மானிட மகனாக இவ்வுலகில் தோன்றிய இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் குறித்து முன்னறிவித்தார். உலக முடிவில் நிகழவிருக்கும் அவரது இந்த வருகைக்காக நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்குமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார்.
"அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்."
போலி இறைவாக்கினர்
“என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர். உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக் கொள்ளுமாறு விண்ணரசைப் பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.
யாராவது உங்களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அரும் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, ‘அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால் நம்பாதீர்கள். ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்கு வரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்.” (மத்தேயு 24:9-14,23-27)
விண் அடையாளங்கள்
“கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” (லூக்கா 21:25-28)
No comments:
Post a Comment