அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

அன்பின் இயல்பு

நகோமியும் அவர்தம் மருமகளான மோவாபியப் பெண் ரூத்தும் பெத்லகேம் வந்தனர்.

ரூத்து நூலிலிருந்து வாசகம் 1: 1,3-6, 14b-16, 22

நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில், நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக்கொண்டு மோவாபு நாட்டிற்குச் சென்றார். அவர் பெயர் எலிமலேக்கு. அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.

அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்துகொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந்தனியராய் விடப்பட்டார்.

நகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படி செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார். அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.

ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், ``இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப் போ'' என்றார்.

அதற்கு ரூத்து, ``உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்'' என்றார். இவ்வாறு, நகோமியும் அவர்தம் மருமகளான மோவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத் திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அன்பின் இயல்பு

நீதித்தலைவர்களின் காலத்தில் எலிமலேக்கு-நகோமி வீட்டில் நடந்த நிகழ்வைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். ரூத்து 1:1, 3-6, 14-16, 22) வாசிக்கின்றோம்.

நாளைய வாசகத்தை வாசிக்கும்போது மூன்று பெயர்களின் அர்த்தங்கள் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன: பெத்லகேம், எலிமேலக்கு, நகோமி.

1. 'அப்பத்தின் வீடு' என்ற 'பெத்லகேமில்' பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. யூதா நாட்டினர் பஞ்சம் பிழைக்க மோவாபு நாட்டிற்கு நகர்கின்றனர்.

2. 'எலிமேலக்கு' என்றால் 'என் கடவுளே அரசன்' என்பது பொருள். அப்படிப் பெயர் கொண்ட ஒருவர் தன் கடவுளை விட்டு, வேற்றினத்து அரசனிடம் தஞ்சம் புகுந்து, 'அரசனே என் கடவுள்' என்று தன் பிரமாணிக்கத்தை திசை திருப்புகின்றான்.

3. 'கடவுள் என் ஆறுதல்' என்ற பொருள் கொள்ளும் 'நகோமி', தன் கணவனை இழந்து, தன் மகன்களை இழந்து தனித்துவிடப்படுகிறாள்.

ஏன் பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்துவிட்டன?

பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்தாலும், புறவினத்துப் பெண் ரூத்து தன் மாமியாரிடம் காட்டும் பிரமாணிக்கத்தால் அவர்களின் வாழ்வில் புது வசந்தம் உருவாகிறது.

ஆம்! ரூத்தும், நகோமியும் எருசலேமிற்குள் நுழையும் நேரம் வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருக்கிறது!

இது, நிறைவின், வளத்தின், செல்வத்தின் அடையாளம். இனி அவர்களுக்குப் பசியும், வெறுமையும், தனிமையும் இருக்கப் போவதில்லை.

இந்த நிலை மாறுவதற்கு என்ன காரணம்?

நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 22:34-40) திருச்சட்ட நூல்களின், இறைவாக்குகளின் அடிப்படை என இரண்டு கட்டளைகளை மேற்கோள்காட்டுகின்றார் இயேசு:

1. 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து!'

2. 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்க அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!'

எலிமலேக்கும் அவரது இனத்தாரும் நீதித்தலைவர்களின் காலத்தில் முதல் கட்டளையை மீறுகிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வில் கடவுளை கொஞ்ச இதயத்தோடும், கொஞ்ச உள்ளத்தோடும், கொஞ்ச மனத்தோடும் அன்பு செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தலைகீழாய்த் தடம் புரள்கின்றது.

ஆனால், இந்தக் கட்டளையே அறிந்திராத ஒரு வேற்றினத்துப் பெண் ரூத்து, கட்டளையின் வரிசையை மாற்றுகிறாள். எப்படி? தன்னை அன்பு செய்வது போல தன் மாமியார் என்னும் அயலாரை அன்பு செய்கிறார். இதற்காக, மாமியாரின் கடவுளையும் 'தன் கடவுளாக', மாமியாரின் மக்களையும் 'தன் மக்களாக' அணைத்துக் கொள்கிறார்.

இதுதான் இயேசு கட்டளையைப் புரட்டிப்போட்ட விதமும்கூட. 'நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்களும் கடவுளை அன்பு செய்யுங்கள்' என்று சொல்லவில்லை அவர். மாறாக, 'நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' (யோவான் 15:12) என்கிறார். ஆக, நாம் நம் அயலாரை அன்பு செய்யத் தொடங்கினாலே, அது நம்மைக் கடவுளை நோக்கி எடுத்துக்கொண்டுவிடுகிறது. அதுதான் அன்பின் இயல்பு.

No comments:

Post a Comment