழிபாட்டிற்கும்) இடையே உள்ள ஒருங்கிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது.
இனி இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவோம்.
இறைவார்த்தை வழிபாட்டின் நோக்கம்
இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை முழுமையாகவும் நன்றாகவும் அறிந்திருக்க வேண்டும் என்பது முதல் நோக்கமாகும். இதற்கு ஏதுவாக திருப்பலியில் பங்கெடுக்க வரும் மக்களுக்கு விவிலியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு பறைசாற்றப்படுகிறது. அதனால் இறைமக்கள் விவிலியத்தை அறியமுடிகிறது.
அடுத்து பறைசாற்றப்பட்ட இறைவார்த்தை மறையுரையில் விளக்கப்படுவதால் அதை புரிந்து கொள்ளவும் அதனால் அவர்களின் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும் முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் அவர்கள் நற்கருணை விருந்தில் பங்குபெறத் தகுதியாக்கப்படுகிறார்கள். இது இரண்டாவது நோக்கமாகும்.
இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு
விவிலியத்தின் கருவூலங்கள் திறந்துவிடப்பட்டு அதிகமான வாசகங்கள் வேறுபட்டதாகவும், கொண்டாடப்படும் மறைநிகழ்வு அல்லது விழாவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்படி இவ்வார்த்தை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்கும் வார நாள்களின் கொண்டாட்டத்திற்கும் வேறுபட்ட இருவித கால சக்கரங்கள் அமைக்கப்பட்டு பொருத்தமானதும், கோர்வையானதுமான வாசகங்கள் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன.
1. ஞாயிறு வாசகங்கள்
ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் மூன்று ஆண்டு காலவட்டத்தில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டும் நடப்பு ஆண்டுக்கு முன்வரும் திருவருகைக்காலத்திலிருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டாகிய 2016, சென்ற ஆண்டின் இறுதியில் வந்த வருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிட்டது. இது இவ்வாண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை மாலையோடு முடிந்துவிடும்.
நடப்பு ஆண்டு எந்த கால வட்டத்தைச் சார்ந்தது எனத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையைக் கையாளலாம். அதாவது நடைபெறும் ஆண்டை (2016) 3ஆல் வகுத்தால் மீதம் 1 வந்தால் அது முதல் ஆண்டு என்றும், மீதம் 2 வந்தால் அது இரண்டாவது ஆண்டு என்றும், மீதம் 0 வந்தால் அது மூன்றாவது ஆண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாசகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 2016இல் 3ஆல் வகுக்கும்போது மீதம் 0 வருவதால் இந்த நடப்பு ஆண்டில் மூன்றாவது வழிபாட்டு ஆண்டுக்குரிய வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.
ஏன் மூன்று ஆண்டுகால வட்டம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு மட்டும் செல்வதால், அவர்களுக்கு முழு விவிலியத்தின் விருந்து அளிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தவறாமல் மூன்று ஆண்டுகளும் ஞாயிறு திருப்பலியில் பங்குபெற்று வாசகங்களைக் கேட்டால் முழு விவிலியத்தையும் வாசிக்கக் கேட்டதற்கு சமமாகும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாசகங்கள் இடம் பெறுகின்றன. முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர்களின், சிறப்பாக புனித பவுலின் மடல்களில் இருந்தும், நற்செய்தி வாசகம் நான்கு நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். முதல் ஆண்டில் மத்தேயு நற்செய்தியும், இரண்டாவது ஆண்டில் மாற்கு நற்செய்தியும், அதோடு (அது சுருக்கமான நற்செய்தியாக இருப்பதால்) யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியும், அதாவது யோவான் நற்செய்தியின் 6வது அத்தியாயம் 17, 18, 19, 20, 21 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வாசிக்கப்படும். மூன்றாவது ஆண்டு லூக்கா நற்செய்தியும் வாசிக்கப்படும். யோவான் நற்செய்தியில் எஞ்சியிருக்கும் பகுதி தவக்காலத்தின் பிற்பகுதியிலும் பாஸ்காகால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசிக்கப்படுகிறது.
பதிலுரைப் பாடல்:
முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரையாகத் திருப்பாடல் தொடரும். தொடக்க திருஅவையில் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் திருப்பாடல்கள் ஏராளமாகப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் அவற்றிலிருந்து ஒரு சில வசனங்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது படிகீதம் என்று அழைக்கப்பட்டு முதல் வாசகத்திற்குப் பின் மிகக் குறுகியிருந்ததை அறிவோம்.
ஆனால் இப்பொழுது பழைய நடைமுறைக்குத் திரும்பியுள்ளோம். முதல் வாசகத்தின் கருபொருளுக்கு ஏற்றவாறு திருப்பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பலபத்திகளைத் தொடுத்து, பொருத்தமான பல்லவியுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாசகத்திற்கு நாம் கொடுக்கும் பதிலுரையாகவும், அவ்வாசகத்தின்மீது நமது சிந்தனையைக் கிளறிவிடும் தியானப் பாடலாகவும் அமைந்திருக்கிறது. “இது இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும்” என்று உரோமை திருப்பலி நூலின் பொதுப்படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது (றூணூயூனி 61). மேலும் அதே படிப்பினை கூறுவதை நோக்க வேண்டும். “வாசகங்களும், பதிலுரைப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது” (GIRM 57).
பதிலுரைப் பாடல் ‘இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதி’ என்பதாலும், ‘இறைவார்த்தையைக் கொண்டிருப்பதாலும்’, இதை விட்டுவிட்டு வேறு பாடல்களைப் பாடுவது சரியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
காலம் சென்ற அருள்பணியாளர் வில்லவராயர் சொல்வது எல்லோராலும் சிந்திக்க வேண்டியதொன்றாக உள்ளது. “இத்துணை சிறப்பு வாய்ந்த திருப்பாடல்களைப் பதிலுரைப் பாடலாக பாடுவதில் அல்லது படிப்பதில் ஏற்படும் தளர்வு நம் அறியாமையையே காட்டுகிறது. தரப்பட்ட திருப்பாடல்களைவிட அதிக பொருத்தமானப் பாடல்களைக் காண்பது அரிது. மேலும் இறைவாக்கிற்கு ஈடேது? பதிலுரைப் பாடல்களை நன்கு பயன்படுத்த கருத்துக் கொள்வோம், கற்றுக் கொள்வோம்”.
இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டின் திருமடல்களில் இருந்து தேர்வுசெய்யப்படுகிறது. இந்த வாசகங்கள் இறைமக்களை ஒழுக்க நெறிகளில் பயிற்றுவிக்கவும், நடைமுறை வாழ்வுக்கு உகந்தனவாகவும் இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
அல்லேலூயா
இந்த இரண்டாவது வாசகத்திற்குப் பின் பொதுவாக வருவது அல்லேலூயா ஆர்ப்பரிப்பாகும். இதற்கு “ஆண்டவரைப் போற்றுங்கள்” என்பது பொருள். எனவே இது ஓர் ஆர்ப்பரிப்புச் சொல். ஆதலால் இது எப்பொழுதும் பாடப்பட வேண்டும். பாடாவிட்டால் விட்டுவிடுவது நல்லது. “அல்லேலூயா அல்லது நற்செய்திக்கு முன்வரும் வசனம் பாடப்பெறவில்லையயன்றால் அவற்றை விட்டு விடலாம்” (றூணூயூனி 63/இ) என்று திருப்பலி நூல் பொதுப் படிப்பினையில் கூறப்பட்டுள்ளது. அல்லேலூயாவுக்கு பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்பெறும்.
இந்த ஆர்ப்பரிப்பின் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது. இந்த அல்லேலூயா ஆர்ப்பரிப்பு நற்செய்திக்கு முன்னோடியாக வந்து, நற்செய்தியின் சாராம்சத்தை, மையக்கருத்தை, உட்பொருளை சுருக்கமாக எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். இது தகுந்த முறையில் நற்செய்திக்குச் செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறது.
இதற்கு மாறாக நம் விருப்பம்போல் அல்லேலூயா வசனத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. அல்லது மனப்பாடமாகத் தெரிந்த “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று நினைத்தபோதெல்லாம் பாடக்கூடாது. சில நேரங்களில் எந்த வசனமுமின்றி நான்குமுறை தொடர்ந்து “அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ” என்று பாடிவிட்டு, அடுத்து “அல்லேலூயா, இயேசுவைப் போற்றுங்கள்” என்று பாடுவதைப் பார்க்கிறோம். இது சரியானதன்று. ஏனெனில் இதில் அன்றைய நற்செய்தியின் சுருக்கம் இல்லை. மேலும் அல்லேலூயா என்பதற்கு “போற்றுங்கள்” என்பதுதான் பொருள் என்பது புரியாமல் பாடுவதாக உள்ளது.
தவக்காலத்தில் அல்லேலூயா பாடுவது விடப்படும். இதற்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்கு முன் வசனம் பாடப்பெறும்.
தொடர்பாடல்
பாஸ்கா ஞாயிறு, பெந்தகோஸ்து, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் ஆகிய மூன்று பெருவிழா நாள்களிலும், கன்னி மரியாவின் துயரங்கள் அதாவது வியாகுல அன்னை நினைவு நாளிலும் (செப்டம்பர் 15) முதல் வாசகம், அதற்குரிய பதிலுரைப் பாடலுக்குப் பின், அல்லேலூயாவுக்கு முன் தொடர்பாடல் பாட அல்லது வாசிக்க வேண்டும். என்று குறிப்பு இருக்கிறது. இந்த தொடர்பாடல் அன்றைய விழாவின் மகிழ்ச்சி அல்லது துயர உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
பாஸ்கா ஞாயிறு அன்றும், பெந்தகோஸ்து நாளன்றும் இரண்டாவது வாசகத்திற்குப் பின் இத்தொடர்பாடல் கட்டாயமாகப் பாடவோ, வாசிக்கவோ வேண்டும். பாஸ்கா ஞாயிறு எண் கிழமைகளிலும் விரும்பினால் தொடர்பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம். ஆனால் மற்ற இருநாள்களிலும் தொடர்பாடலை விரும்பினால் பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது (GIRM 64).
இயேசுவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவன்று முழுமையாக அல்லது சுருக்கமாக இத்தொடர்பாடலை பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்று கூறுவதோடு, சுருக்கமாக எந்த பத்தியில் (விமிழிஐகுழி) இருந்து எடுக்கலாம் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்தொடர் பாடல் புனித அக்குவினா நகர் தோமாவால் அமைக்கப்பட்டது. இது “சீயோனே உன் மீட்பரைப் புகழ்வாய்” என்று தொடங்குகிறப் பாடலாகும். இது நற்கருணையின் மகத்துவத்தைப் பற்றிய பாடலாகும்.
கன்னி மரியாவின் துயரங்கள் நினைவுநாளில் ஒரு வாசகமும், நற்செய்தி வாசகமும் மட்டுமே உண்டு. எனவே முதல் வாசகத்திற்குப் பின் பதிலுரைப் பாடலுக்கு அடுத்து இத்தொடர்பாடல் இடம்பெறுகிறது. இதுவும் முழுமையாகவோ அல்லது அடையாளக் குறியிலிருந்து சுருக்கமாகவோ பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது. இப்பாடல் சிலுவையடியில் நின்று துயருற்ற அன்னை மரியாவின் வியாகுலங்களைச் சித்தரிப்பதாக உள்ள ஓர் அழகான பாடலாகும்.
வார நாள் வாசகங்கள் :
வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒற்றைபடை ஆண்டை முதல் ஆண்டு என்றும், இரட்டைப்படை ஆண்டை இரண்டாவது ஆண்டு என்றும் கணித்து அதற்கு ஏற்றார் போல் முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டு வாசகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஏன் வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். காரணம், வார நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட எண்ணிக்கையில் அதிகமுள்ளன. அவை 7:1 என்ற விகிதத்தில் இருக்கின்றன. எனவே இரண்டு ஆண்டு கால வட்டத்திலேயே எண்ணிக்கையில் அதிகமான வாசகங்கள் பெற வாய்ப்பு உள்ளது. வார நாள்களில் இரு வாசகங்கள் மட்டுமே (முதல் வாசகம் + நற்செய்தி வாசகம்) இடம் பெறுவது கவனிக்க வேண்டியது. தவறாமல் தினமும் திருப்பலியில் பங்கு பெற்றால் ஒருமுறை விவிலியம் முழுவதையும் கேட்க முடியும் என்பது திருஅவையின் கருத்து.
வாரநாள் வாசகங்களும் திருவழிபாட்டு ஆண்டின் கணிப்பையே பின்பற்றும். உதாரணமாக 2016ஆம் ஆண்டின் வாரநாள் வாசகம் இரட்டைப்படை ஆண்டுக்குரியவையாகும். இது 2015 நவம்பர் இறுதியில் திருவருகை காலத்தின் முதல் வாரம் திங்கள் கிழமையே தொடங்கிவிட்டது. இவ்வாண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு பின்வரும் சனிக்கிழமை வரை இது நீடித்தது.
பெருவிழாவுக்கான வாசகங்கள் :
ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற வாரநாள்களில் பெருவிழாக்கள் வர நேரிட்டால் அன்று ஞாயிற்றுக்கிழமை போல் மூன்று வாசகங்கள் இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமைக்குரிய வாசகங்களின் விதிமுறையே இந்நாளில் பின்பற்றப்படும். அதாவது முதல் வாசகம் பழைய ஏற்Vட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டு மடல்களில் இருந்தும், மூன்றாவது வாசகம் தகுதியான நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்படும். புனித வாரம் தவிர்த்து மற்ற தவக்கால வார நாள்களில் இப்பெருவிழா வர நேரிட்டாலும் அன்று இரண்டாவது வாசகத்திற்குப் பின் அல்லேலூயாவும், அதனுடைய வசனமும் ஆர்ப்பரிக்கப்படும். எடுத்துக்காட்டாக மார்ச் 19 புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் அல்லது மார்ச் 25 ஆண்டவர் பிறப்பின் அறிவிப்பு.
ஞாயிற்றுக் கிழமையில்லாமல் மற்ற நாள்களில் நேரிடக்கூடிய பெருவிழாக்கள் : ஜுன் 24 - புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திரு இருதய ஆண்டவரின் பெருவிழா, புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா, ஜுலை 3 புனித தோமா - திருத்தூதர் (இந்தியா) பெருவிழா, ஆகஸ்ட் 15 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நவம்பர் 1 புனிதர் அனைவர் பெருவிழா, டிசம்பர் 3 புனித ஃப்ரான்சிஸ் சவேரியார் (இந்தியா) பெருவிழா டிசம்பர் 8 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா ஆகியவை.
விழாக்களுக்கான வாசகங்கள் :
இயேசு ஆண்டவர், கன்னி மரியா, புனித திருத்தூதர்கள் மற்றும் சில புனிதர்கள் இவர்களுடைய திருநாள் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றிக்கெல்லாம் முதல் வாசகம், நற்செய்தி வாசகம் என இரண்டு வாசகங்கள் மட்டும் உள்ளன. இதற்கு விதிவிலக்காக பின்வரும் நான்கு விழாக்களுக்கு மூன்று வாசகங்கள் வாசிக்கப்படும். அவை: ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ருவரி 2), ஆண்டவரின் தோற்ற மாற்றம் விழா (ஆகஸ்ட் 6), திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14), இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9).
மற்ற புனிதர்களின் நினைவு நாள் வாசகங்கள் :
பொதுவாக புனிதர்களின் நினைவு திருப்பலியில் கொண்டாடப்படும்போது ஆண்டின் வார நாள்களின் வாசகமே வாசிக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றக்கூடாது. இந்த ஒழுங்குமுறைக்கு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று ஒரு சிலர் முக்கிய நினைவு நாள்களில், எடுத்துக்காட்டாக புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு (ஆகஸ்ட் 29), தொழிலாளர் புனித யோசேப்பு நினைவு (மே 1), கன்னிமரியின் துயரங்கள் (செப்டம்பர் 25), மற்றொன்று ஒரு புனிதருடைய விழா நினைவு நாளாக இருந்தாலும், அவர் ஒரு பங்கின் அல்லது நிறுவனத்தின் பாதுகாவலராக இருந்தாலும் அல்லது ஒரு துறவற சபையை நிறுவியவராக இருந்தாலும் அன்று அவருக்கான சிறப்பு வாசகத்தை வாசிக்கலாம். இந்த நினைவு நாள்களை விழாவாகக் கூட கொண்டாடலாம்.
வாசகங்களை எதிலிருந்து வாசிப்பது?
நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாண்டு கால வட்டம் இரண்டு ஆண்டு கால வட்டங்களுக்கான வாசகங்கள் பலவிதங்களில் மக்கள் கைவசம் வந்து சேர்கின்றன. ஞாயிறு வழிபாடு கையேடு என்று சுமார் நான்கு பக்கங்களில் வெளியிடப்படும் துண்டு பிரசுரங்கள் (Leaflets) ஒருபக்கம்; விவிலிய நாள்குறிப்பேடு (Bible Diary) என்று பல பதிப்பகங்களில் (வைகறை, கிளாரட், நல்லாயன்) ஆகியவற்றிலிருந்து வரும் நாள்குறிப்பேடுகள் மற்றொரு பக்கம். இவற்றையன்றி விவிலிய நூலை கையிலேந்தி வரும் நம்பிக்கையாளர், அருள்பணியாளர் மற்றும் பங்கு ஆலயங்களில் கிடைக்ககூடிய வாசகநூல்.
இவை அனைத்தும் இறைவார்த்தைப் பகுதிகளை முழுமையாகவும், பகுதியாகவும் கொண்டுள்ளன. இவற்றில் வழிபாட்டு கையேடு எனும் துண்டு பிரசுரமும், விவிலிய நாள் குறிப்பேடும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியிடப்படுவன. அதாவது வழிபாட்டை வாழ்வாக்கிட இவற்றை வாசித்து தியானித்தல், வழிபாட்டிற்கு தயாரித்தல் போன்ற நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை வழிபாட்டு நூல்வகையைச் (யிஷ்மிற்rஆஷ்உழியி ணுலிலிவவி) சாராதவை. எனவே வார்த்தை வழிபாட்டில் இறை வார்த்தையைப் பறைசாற்ற உகந்தனவல்ல. ஆதலால் இவற்றிலிருந்து இறைவார்த்தையைப் பறைசாற்றுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். வழிபாட்டில் இவற்றிலிருந்து நற்செய்தியைப் பறைசாற்றும் போது தூபம் காட்டப்படுகிறது. இவை வழிபாடு சாராத காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இறைவார்த்தைக்கு பங்கம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஞாயிறு வழிபாட்டு கையேடு துண்டு பிரசுரத்தில், அடுத்து வரும் ஞாயிறு வழிபாட்டின் போது அதில் உப்பு வைக்கப்படுகிறது. மற்றும் கசக்கி குப்பைத் தொட்டியில் போடப்பட்டதையும் பார்க்க நேரிடுகிறது. அதேபோல் விவிலிய நாள் குறிப்பேடு மக்களை சந்திக்க நிர்ணயிக்கப்படும் நேரத்தைக் குறிக்கவும் (Appointments) மற்றும் சில தகவல்களைக் குறித்து வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவை யாவும் இறைவார்த்தையின் மாண்புக்கு உகந்தவை அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.
அருள்பணிக்கு உதவும் சிற்றேடுகளை எ.கா ., இறைமக்கள் வாசகத்தைத் தயார் செய்யவோ, தனியாகத் தியானிக்கவோ வெளியிடப்படும் கையேடுகளை வாசகப்புத்தகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடாது. இது இறைவாக்கின் மாண்புக்குப் பொருந்துவதாக இல்லை - வாசக நூல் முன்னுரை எண் 37இல் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.
அடுத்து விவிலியத்தை வார்த்தை வழிபாட்டில் வரும் வாசகங்களைப் பறைசாற்றப் பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வியும் வைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக நான் சொல்ல விரும்புவது பின்வருபவை: விவிலியத்தை வழிபாட்டு வாசகங்களைப் பறைசாற்றக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு என்றும் சொல்லக்கூடாது. தவிர்க்க முடியாத இடத்திலும், நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் விவிலியம் வழிபாட்டு நூல் அன்று. வழிபாட்டிற்கெனத் தயார் செய்யப்பட்டுள்ள வாசக நூலே வழிபாட்டு நூல் ஆகும். எனவே வார்த்தை வழிபாட்டில் வாசகங்களைப் பறைசாற்ற வாசக நூலைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
விவிலியத்தின் பகுதிகள் வாசக நூலில் இருந்தாலும், அவை வழிபாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. உதாரணமாக பவுலின் மடல்களில் இருந்து வாசகம் இருக்கும்போது தொடக்கத்தில் சகோதர, சகோதரிகளே என்று கூடி வந்திருக்கும் மக்களை விளித்து வாசிக்கப்படுகிறது. விவிலிய நூலைப் பயன்படுத்தும்போது எல்லாராலும் இது சரியாக செய்யப்பட வாய்ப்பு மிகக் குறையும்.
இதே போன்று நற்செய்தி வாசகத்தின்போது ‘அக்காலத்தில்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு நற்செய்தி வாசகத்தின் தொடக்கச் சொற்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் இருந்து நேராக நற்செய்திப் பகுதி வாசிக்கப்படும் போது முன் தயாரிப்பில்லாமல் எல்லா அருள்பணியாளர்களாலும் இதை சரியாகச் செய்யமுடியாது.
மூன்றாவதாக வார்த்தை வழிபாட்டின் மையக் கருப்பொருளுக்கேற்றவாறு இறை வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாமல், இடை இடையே சொற்றொடர்களும், வாக்கியங்களும் விடுபட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விவிலியத்திலிருந்து வாசிக்கும் போது எல்லாராலும் தடுமாற்றமும் தாமதமும் இன்றி செய்ய இயலாது.
