நாள்: பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு அடுத்த நாள்
வகை: நினைவு
பின்னணி
சிலுவையில் தொங்கிய இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவான் 19:26-27) இந்த நிகழ்வு, இயேசுவின் சீடர்களான கிறிஸ்தவர்களின் தாயாக மரியாள் திகழ்கிறார் என்பதற்கு சான்று பகர்கிறது. மேலும், சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாளோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டனர் (திருத்தூதர் பணிகள் 1:14;2:1-4) என்ற வசனங்கள், திருச்சபை மீதான மரியாளின் தாய்மையை உறுதி செய்கின்றன.
வரலாறு
“நம்பிக்கை கொண்டோரை ஒன்றிணைத்து திருச்சபைக்குள் பிறக்கச் செய்ததால், கிறிஸ்துவின் உறுப்புகளின் தாயாக மரியாள் திகழ்கிறார்” என்று புனித அகுஸ்தீன் கூறினார். அவரது வழியில் திருத்தந்தை முதலாம் லியோ, “இறைமகன் கிறிஸ்துவின் தாயாகிய மரியாள், அவரது திருச்சபை என்ற மறையுடலின் உறுப்புகளுக்கும் தாயாக இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். 1964ல் திருத்தந்தை 6ம் பவுல், மரியாளைத் ‘திருச்சபையின் தாய்’ என்று அறிவித்தார். 1975ஆம் ஆண்டு, மரியாள் ‘திருச்சபையின் தாய்’ என்பதை சிறப்பிக்கும் பொருத்தனை திருப்பலி, ரோமைத் திருப்பலி புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு மறுநாள் சிறப்பிக்கும் வகையில், ‘திருச்சபையின் தாய் மரியாள்’ என்ற திருநாளை திருத்தந்தை பிரான்சிஸ் 2018 பிப்ரவரி 11ந்தேதி ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment