“இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது” (மத்தேயு 1:18) என நற்செய்திகள் கூறினாலும், அது குறித்த முழு விவரம் அங்கில்லை. கன்னி மரியாவின் திருமண ஒப்பந்தம் குறித்த தகவல்களை, கி.பி. 150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’, தச்சரான யோசேப்பு ஆகிய திருமுறைப் புறநூல்களில் இருந்து அறிந்து கொள்கிறோம். திருச்சபையின் புனிதர்களும் இது பற்றிய போதனைகளை வழங்கியுள்ளனர்.
செக்கரியா வீட்டில்
மரியா எருசலேம் கோவிலில் அர்ப்பணம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே, அவளது தந்தை யோவாக்கிம் மரணம் அடைந்தார். அதை கடவுளின் விருப்பமாக ஏற்றுக்கொண்ட அன்னா, கடவுளின் கரம் மரியாவோடு இருக்கவும், அவளது தூய வாழ்வுக்காகவும் தொடர்ந்து மன்றாடி வந்தார். மேலும் அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று, மரியாவை சந்தித்து உரையாடினார். மரியாவின் இறைப்பற்றும், ஞானமும் அன்னாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இறைவனின் மீட்புத் திட்டத்துக்கு மரியா துணை நிற்பாள் என்ற உள்ளுணர்வு அன்னாவுக்கு ஏற்பட்டது.
மரியாவுக்கு பன்னிரண்டு வயதானபோது, முதுமை காரணமாக அன்னாவின் உடல் நலம் குன்றியது. அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அன்னாவின் இறுதிக்காலம் நெருங்குவதையும், மரியா ஆண்டவரின் தாயாகப் போவதையும் அறிவித்தார். அன்னா மரணப் படுக்கையில் இருந்தபோது, தலைமைக் குரு செக்கரியாவிடம் மரியாவை ஒப்படைத்து, தாவீதுகுல இளைஞர் ஒருவருக்கு அவளைத் திருமணம் முடித்து வைக்குமாறு கூறினார். சில நாட்களில் அன்னா இறப்பைத் தழுவியதால், மரியா செக்கரியாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தாள்.
திருமண ஒப்பந்தம்
ஓராண்டுக்கு பிறகு, அபியத்தார் என்ற குரு தம் மகனுக்கு மரியாவை திருமணம் செய்துவைக்க விரும்பி, செக்கரியாவை சந்தித்தார். இதனையடுத்து, கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மரியாவின் திருமணத்தை நடத்த செக்கரியா தலைமையில் குருக்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாவை மணக்க விரும்பும் தாவீதுகுல இளைஞர்கள் எருசலேம் கோவிலில் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நாசரேத் ஊரில் வசித்து வந்த யோசேப்பு என்ற தாவீதுகுலத் தச்சரும் நிகழ்ந்ததை வேடிக்கைப்பார்க்க கோவிலுக்குள் சென்றார். அப்போது வெளியே வந்த தலைமைக் குரு செக்கரியா, மற்ற இளைஞர்களின் கோல்களுடன் யோசேப்பின் கோலையும் வாங்கிச் சென்றார்.
செக்கரியா அந்தக் கோல்களுடன் கோவிலின் தூயகத்துக்குள் நுழைந்து, ஆண்டவரின் திருவுளம் வெளிப்பட மன்றாடினார். சிறிது நேரம் கழித்து தூயகத்தில் இருந்து வெளியே வந்த அவர், தாம் வாங்கிச் சென்ற கோல்களை அவற்றிற்குரிய இளைஞர்களிடம் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் அவர்களிடம், ஆண்டவர் யாருக்கு அடையாளம் காட்டுகிறாரோ அவரே மரியாவின் கணவராக முடியும் என அறிவித்தார். அனைவரும் முழந்தாளிட்டு ஆண்டவரிடம் மன்றாடினர். அப்போது அங்கே பறந்து வந்த வெண்புறா ஒன்று யோசேப்பின் தலைமீது அமர்ந்தது. அவரது கையில் இருந்த கோலில் லீலி மலர்கள் மலர்ந்து மணம் வீசின.
மரியாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு தலைமைக் குரு செக்கரியா கூறியதும், யோசேப்பின் மனம் கலங்கியது. இல்லற வாழ்வில் நாட்டமின்றி இருந்த அவர், தமது வாழ்வு முழுவதையும் கடவுளுக்கே அர்ப்பணிக்க விரும்பியதை எடுத்துரைத்தார். இருப்பினும், நிகழ்ந்த அடையாளங்கள் கடவுளின் திருவுளம் என்பதைச் சுட்டிக்காட்டி தலைமைக் குரு செக்கரியா வழங்கிய அறிவுரையை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, மரியாவைத் திருமணம் செய்யவும் ஒப்புதல் அளித்தார். தகவலறிந்து எருசலேம் வந்த உறவினர்கள் முன்னிலையில், மரியாவுக்கும் யோசேப்புக்கும் செக்கரியா மண ஒப்பந்தம் செய்து வைத்தார்.
No comments:
Post a Comment