நாள்: மார்ச் 25
வகை: பெருவிழா
பின்னணி
வானதூதர் மரியாளுக்குத் தோன்றி, “அருள்நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். அதற்கு மரியாள் வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம் மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம் மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்றார். பின்னர் மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். (லூக்கா 1:28-38) இந்நிகழ்வே, இந்த விழாவுக்கு அடிப்படையாக உள்ளது.
வரலாறு
கொன்ஸ்டான்டிநோபிள் மறைமுதுவர் புனித புரொக்குலஸ் (-446), தமது மறையுரை ஒன்றில், ஆண்டவரின் திருவருகை விழா குறித்து எடுத்துரைக்கிறார். இதுவே, கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவுக்கு சூட்டப்பட்ட முதல் பெயர். திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் (492-496) காலத்து திருவழிபாட்டு நூலில், இந்த விழா பற்றிய குறிப்பு இருக்கிறது. இந்த விழா 6ஆம் நூற்றாண்டிலும் இதே பெயரிலேயே சிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. 7ஆம் நூற்றாண்டில் மங்கள வார்த்தை விழா என்று பெயர் மாற்றம் பெற்ற இந்த திருநாள், திருத்தந்தை புனித பெரிய கிரகோரி (590-604)யின் திருவழிபாட்டு நூலில் இடம் பெற்றுள்ளது.
656ல் நடைபெற்ற தொலெடோ சங்கம், 692ஆம் ஆண்டு கூடிய துருல்லோ சங்கம் ஆகியவற்றின் விதிகளில் மங்கள வார்த்தை விழா குறித்த பதிவுகள் உள்ளன. 799ல் நடைபெற்ற சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதி குறிப்பிடும் மரியாளின் நான்கு திருநாட்களில், இந்த விழா மார்ச் 25ந்தேதி இடம் பிடித்துள்ளது. 10ஆம் நூற்றாண்டளவில், கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவை கடன் திருநாளாக சிறப்பிக்கும் வழக்கம் உருவானது. 1895 ஏப்ரல் 23ந்தேதி, இந்த திருநாளை முதல் வகுப்பு விழாவாக உயர்த்தி திருவழிபாட்டு பேராயம் ஆணையிட்டது. 1969ல் திருத்தந்தை 6ம் பவுல் சீரமைத்த திருச்சபை நாள்காட்டியில், இந்த திருநாள் பெருவிழாக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment