தலைவனும், பணியாளரும்
லூக்கா 17 : 5..10
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”
(பழைய மொழிபெயர்ப்பு)
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
சீடர்கள் இயேசுவிடம் வந்து “எங்களது விசுவாசத்தை அதிகப்படுத்தும்” என கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு நேரடியாக ஒரு பதிலைச் சொல்லாமல் ஒரு உவமையைச் சொல்கிறார். அதற்கு முன் விசுவாசத்தின் வலிமையை ஒரு வசனத்தில் விளக்குகிறார்.
கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும், நிலத்தில் நிற்கும் மரத்தை வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில் என சொன்னால் அது கீழ்ப்படியும் என்கிறார் இயேசு. சற்றும் சாத்தியமில்லாதது போலத் தோன்றும் இது விசுவாசத்தினால் சாத்தியம் என்கிறார் இயேசு.
உலகப் பாவத்தில் நிலைத்திருக்கும் மனிதன், அப்படியே பிடுங்கப்பட்டு திருமுழுக்கு எனும் நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அங்கே வேரூன்றி வளர்வான். கனிகொடுப்பான் எனும் ஆன்மீக விளக்கமாகவும் இதைக் கொள்ளலாம்.
அதன்பின் இயேசு இந்த தலைவர், பணியாளர் உவமையைச் சொல்கிறார். ஒரு பணியாளன் வெளியே கடுமையான, உடல் உழைப்பைச் செலுத்தி விட்டு வந்தாலும் வீட்டில் தலைவன் இருந்தால் அவனுக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும். அதை விட்டு விட்டு பிரதிபலன் எதிர்பாக்கக் கூடாது என்கிறார்.
இந்த உவமை இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.
விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் செய்யவேண்டியது ஒன்று தான்.
எப்போதும் இறைவனுக்குப் பணிசெய்யும் மனநிலையில் இருப்பது. தனக்கென எந்த விருப்பு வெறுப்பையும் வைக்காமல் எல்லாவற்றையும் இறைவனில் சமர்ப்பித்து அவருக்காகவே வாழ்தல். அவரிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்து வாழ்தலல்ல. முழுமையாய் இறையில் சரணடைந்து வாழ்தல்.
பணிசெய்து வருகிறான் பணியாளன். வீட்டில் தலைவர் இருக்கிறார். உடனே மனமகிழ்ச்சியோடு, இடையைக் கட்டிக்கொண்டு, அதாவது பணியாளனுக்குரிய உடையோடு, பணி செய்கிறார். அதில் மகிழ்ச்சியடைகிறார். எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இப்படிப்பட்ட எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற இறை அர்ப்பணிப்பு, விசுவாசத்தை அதிகரிக்கும். அல்லது விசுவாசம் அதிகரிப்பதன் வெளிப்பாடாய் இந்த அர்ப்பணிப்பு நடக்கும் என்பது ஒரு செய்தி.
இரண்டாவதாக, ஒரு பணியாளன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உவமையாகவும் இது இருக்கிறது.
விசுவாசம் வல்ல செயல்களைச் செய்யும். ஆனால் அந்த செயல்களினால் எந்த விதமான கர்வமும் பணியாளனின் மனதில் நுழைந்து விடக் கூடாது. கர்வத்தை அனுமதிக்காமல், இடையில் கட்டிக் கொண்டு பணி செய்கின்ற மனநிலையோடே எப்போதும் இருக்க வேண்டும்.
“எல்லா” பணிகளையும் செய்து முடித்த பின்பும் கூட, “என் கடமையைத் தான் செய்தேன்” என பணிவுடன் சொல்லும் மனநிலையே பணியாளனின் மனநிலை. அந்த பணியை மகிழ்வுடனும், அர்ப்பணிப்புடனும் செய்வதே உண்மையான பணியாளனின் அடையாளம்.
அத்தகைய தன்மை பணியாளர்களிடம் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு.
“தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என லூக்கா 12:37 ல் இயேசு சொல்கிறார்.
அதாவது, அர்ப்பணிப்புடன் பணிசெய்கின்ற ஊழியர்களை இயேசு அங்கீகரிக்கிறார். அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்குகிறார். ஆனால் “இதைச் செய்ததால் எனக்கு இது கிடைக்க வேண்டும்” என பிரதிபலன் கேட்கும் மனநிலை இருப்பவர்களை அவர் விட்டு விடுகிறார். எதையும் எதிர்பாராமல் அன்பின் வெளிப்பாடாய் பணி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
இந்த உவமை சொல்லும் அடிநாதமான இன்னொரு விஷயம், மீட்பு என்பது செயல்களின் அடிப்படையில் கிடைப்பதல்ல. இறைவனில் சரணடைதலில் கிடைப்பது மட்டுமே எனும் உண்மை !!!
மோசேயின் வாழ்க்கையில் அவர் இந்த மனநிலையில் இருந்தார் என்பதைப் பார்க்க முடியும். இறைவனின் துணையுடன் வல்ல செயல்களைச் செய்தவர் அவர். இஸ்ரயேலரின் மீட்பின் பயணத்தில் மோசேயைத் தவிர்த்து விட்டு எதையும் பார்க்கவே முடியாது. ஆனால் கடவுள் அவரிடம், “நீ கானானுக்குள் நுழைய முடியாது” என சொன்னபோது எதுவும் மறுத்துப் பேசவில்லை.
“எனது பணியை செய்தேன். பயனற்ற ஊழியன் நான்” எனும் மனநிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அத்தனை நீண்ட நெடிய ஆண்டுகள் துயரத்தின் பாதையில் கடந்து வந்தாலும் தனக்கு ஒரு ஆசுவாசமான முடிவு வேண்டும் என அவர் வாதிடவில்லை. அவருடைய வாழ்க்கை இதன் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.
இந்த சிந்தனைகளை, இந்த உவமையிலிருந்து பெற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment