அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 20, 2017

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\'\' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?\'\' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்\'\' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர் என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்" (மத்தேயு 13:47)

இயேசு தம் சீடராகத் தெரிந்துகொண்டவர்களுள் பலர் மீனவர். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோர் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசுவால் அழைக்கப்பட்டு, அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். சீடர்கள் மீன்பிடித்த இடம் கடல்போல் விரிந்து பரந்த "கெனசரேத்து ஏரி" ஆகும் (லூக்கா 5:1). இதுவே மக்களால் "கலிலேயக் கடல்" என்றும் "திபேரியக் கடல்" என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஏரியில் வலைவீசி மீன்பிடித்தல் கலிலேயாவில் நடந்த முக்கிய தொழிலாகும். இந்தக் கலிலேயப் பகுதியில்தான் இயேசுவின் பணி பெருமளவு நிகழ்ந்தது. கலிலேயக் கடல் என்றழைக்கப்பட்ட அந்த ஏரியின் பரப்பளவு 166 சதுர கிலோமீட்டர்; ஆழம் சுமார் 30 மீட்டர். இந்த ஏரியில் மீன்பிடிக்க வலைவீசும்போது பல மீனவர் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுவர். அவர்கள் வீசிய வலையில் விழுகின்ற மீன்கள் பலவகையாக இருக்கும். சமைத்து உண்பதற்குத் தகுந்த நல்ல மீன்களும் சமையலுக்குப் பயன்படாத மீன்களும் பிற உயிரினங்களும் வலையில் அகப்படும். வலையைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்தபின் மீனவர் நல்ல மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயனற்றவற்றை வெளியே எறிந்துவிடுவர். இந்த நிகழ்ச்சியை இயேசு எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தார். அது இயேசுவின் வாயில் இறையாட்சி பற்றிய ஓர் உவமையாக உருவெடுத்தது. வலையில் அகப்பட்ட நல்ல மீன்களை எடுத்துக்கொண்டு கெட்ட மீன்களை விட்டுவிடுவதுபோல கடவுளாட்சியின் இறுதியிலும் கடவுள் நல்லவர்களைத் தீயோரிடமிருந்து பிரித்துத் தீர்ப்பு வழங்குவார்.

இவ்வுலகில் கடவுளாட்சி படிப்படியாக வளர்கின்ற காலத்தில் வலையில் நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் படுவதுபோலவே கடவுளாட்சியிலும் நல்லவரும் இருப்பர், தீயவரும் இருப்பர். இவர்களை வேறுபடுத்திப் பார்த்து, ஒருசிலரை ஏற்றுப் பிறரை ஒதுக்கிவைப்பது நம் பொறுப்பு அல்ல. கடவுள்தாமே மக்களில் நல்லவர் யார் என்றும் தீயவர் யார் என்றும் இறுதிக்காலத்தில் தீர்ப்பு வழங்குவார். எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் அன்போடு ஏற்று வரவேற்பதே நம் கடமை. தீர்ப்பு வழங்கும் உரிமை கடவுளுக்கே உண்டு. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கான திறமையை நாம் கடவுளிடமிருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டும். நன்மையைத் தேர்ந்துகொண்டு தீமையை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், பிற மனிதரை நல்லவர் தீயவர் எனத் தீர்ப்பிடும் பொறுப்பைக் கடவுளிடமே விட்டுவிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட அருள்தாரும்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment