✠ புனிதர் பொலிகார்ப் ✠ (St. Polycarp)
*மறைசாட்சி, திருச்சபை தந்தையர், ஆயர் : (Martyr, Church Father and Bishop)
*பிறப்பு : கி.பி. 69
*இறப்பு : கி.பி. 156 ஸ்மைரனா, ஆசியா, ரோமப் பேரரசு (Smyrna, Asia, Roman Empire)
*நினைவுத் திருநாள் : பெப்ரவரி 23
*சித்தரிக்கப்படும் வகை : பாலியம் அணிந்தவாறு, ஒரு நூலினை ஏந்தியவாறு
*பாதுகாவல் : காது வலியால் அவதியுறுவோர், இரத்தக்கழிசல்
*குறிப்பிடத்தக்க படைப்புகள் : பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம்
புனிதர் பொலிகார்ப் 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த, "ஸ்மைரனா" (Smyrna) நகரின் ஆயராவார். "பொலிகார்ப்பின் மறைசாட்சியம்" (Martyrdom of Polycarp) என்னும் நூலின்படி, அடுக்கப்பட்ட விரகுகளின்மீது இவரை வைத்து உயிருடன் தீயிட்டு கொளுத்த முயன்றபோது, தீ இவரை தொட தவறியதால், இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஓரியண்டல் மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் மற்றும் லூதரனியம் இவரை புனிதர் என ஏற்கின்றன.
இவரை "திருத்தூதர் யோவானின்" (John the Apostle) சீடர் என "இரனேயுஸ்" (Irenaeus) மற்றும் "டேர்டுல்லியன்" (Tertullian) ஆகியோர் குறிக்கின்றனர். பொலிகார்ப், யோவானின் சீடர் என்றும், யோவானே இவரை ஸ்மைர்னா நகரின் ஆயராக திருப்பொழிவு செய்தார் எனவும் புனிதர் ஜெரோம் (Saint Jerome) கூறியுள்ளார்.
"ரோமின் கிளமெண்ட்" (Clement of Rome) மற்றும் "அந்தியோக்குவின் இஞ்ஞாசியார்" (Ignatius of Antioch) ஆகியோரோடு புனித பொலிகார்ப்பும், அப்போஸ்தலிக்க தந்தையர்களுல் (Apostolic Fathers) மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.
இவரால் எழுதப்பட்டதாக தற்போது உள்ள ஒரே ஆவணம், பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம் (Letter to the Philippians) ஆகும். இதனை முதன் முதலில் பதிவு செய்தவர் இரனேயு (Irenaeus of Lyons) ஆவார்.
பொலிகார்ப், ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலருள் இவரது எழுத்துக்கள் இன்னமும் இருக்கின்றன. இவர், கிறிஸ்தவ திருச்சபைகளை நிறுவுவதில், பெரும் பங்களிப்பாக இருந்த ஒரு முக்கிய சபையின் மூப்பராவார். முக்கிய மரபுகளைக் கொண்டிருந்த இவருடைய சகாப்தம் அனைத்து திருச்சபைகளாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. விவிலிய அறிஞரான "டேவிட் ட்ரோபிக்" (David Trobisch) என்பவரின் கூற்றுப்படி, பொலிகார்ப் புதிய ஏற்பாட்டினை தொகுத்து, திருத்தி, வெளியிட்டவர்களுள் ஒருவராக இருந்திருக்கலாம். இவையனைத்தும், இவரது எழுத்துக்களை பெரும் ஆர்வம் கொண்டவைகளாக ஆக்கின.
No comments:
Post a Comment