மக்கள் தரும் மதிப்பு
பரிசேயர்கள் எப்போதுமே தாங்கள்
முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும்
தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும், தங்களை
மற்றவர்கள் உயர்வாக நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அதனுடைய வெளிப்பாடு
தான், தொழுகைக்கூடங்களில் அவர்கள் முதன்மையான இடங்களை
விரும்ப வைத்தது. முன்வரிசையில் உட்கார்ந்தால், கடவுளின்
வார்த்தையை நன்றாகக் கேட்க முடியும், தகுதியான
முறையில், பக்தியான முறையில் பங்கேற்க முடியும்
என்பதற்காக அல்ல, மாறாக, மற்றவர்கள்
பார்க்கும் வண்ணம், பக்தியாக இருப்பது போல நடிக்க முடியும்
என்பதற்காககத்தான்.
அதேபோல, அவர்கள்,
மக்கள் கூடக்கூடிய இடங்களில் ”ராபி” என்று அழைக்கப்படுவதை
விரும்பினார்கள். இது ஒரு குழந்தை பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையைவிட
அதிகமானது. ஏனென்றால், பெற்றோர் இந்த உலக வாழ்க்கைக்கான
உடலைக்கொடுத்து இருக்கிறார்கள். போதகர்களோ, முடிவில்லாத
வாழ்விற்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதால். எனவே, பெற்றோரைவிட,
மதிக்கப்பட வேண்டியவர்கள், போதகர்களே என்ற
கருத்து மக்கள் மனதில் இருந்த காரணத்தினால் தான். அவர்கள் ”தந்தை” என்றும்
அழைக்கப்பட விரும்பினார்கள். காரணம், தந்தை என்பது உயர்ந்த
இடத்தைக்குறிக்கும் சொல். இஸ்ரயேல் மக்களின் தலைவர்களை, வழிநடத்தியவர்களைத்
”தந்தை” என்ற உரிமையோடு மக்கள் அழைத்தனர். எலிசா இறைவாக்கினர், எலியாவை தந்தை என்று அழைத்தது போல (2அரசர் 2: 12).
தங்களின் மதிப்பிற்காக, மரியாதைக்காக எதையும் செய்யத்தயாராக இருந்த பரிசேயர்களைப் போல நமது
வாழ்வு அமைந்துவிடக்கூடாது. மதிப்பும், மரியாதையும்
நாமாக விரும்பிக்கேட்டு வருவது அல்ல. நாம் வாழ்கிற வாழ்வைப்பார்த்து, அதுவாக நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் உண்மையான மதிப்பும்,
மரியாதையும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment