நாள்: ஜனவரி 1
வகை: பெருவிழா
பின்னணி
வானதூதர் மரியாளிடம், “தூய ஆவி உம்மீது வரும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” (லூக்கா 1:35) கூறுகிறார். தூய ஆவியால் ஆட்கொள்ளப் பெற்ற எலிசபெத்து கன்னி மரியாளைப் பார்த்து, “ஆண்டவரின் தாய்” (லூக்கா 1:43) என அழைத்தார். ‘மரியாள் பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்’ (லூக்கா 2:7) என்றும், ‘குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்’ (லூக்கா 2:21) என்றும் எழுதப்பட்டிருப்பது மரியாளின் சிறப்பான தாய்மையைக் காட்டுகிறது. ‘ஞானிகள் வீட்டிற்குள் போய் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்’ (மத்தேயு 2:11) என்ற வார்த்தைகள் மரியாளின் மேன்மையை உறுதி செய்கின்றன.
வரலாறு
“மரியாள் இறைவனின் தாய்” என்று கி.பி.431ல் எபேசு பொதுச்சங்கம் அறிக்கையிட்டதை தொடர்ந்து, 5ஆம் நூற்றாண்டிலேயே ‘இறைவனின் தூய அன்னை’ என்ற விழா சிரியாவில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப் பெற்றதாக அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டு முதல் மரியாளின் உற்பவ விழாவை அந்த நாளில் சிறப்பிக்கும் வழக்கம் தோன்றியதால், இந்த விழா கொண்டாட்டம் நின்று போனது. இதனிடையே, இயேசுவின் விருத்தசேதனத்தையும் திருப்பெயரையும் ஜனவரி 1ந்தேதி விழாவாக சிறப்பிக்கும் வழக்கம் 13ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பிற்காலத்தில், அது கிறிஸ்து பிறப்பின் எண் கிழமை என்ற எளிமையான பெயரை பெற்றது.
இந்நிலையில், 1914 அக்டோபர் 11ந்தேதி ‘கன்னி மரியாவின் தாய்மை’ விழா போர்ச்சுக்கலில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. 1917ல் பாத்திமாவில் காட்சி அளித்த அன்னை மரியாள், இந்த உலகை பாதுகாக்க தாயன்புடன் அறிவுரை வழங்கியதால் இந்த விழா பல இடங்களுக்கு பரவியது. 1931ஆம் ஆண்டு, கன்னி மரியாளின் தாய்மை விழாவை திருத்தந்தை 11ம் பியுஸ் திருச்சபை முழுவதும் கொண்டாட அனுமதி வழங்கினார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல், அந்த திருநாளை ‘இறையன்னை கன்னி மரியாள்’ என்ற பெருவிழாவாக உயர்த்தி ஜனவரி 1ந்தேதி கொண்டாட ஆணையிட்டார்.
No comments:
Post a Comment