திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் (Pope Saint Stephen I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 254 மே 12ஆம் நாளிலிருந்து 257 ஆகத்து 2ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் லூசியஸ். திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் கத்தோலிக்க திருச்சபையின் 23ஆம் திருத்தந்தை ஆவார்.
ஸ்தேவான் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்: Στέφανος; இலத்தீன்: Stephanus) கிரேக்கத்தில் "முடிசூடியவர்" என்று பொருள்படும். கத்தோலிக்க தமிழ் வழக்கில் "முடியப்பர்" என்று வரும்.
பிறப்பு
திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் உரோமையில் பிறந்தவர் என்றாலும், அவருடைய பூர்விகம் கிரேக்க நாடு என்று கருதப்படுகிறது. அவர் முதலில் திருத்தந்தை லூசியசின் கீழ் உயர்திருத்தொண்டராக (Archdeacon) பணியாற்றினார். பின்னர் 254இல் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை முதலாம் லூசியஸ் நாடுகடத்தப்பட்டு இறப்பதற்கு முன் உரோமைத் திருச்சபையை இவரிடம் ஒப்படைத்தார் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) தரும் செய்திக்குத் தகுந்த வரலாற்று அடிப்படை இல்லை என்று அறிஞர் கருதுகின்றனர்.
திருமுழுக்கு அளிப்பது பற்றிய பிரச்சினை
ஆப்பிரிக்கா மற்றும் சிறு ஆசியா பகுதிகளில் ஒரு பிரச்சினை எழுந்தது. அதாவது, கிறித்தவ நம்பிக்கையை முழுமையாக ஏற்காமல் தப்பறைக் கொள்கைகளைத் தழுவியவர்கள் திருமுழுக்கு அளிக்கலாமா என்னும் சர்ச்சை கிளம்பியது. அத்தகையோர் திருமுழுக்கு அளித்தால் அதனால் பயனில்லை என்றும், அவ்வாறு திருமுழுக்கு பெற்றவர்களுக்கு மீண்டும் முறையான விதத்தில் திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்றும் சிலர் வாதாடினர். வட ஆப்பிரிக்க கார்த்தேஜ் நகர் ஆயராக இருந்த இறையியல் வல்லுநரான சிப்பிரியான் (இறப்பு: 258) இக்கருத்தை ஆதரித்தார்.
ஆனால் திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் ஆயர் சிப்பிரியானின் கருத்தை ஏற்கவில்லை. இதனால் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. சில ஆயர்கள் சிப்பிரியானின் கருத்துக்கும் வேறு சிலர் ஸ்தேவானின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், இச்சர்ச்சை நடந்துகொண்டிருக்கும்போதே ஸ்தேவான் 257, ஆகத்து 2ஆம் நாள் உயிர்நீத்தார். சிப்பிரியானும் 258, செப்டம்பர் 14ஆம் நாள் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டார்.
கிறித்தவத்தை மறுதலித்தோரை மீண்டும் ஏற்பது பற்றிய சர்ச்சை
உரோமை மன்னன் டேசியஸ் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஆண்டுகளில் (கிபி 250-251) பல கிறித்தவர்கள் உயிர்தப்புவதற்காகத் தம் சமய நம்பிக்கையைக் கைவிட்டு உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்தினர். இவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. அது திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் காலத்திலும் தொடர்ந்தது.
உரோமை ஆயரின் ஆட்சிப்பீடம் முதன்மை பெறுதல்
பிரான்சு நாட்டு ஆயர்களும், எசுப்பானிய நாட்டு ஆயர்களும் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்தவர்களைத் திருச்சபையில் ஏற்பது பற்றி பிரச்சினை எழுந்தபோது அதற்குத் தீர்வு காண உரோமை ஆயரைத் தான் அணுகினார்கள். சில வேளைகளில் முதலாம் ஸ்தேவான் திருச்சபையின் ஒன்றிப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு கட்சியினருக்கு ஆதரவு கொடுப்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டது. இது குறித்து கார்த்தேஜ் நகர ஆயர் சிப்பிரியான் திருத்தந்தை ஸ்தேவானைக் கடுமையாக விமர்சித்தார்.
“எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா” என்று சீமோன் பேதுருவை நோக்கி இயேசு கூறிய சொற்கள் (காண்க: மத்தேயு 16:18) பேதுருவின் வாரிசாக வருகின்ற உரோமை ஆயருக்கும் பொருந்தும் என்று ஸ்தேவான் கூறினார்.
திருத்தந்தை ஸ்தேவானின் இறப்பு
257ஆம் ஆண்டு உரோமை மன்னர் வலேரியன், கிறித்தவர்கள் தம் மதத்தை வெளிப்படையாகக் கடைப்பிடிப்பதைத் தடைசெய்து, அவர்கள் உரோமை தெய்வங்களை வணங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அவ்வமயம் ஸ்தேவான் மறைச்சாட்சியாக இறந்தார் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) கூறுகிறது. ஆனால், அவர் இயல்பாக இறந்தார் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. அவருடைய உடல் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
திருநாள்
திருத்தந்தை முதலாம் ஸ்தேவானின் திருவிழா ஆகத்து 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
No comments:
Post a Comment