வாசக நூலின் முன்னுரைப் பகுதியின் பின்வரும் குறிப்புகளைக் காண முடிகிறது :
வாசகத்தின் தொடக்கமாக வழக்கமான முன்மொழிச் சொற்கள் இருக்கும்; இவையாவன : அக்காலத்தில், அந்நாள்களில், சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, ஆண்டவர் கூறுவது. இந்த முன்மொழிச் சொல்லுக்குப் பின் வாசகம் தொடர்கிறது. பாடம் தனது பின்னணிச் சூழலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருப்பதால், அதை புரிந்துக் கொள்ளத் தேவையான சில சொற்களைச் சேர்க்கலாம் அல்லது விட்டு விடலாம். பாடம் தொடர்ச்சியான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படலாம் (எண் 124, காண் எண் 77). இந்த காரணங்களுக்காக வார்த்தை வழிபாட்டில் வரும் விவிலியப் பகுதிகளை வாசக நூலில் இருந்தே வாசிப்பது சிறந்தது.
இறுதியாக மற்றும் ஒரு கேள்வி எழுகிறது. வார்த்தை வழிபாட்டில் இறைவார்த்தை வாசகம் பறைசாற்றப்படும் போது, நம்பிக்கையாளர்களும், அருள்பணியாளரும் விவிலியத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிக்கலாமா? என்பது. இத்தகைய பழக்கம் அருங்கொடை இயக்கத்திலிருந்து வந்ததொன்று. இதற்கு ஆதரவு ஒருசில விவிலிய வல்லுநர்களிடமிருந்து வந்துள்ளது. அருளாளர் ஆறாம் சின்னப்பர் ‘நற்செய்தியறிவிப்பு’ (Evangelium Nuntiandi) என்ற ஆவணத்தில் சான்று பகர்தலை வலியுறுத்தும்போது இன்றைய உலகம் கேட்கும் நாகரீகத்தில் இருந்து (Civilization of Hearing) பார்க்கும் நாகரீகத்திற்கு (Civilization of Seeing) கடந்து வந்துள்ளது என்பதைக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் கத்தோலிக்க மக்களிடையே விவிலிய அறிவு மிக சொற்பமாக இருப்பதால் வார்த்தை வழிபாட்டின் நேரத்திலும் அன்றைய வாசகங்களை விவிலியத்தை வைத்துக் கொண்டு பறைசாற்றப்படும்போது பின்பற்றுவது பயனளிக்கும் எனக் கருதுகிறார்கள்.
இது முற்றிலும் சரியல்ல. இறைவார்த்தை வழிபாட்டில் விவிலியப் பகுதிகள் வாசிக்கப்படுகின்றன என்று சொல்வதை விட பறைசாற்றப்படுகின்றன (Proclaimed) என்று சொல்வதே சரியானது. பறைசாற்றப்படுவதை கேட்க வேண்டும் என்பதுதான் சரி. வாசக நூலின் பொது முன்னுரை விளக்கங்களை துருவி ஆராய்வோமானால், அங்கு பறைசாற்றப்படுவது கேட்கப்பட வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (எண்கள் 6, 8, 45, 47, 48, 55, 62 மற்றும் காண்க). “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). என்று புனித பவுல் கூறுவது கவனிக்கத்தக்கது. இறைவார்த்தை பறைசாற்றப்படும்போது இறைவன் (இயேசு) பேசுகிறார். இறைவெளிப்பாடு இங்கு, இப்பொழுது இடம் பெறுகிறது. அதைக் கேட்கத்தான் வேண்டும். வழிபாட்டு வல்லுநர்களும், பல புகழ்பெற்ற விவிலிய வல்லுநர்களும், மக்களோ, அருள்பணியாளர்களோ பறைசாற்றும் வார்த்தையைக் கேட்க வேண்டுமேயயாழிய வாசிக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதைத் தடை செய்ய ஆயருக்குரிய அதிகாரம் (Episcopal Authority) என்னிடமில்லை; ஆனால் இது சரியல்ல என்று சொல்ல வழிபாட்டியியலில் நம்பக நிலை (Liturgical Authority) என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியும்.
வார்த்தை வழிபாட்டில் மற்றுமொரு பழக்கம் நுழைந்துள்ளது. இது மேலே நாம் குறிப்பிட்ட பழக்கத்தோடு நெருங்கியத் தொடர்புடையது. அதாவது இறைவார்த்தையை வாசிக்கும் போது அது எந்த அத்தியாயத்தில் இருக்கிறது. எத்தனை வாக்கியங்களைக் கொண்டது போன்ற தகவல்களைக் கொடுக்கின்ற பழக்கம். திருப்பலிக்கு வரும் மக்கள் விவிலியத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் இறைவார்த்தையைப் பறைசாற்றுபவர், கையில் விவிலியத்தை வைத்திருப்பவர்கள் திறந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருக்கும் விதத்தில் பறைசாற்றப்படும் பகுதியின் அத்தியாயம், வாக்கியங்கள் எல்லாம் பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தேவையற்றது. வழிபாட்டு மரபில் இத்தகைய பழக்கம் என்றுமே இருந்ததில்லை.
அப்படி சொன்னாலும் அது பாதகமில்லை என்பது எமது தனிக்கருத்து. ஆனால் அக்குறிப்பு சரியான முறையில் இருக்க வேண்டும். ‘பிரிவு’, ‘சொற்றொடர்கள்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இச்சொற்களின் உண்மைப் பொருளை அறியாமையால் வந்த பழக்கம். ‘பிரிவு’ என்றால் ‘செக்ன்’ (Section) என்றும், ‘சொற்றொடர்கள்’ என்றால் ‘ப்ரேஸ்’ (sentences) என்றும் பொருள். ஆங்கில-தமிழ் அகராதியை எடுத்து செக்ன், ப்ரேஸ் என்பவற்றின் பொருள் காணவும். இயல் அல்லது அத்தியாயம் என்று சேப்டருக்கும் (உஜுழிஸ்ரீமிer) இறை வசனங்கள் அல்லது வாக்கியங்கள் (விeஐமிeஐஉeவி) என்று சொல்வதே சரியானது.
வாசக நூலில் ஒவ்வொரு வாசகப் பகுதிக்கும் மேல் ஒரு தலைப்பு மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். இது அந்த வாசகத்தின் முக்கியமானக் கருத்தை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கும். வாசகங்களைப் பறைசாற்றுபவர் இந்த தலைப்பையும் வாசிக்கக் கூடாது. இது விளக்கவுரையாளருக்கும், மறையுரைக்கும் பயன்படுவதாக கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை :
இதுவரை மூன்று நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் விளக்கியவற்றை சரியாக பொருள் உணர்ந்து செய்வதாலும், மேலே நாம் சுட்டிக்காட்டிய சில குறைகளையும் தேவையற்ற பழக்கங்களையும் சரிசெய்வதினாலும் வார்த்தை வழிபாடு அழகுள்ளதாக அமையும். அனைவரும் இறைவார்த்தை விருந்தில் நல்லமுறையில் பங்கு பெற்று, தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு நற்கருணை விருந்திலும் பங்கு பெற தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள முடியும்.
வார்த்தை வழிபாட்டில் மூன்று அல்லது இரண்டு வாசகங்கள் பறைசாற்றப்பட்டபின் மறையுரை வழங்கப்படுகிறது. மறையுரை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பது பற்றி இன்னும் சிலரிடையே சரியான புரிதல் கிடையாது. எனவே எனது விளக்கத்திற்குமுன் இதுபற்றிய ஒழுங்குமுறைகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் முறையில் திருஅவையின் படிப்பினைகளைத் தருகிறோம்.
வாசகநூல் பொது முன்னுரை எண் 24
திருவழிபாட்டு ஆண்டின் போக்கில், இறைவார்த்தையின் அடிப்படையில் விசுவாச உண்மைகளுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் மறையுரை இறைவாக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாகும் (தி.வ.எண் 52; திருச்சடங்கு பேராயம், ணூஐமிer நுeஉற்துeஐஷ்உஷ், 26.09.1964, எண் 54 காண்க). சில வேளைகளில் அது கட்டாயம் என்று திருவழிபாடு பற்றிய கொள்ளை விளக்கம் ஆணையிட்டுள்ளது. திருப்பலியில் மறையுரை பெரும்பாலும் திருவழிபாட்டுத் தலைவரால் நிகழ்த்தப்பட வேண்டும். அதன் நோக்கம், அறிவிக்கப்பட்ட இறைவாக்கும் நற்கருணை வழிபாடும் “மீட்பின் வரலாற்றில் அல்லது கிறிஸ்துவின் மறைபொருளில் இடம்பெறும் இறைவனின் வியத்தகு செயல்களைப் பறைசாற்றுவதாகும்” (தி. வ. எண் 35)
மறையுரை வாசிக்கப்பட்ட விவிலிய வாக்கையோ அல்லது வேறு வழிபாட்டு பாடத்தையோ விளக்குவதாய் இருக்கும் ...
மக்கள் கூட்டத்தோடு கொண்டாடப்படும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை இடம்பெற வேண்டும். உரோமை திருப்பலி நூல் பொது போதனை எண் 65
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும். அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊட்டமளிக்க அது தேவை. திருவிவிலிய வாசகங்களிலிருந்தோ, திருப்பலியின் பொதுப் பகுதி அல்லது சிறப்புப் பகுதியிலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடத்தின் சில கூறுகளை விளக்குவதாக மறையுரை அமைய வேண்டும்; கொண்டாடப் பெறும் மறை உண்மையையும் கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார்; அவ்வப்போது சூழ்நிலைகளுக்கேற்பத் திருத்தொண்டரிடம் இப்பணியை ஒப்படைக்கலாம். ஆனால் பொது நிலையினரிடம் இதனை ஒருபோதும் ஒப்படைக்கக் கூடாது. சிறப்பான நிகழ்வுகளில் தக்க காரணத்திற்காக, கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது ஓர் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்தலாம் (எண் 66 / 1)
ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது கட்டாயமாகும்; தகுந்த காரணம் இருந்தாலன்றி, இதை விட்டுவிடக்கூடாது. பிற நாள்களில் குறிப்பாகத் திருவருகைக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது (எண் 66 / 2)
திருவழிபாட்டு கொள்கை விளக்கம் எண் 52
மறையுரையைத் திருவழிபாட்டின் ஒரு பகுதியாக மிகவும் போற்ற வேண்டும். இம்மறையுரை திரு வழிபாட்டு ஆண்டு முழுவதிலும் விவிலியத்திலிருந்து நம்பிக்கையின் மறைபொருளையும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளையும் விளக்குகிறது. அன்றியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் கனமான காரணம் இல்லையயனில் மறையுரையை விட்டுவிடக்கூடாது.
நாம் மேலே மேற்கோளாக குறிப்பிட்ட மூன்று ஆவணங்களிலும் பளிச்சென வெளிப்படும் கருத்துகளாகப் பின்வருபவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும்.
2. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் மறையுரை வழங்குவது கட்டாயமானதாகும்.
3. மற்றும் மக்கள் கூடிவரும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை கொடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
4. அதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று நடத்துபவரே கொடுக்க வேண்டும்.
5. விசுவாச உண்மைகளுக்கும், கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.
6. ஆனால் இது பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
7. அதோடு திருப்பலி வழிபாட்டின் வேறு பாடத்தையும், எடுத்துக்காட்டாக பதிலுரைப்பாடல், மன்றாட்டுக்கள் போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து அமைக்கலாம்.
8. சிறப்புக் காலங்களில் வார நாட்களிலும் மறையுரை பரிந்துரைக்கப்படுகிறது.
9. மேலும் வழிபாட்டில் கொண்டாடப்படும் புனிதர்கள் எவ்வாறு அன்று பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையை வாழ்வியலாக்கி வாழ்ந்தார்கள் என்று எடுத்துரைக்கக் கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.
10. பறைசாற்றப்பட்ட வாசகங்களோடும், கொண்டாடப்படும் மறை நிகழ்வுகளோடும், புனிதரோடும் தொடர்பற்ற சில புண்ணியங்களை, எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவற்றை சில கட்டுக் கதைகளை சொல்லி விளக்குவதாக மறையுரையை அமைக்கக்கூடாது.
11. திருப்பலிக்குக் குழுமி வந்திருக்கும் மக்களின் தேவைகளையும், காலத்தின் அறிகுறிகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும் மறையுரை.
இவற்றையயல்லாம் மனதில் கொள்ளாமல் ஏதோ ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மறையுரையை அவ்வப்போது கதையை மட்டும் மாற்றி சொல்லிக் கொண்டு காலம் ஓட்டினால் அது திருப்பலியில் பங்குபெற வந்திருப்பவர்களின் தேவைகளின் அடிப்படையிலும் இருக்காது, பறைசாற்றப்பட்ட வாசகங்கள் கொண்டிருக்கும் விசுவாச கோட்பாடுகள் அடிப்படையிலும் இருக்காது, கொண்டாடப்படும் மறைநிகழ்ச்சிகள், ஒன்று சொல்லப்படுகின்ற கட்டுக்கதையின் நகைச்சுவையை ரசிப்பதினால் இருக்கலாம். மற்றொன்று தொடர்பற்ற கட்டுக் கதையைக் கேட்டு அதோடு உடன்பாடு இல்லாதபோது நகைப்புக்காகவும் சிரிக்கலாம். இதை உய்த்து அறியாமல், மறையுரையாளர், ‘நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுங்கள்’ என்று சொல்லும் மறையுரையாளர் மக்களுடைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘நான் ரெடிமேடாக வைத்திருக்கும் மறையுரையைத்தான் வழங்குவேன்; கேட்டால் கேளுங்கள், கேட்காவிட்டால் போங்கள்’ என்று சொல்வது பொறுப்பற்ற மனநிலையைத்தான் காட்டுகிறது.
எனவே மறையுரையாளர் நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை மனதில் கொண்டு ஒவ்வொரு நாள் வாசகப் பகுதியை வாசித்து தியானித்து பறைசாற்றப்பெறும் மறை நிகழ்வுகளையும், கோட்பாடுகளையும் மனதில் கொண்டு, மறையுரையைக் கேட்பவர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு மறையுரையைத் தயார் செய்து வழங்க வேண்டும்.
விசுவாச அறிக்கை
தொடக்கச் சடங்கை ‘வார்த்தை வழிபாட்டிற்குத் தயாரிப்பு’ என்பதை போல், விசுவாச அறிக்கை, மன்றாட்டுகளை ‘வார்த்தை வழிபாட்டின் முடிவு’ என்று சொல்லலாம்.
பறைசாற்றப்பட்டு, மறையுரையில் விளக்கப்பெற்ற இறைவார்த்தைக்கு மக்கள் தரும் பதிலே விசுவாச அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த விசுவாச அறிக்கைக்கு இருவாய்ப்பாடுகள் (க்ஷூலிrதுற்யிழிவி) உண்டு. ஒன்று திருத்தூதர்களின் விசுவாச அறிக்கை (புஸ்ரீலிவிமியிeவி உreed), மற்றொன்று நிசேயா விசுவாச அறிக்கை (ஹிஷ்உeழிஐ உreed). முந்தியது குறுகியது, தொன்மையானது; பிந்தியது மிக விரிவானது, இது நிசேயா பொதுசங்கத்தின் பெயரைக் கொண்டது. அதாவது இந்த விரிவான விசுவாச அறிக்கை அச்சங்கத்தில் உருவாக்கப்பட்டு, 4‡ஆம், 5‡ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மற்ற பொது சங்கங்களின் போதனைகளையும், திரிபு கொள்கைகளுக்கு எதிராகவும் மிகத் தெளிவான, நுட்பமான விசுவாச கோட்பாடுகளையும் கொண்டது. இரண்டிலும் இறைவன்மீதும், அவருடைய வார்த்தையான கிறிஸ்து மீதும், தூய ஆவியார் மீதும் மற்றும் இறைவெளிப்பாட்டினால் அறியப்படும் மறை உண்மைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றனர்.
இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குமுன் திருப்பலியில் நிசேயா விசுவாச அறிக்கையே மக்கள் அளிக்கும் பதிலுரைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது இருவித விசுவாச அறிக்கைகளையும் பயன்படுத்தலாம். அந்தோ பரிதாபம்! எப்பொழுதுமே மிகக்குறுகிய திருத்தூதர்களின் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இது தவிர்க்கப்பட வேண்டும். விரிவான நிசேயா விசுவாச அறிக்கையையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது.
இவற்றோடு ‘வானமும் பூமியும்’ என்று தொடங்கும் மற்றொரு விசுவாச அறிக்கை பெரும்பாலும் பாடப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் எது எங்கிருந்து வந்தது? யார் இதற்கு அனுமதியளித்தது? என்று ஒன்றும் புரியவில்லை. இதுவே பெரும்பாலும் பாடப்படும் விசுவாச அறிக்கையாக அமைந்துவிட்டது! இது ஏற்புடையதா? என்று ஆயர் குழுமந்தான் பதில் அளிக்க வேண்டும்.
“மீட்பின் அருள் அடையாளம்” (Sacramentum Redemptionis) என்ற ஆவணத்தில் “திருப்பலியிலும் மற்ற திருவழிபாட்டு கொண்டாட்டங்களிலும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் இல்லாத விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தக்கூடாது” (எண் 69) என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
விசுவாச அறிக்கை ஞாயிற்றுக் கிழமை திருப்பலிகளிலும், பெருவிழாக்கள் திருப்பலிகளிலும் சொல்லப்படும் அல்லது பாடப்படும். ஆனால் விசுவாச அறிக்கை பறைசாற்றப்பட்ட இறைவாசகங்களுக்கும், விளக்கப்பட்ட மறையுரைக்கும் பதிலாக வருவது என்றால், ஏன் எல்லா திருப்பலிகளிலும் விசுவாச அறிக்கை இடம் பெறக்கூடாது என்ற ஒரு கேள்வி எழுகிறது. திருவழிபாட்டு ஒழுங்குமுறையைத் தவிர, இத்தகு வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
பொது மன்றாட்டு
இது ‘நம்பிக்கையாளரின் மன்றாட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது. இது பற்றி பின்வருமாறு திருப்பலி நூலின் பொதுப் போதனையில் வாசிக்கிறோம்:
“பொது மன்றாட்டில் அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டில் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்ட இறைவார்த்தைக்கு ஒருவகையில் பதில் அளிக்கிறார்கள். திருமுழுக்கில் தாங்கள் பெற்ற பொதுக் குருத்துவத் திருப்பணியை நிறைவேற்றி எல்லாருடைய மீட்புக்காவும் இறைவனுக்கு மன்றாட்டுகளை ஒப்புக் கொடுக்கின்றனர். மக்களோடு சேர்ந்து நிகழ்த்தும் திருப்பலிகளின் போது இத்தகைய மன்றாட்டு இடம் பெறுவது விரும்பத்தக்கது. இம்மன்றாட்டுகள் புனித திருஅவைக்காகவும், நம்மை ஆளும் அதிகாரிகளுக்காகவும், பற்பல தேவைகளில் உழல்வோருக்காகவும், மக்கள் எல்லாருக்காகவும், உலக முழுவதின் மீட்புக்காகவும் அமைந்திருக்க வேண்டும்” (எண் 69; வாசக நூல் பொது முன்னுரை எண் 30 ‡ 31 காண்க).
விசுவாச அறிக்கை வழியாக பறைசாற்றப்பட்ட இறைவார்த்தைக்கு பதில் அளித்ததோடு, இப்பொழுது மன்றாட்டுகள் வழியாகவும் பதில் அளிக்கிறார்கள். தங்களது பொதுக் குருத்துவப் பணியைச் செயலாக்கம் செய்யும் நேரங்களில் இதுவும் ஒன்று. மக்கள் கூடிவந்து நிகழ்த்தப்படும் திருப்பலிகளில் எல்லாம் இம்மன்றாட்டுகள் இடம் பெறுவது நல்லது.
இம்மன்றாட்டுகள் திருஅவையின் தேவைக்காகவும், நாட்டு அதிகாரிகளுக்காகவும், அனைத்துலக மீட்புக்காவும், எல்லா வகையான இன்னல்களில் உழல்வோருக்காகவும், கூடிவந்துள்ள நம்பிக்கையாளர்களுக்காகவும் அமைந்திருக்க வேண்டும்.
இந்த மன்றாட்டுகள் கூடிய வரைக்கும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைக்கப்பட வேண்டும். ஐந்து மன்றாட்டுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது, இது நின்று கொண்டிருக்கும் மக்களுக்கு சலிப்பை உண்டாக்கும்.
சில நேரங்களில் மன்றாட்டுகளுக்கு இசையமைத்து பாடுவதைப் பார்க்கிறோம். வரவேற்கத்தக்கது. ஆனால் சில வேளைளில் இசை ஓங்கியிருக்கும்போது வார்த்தைகள் மூழ்கி போய்விடுகின்றன. அதனால் மன்றாட்டுகளே மக்களுக்குப் புரியாமல் போய்விட வாய்ப்புண்டு. பாடும்போது இது நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொது மன்றாட்டுகள் இறைவார்த்தை வழிபாட்டை முடித்து வைக்கும் ஓர் அமைப்புக்கூறு. இதைக் காணிக்கைகளைக் கொண்டுவரும் போது சொல்லப்படுகின்ற விளக்கங்களோடு இணைத்து செபிப்பது பெரும் தவறு. இது தவிர்க்கப்பட வேண்டும். திருப்பலிக்குத் தலைமை தாங்குபவரே வாசக மேடையில் இருந்தோ அல்லது தமக்குரிய இருக்கையிலிருந்தோ முன்னுரை கூறி நம்பிக்கையாளர்களைச் செபிக்க அழைப்பார். இறுதியில் எடுத்துரைக்கப்பட்ட மன்றாட்டுகளை ஏற்றருளும்படி சுருக்கமான செபத்துடன் முடிப்பார்.
முடிவுரை
வார்த்தை வழிபாட்டின் எல்லா அமைப்புக் கூறுகளும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சரியாக அமைக்கப்பட்டு செயலாக்கம் பெற்றால் வழிபாடு பொருளுள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் அமைந்திடும்.
No comments:
Post a Comment