அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள்!
1. மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் பற்றிய இயேசுவின் பார்வை எப்படி இருந்தது என்பதற்கு மத்தேயு 5: 17 – 20 நற்செய்தி வாசகமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. "அவர்கள்
மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் சொல்வதையெல்லாம் கடைப்பிடித்து
வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்" என்பதுதான்
இயேசுவின் அறிவுரை. இதன்மூலம் பரிசேயர், மறைநூல்
அறிஞருடைய அதிகாரத்தை, சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை
இயேசு அங்கீகரிக்கின்றார், ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் இடறலாகவும், முரண்
சான்றாகவும் அமைவதையும் கவனமுடன் சுட்டிக்காட்டுகின்றார். அவர்களைப் போல நமது
வாழ்வும், பணிகளும் அமைந்துவிடக்கூடாது என்று
எச்சரிக்கிறார்.
நமது வாழ்வையும், பணிகளையும் நாமே ஆய்வு செய்து நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்
என்று அடையாளம் காண்போமா? நமது வாழ்வு பிறருக்கு
எடுத்துக்காட்டாக அமைந்து, "இவர்களைப் போல் வாழுங்கள்" எனச்
சொல்லும்படி அமைந்திருக்கிறதா? அல்லது பரிசேயர்களைப்போல,
"இவர்களைப் போல் வாழாதீர்கள்" என இயேசு
சொல்வதுபோல் அமைந்திருக்கிறதா? சிந்திப்போம்.
மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே,
உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, பரிசேய மனநிலையையும், செயல்பாடுகளையும் களைந்து, நேர்மையாக, முரண்பாடின்றி வாழும் வரத்தை
எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி,
உமக்கே மாட்சி, ஆமென்.
2. மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் இயேசு கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார்.
ஆனால், அவர்களைப் பற்றிய இயேசுவின் மிகப் பெரிய
திறனாய்வு, தீர்ப்பு இதுவாகத்தான்; இருக்கவேண்டும்; அவர்கள் கூறுவதுபோல் நடந்து வாருங்கள்.
ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். பல
பரிசேயர்களும் இதைக் கேட்டு மிகவும் அவமானம் அடைந்திருப்பார்கள்.
நம்முடைய வாழ்வையும் இந்தப் பார்வையில்
கொஞ்சம் அலசினால் நல்லது. யாராவது நம்மைப் பற்றி இளையோரிடம் இந்த அறிவுரையைக்
கொடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? நம்முடைய வாழ்வு
பிறருக்க எடுத்துக்காட்டானதாக இருக்க வேண்டுமேயொழிய, எதிர்சாட்சியாக
இருக்கக் கூடாது. எனவே, நம்முடைய அறிவு, திறமைகள்,
ஆளுமை, பேச்சாற்றல் ... போன்ற பல இருந்தும்
நம்மைப் பற்றி இத்தகைய ஒரு திறனாய்வை
பிறர் முன் வைத்தால், அது நமக்கு மிகப் பெரிய ஓர் அவமானம்.
எனவே, நம்
வாழ்வைப் பற்றி, நம் நடத்தையைப் பற்றிக்
கவனமாயிருப்போம். முடிந்தால், இவரைப் போல வாழுங்கள் என்று பிறர்
நம்மைப் பற்றிச் சொல்லும் வண்ணம் நடப்போம். முடியாவிட்டால், இவர்
செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று பிறர் சொல்லாத வண்ணமாவது நடக்க அக்கறை கொள்வோம்.
மன்றாடுவோம்; இப்படித்தான்
வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய இயேசுவே, இன்றைய
நாளில் உமது பேரன்புக்காக நன்றி கூறுகிறேன். இறiவா,
என் வாழ்வையும், நடத்தையையும் ஆசிர்வதியும். பிறருக்கு
இடறல் இல்லாத, முரண்பாடுகள் இல்லாத நேர்மையான வாழ்வு
வாழச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருட்தந்தை குமார்ராஜா
No comments:
Post a Comment